Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 367
- Reaction score
- 564
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் -3
சில வருடங்களுக்கு பிறகு தயக்கத்துடன் தான் சொந்த ஊருக்கு கிளம்பினாள் அன்னக்கொடி.இன்னும் இரண்டு நாட்களில் அவர்களின் புது வீட்டுக்கு பால் காய்ச்சும் விழா.பாட்டியும் கூட வருகிறார்.மீனாவும் கேசவனும் கூட லீவு போட்டு அவளுடன் கிளம்பிவிட்டார்கள்.
விமானத்தில் போவது தான் வசதியாக இருக்கும் என்று அதை தான் தேர்தெடுத்தார்கள் எல்லோரும்.பெங்களூரில் இருந்து சேலத்துக்கு ஒரு மணி நேர விமான பயணம்.பாட்டிக்கும் அது தான் சுலபமான வழியாக இருந்தது. பஸ்ஸோ, ரயிலோ என்றால் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் பாட்டியால் உட்கார்ந்து வருவது சிரமம்.
இதோ வாடகைக் காரில் நால்வரும் விமான நிலையம் வந்து விட்டார்கள்.மொத்தமாக எண்பது பேர் உட்கார்ந்து போக கூடிய சிறிய ரக விமானம் அது.பாட்டியும் கேசவனும் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள மீனாவும் அன்னக்கொடியும் மறுகரையில் உட்கார்ந்து கொண்டார்கள்.அன்னக்கொடிக்கு பக்கத்தில் ஜன்னல் ஓரம் ஒரு இருக்கை காலியாக இருந்தது.
“யார் வர போறார்களோ தெரியல.குடுத்து வச்சவன் .ஜன்னல் சீட்டு கிடைச்சிருக்கு பாருடி….”என்றாள் மீனா .
“விடு மீனா யாரை இருந்தா நமக்கென்ன…?பேசாம உட்காருடி ப்ளீஸ்….” தோழியை முறைத்தாள் அன்னம்.
“எக்ஸ்க்யூஸ் மீ….” என்று சொல்லிக்கொண்டு அங்கு வந்த வரதராஜன்
அன்னக்கொடியை தொட்டும் தொடாமலும் கடந்து போய் ஜன்னல் ஓர இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டான் .
அவன் குரல் மட்டுமின்றி பட்டும் படாமல் தன்னை தொட்டு சென்றவனை கண்டு அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தாள் அன்னக்கொடி.
‘எப்படி சரியாக இந்த சீட்டில் வந்து உட்கார்ந்து இருக்கிறான் ராஸ்கல்…..’ என்ற தடுமாற்றம் அவளுக்கு.
வரதராஜனை கண்டு மீனாவும் கேசவனும் ஒருவரை ஒருவர் அர்த்தம் பொதிய பார்த்துக்கொண்டார்கள்.
“பாட்டி நல்லா இருக்கீங்களா….? என்று மறு கரையில் இருந்த பாட்டியை எட்டிப் பார்த்து கேட்டான் ராஜன்.
“ நான் நல்லா இருக்கேன்….. நீ யாருப்பா எனக்கு சரியா தெரியல….”என்று பதில் சொன்னார் அவர்.
“ என்ன பாட்டி என்னை தெரியலையா…? நான் தான் வரதராஜன்….”
“அப்படியா….?அந்த பேர்ல யாரையும் எனக்கு தெரியாதுப்பா….”சட்டென்று பதில் சொன்ன பாட்டி முகத்தை திருப்பிக் கொண்டார் .
பாட்டியின் பதிலை கேட்டு சத்தமாக என்று சிரித்து வைத்தான் கேசவன்.
“என்னடா சிரிப்பு? என்று அவனை முறைத்தான் ராஜன்.
“ என்ன பாட்டி என்னை தெரியாதா….? நான்தான் நவநீதத்தோட ரெண்டாவது பையன்.உங்க பேத்தி அன்னக்கொடியோட…..” என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்தி சிரித்தவனை முறைத்தாள் அன்னக்கொடி.
“ ஓகோ நவநீதம் பையனாப்பா நீ?என்று சொன்ன பாட்டியின் குரலில் என்ன இருந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை .
நண்பனுடன் சேர்ந்து புது அலுவலகம் திறப்பது சம்பந்தமான மீட்டிங்கை முடித்துவிட்டு இன்று தான் ஊருக்கு திரும்புகிறான் அவன்.
தன் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தவனைக் கண்டதும் உடல் விறைத்து இறுகி போனாள் அன்னக்கொடி.
விமானம் புறப்பட இருபது நிமிடங்கள் இருக்கவும் மீனாவின் கையை சுரண்டினாள் அன்னம்.
“அடி மீனா இந்தப் பக்கம் வந்துடுறியா? என்று அவள் கேட்பது தப்பாமல் ராஜனின் காதில் விழுந்து வைத்தது.
“ஹாய் மீனா நல்லா இருக்கியா?என்று அவளிடம் பேச்சு கொடுத்தான் ராஜன்.
“ஆமாங்க ரொம்ப நல்லா இருக்கேன்….” பதில் சொன்ன தோழியை முறைத்தாள் அன்னக்கொடி.
இந்த பேச்சில் அன்னம் இடம் மாற கேட்டிருந்தாள் என்பதை மறந்து போய் அமர்ந்திருந்தாள் மீனா.
“இந்த பக்கம் கொஞ்சம் ஹீட்டா இருக்கு மீனா ….”என்று அன்னக் கொடியை காட்டி சொன்னவன் பார்வை முழுவதும் அவள் முகத்தில் தான் இருந்தது .
மனதுக்கு பிடித்தவள் அருகில் ஒரு மணி நேரம் கழிய போகிறது என்ற மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தான் வரதராஜன்.
ஒரு மணி நேரம் இந்த அவஸ்தையோடு கழிக்க வேண்டுமா என்று தடுமாறிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் அன்னக்கொடி.
சட்டென்று சில நொடிகளில் கேசவன் என்ன நினைத்தானோ தெரியாது
எழுந்து அன்னக்கொடி அருகில் வந்தான்.
“அன்னம் நீ பாட்டிக்கு பக்கத்தில உக்காந்துக்கோ.நான் இங்க இருக்கேன்….” என்று சொன்னான்.
இதுதான் சமயம் என்று சட்டென்று எழுந்து போய் பாட்டிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள் அன்னம்.
தனக்கு அருகில் உட்கார்ந்த கேசவனே முறைத்து வைத்தான் ராஜன்.
"கோச்சுக்காதீங்கண்ணா…. உங்கள பாத்ததும் அன்னம் திடீர்ன்னு மயக்கம் போட்டுட்டா என்ன பண்ண…. அதுதான்…” தயக்கமாக சொன்னான் கேசவன்.
“ அவள் மயக்கம் போட போறேன்னு உன்கிட்ட சொன்னாளா டா? கோபமாக வந்தது ராஜனின் குரல்.
“இத்தனை வருஷம் கழிச்சு உங்கள பாத்தா அவளுக்கு அதிர்ச்சியா இருக்கும் தானே…..”
“ஏன்டா என்னை பார்த்து அவளுக்கு ஹாப்பியா இருக்கும் என்று உங்களுக்கெல்லாம் தோணாதாடா என்ன?
“அது எனக்கு தெரியாது…..அப்படி ஹாப்பியா பீல் பண்றவ எதுக்கு பாட்டிய திரும்பி திரும்பி பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கப் போறா? விடாமல் சொன்னான் கேசவன்.
“ எனக்கு வில்லனே நீ தான் போடா…” சலிப்போடு வந்தது ராஜன் குரல்.
‘ஏதோ பேசிக் கொள்கிறார்கள்’ என்று நினைத்தபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள் அன்னம்.மனதில் பல நினைவுகள் வந்து அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
“அது இல்ல அண்ணா…. இத்தனை வருஷத்துக்கு பிறகு இன்னைக்கு தான் ஊருக்கு போறவளை டென்ஷன் பண்ண தான் இந்த பிளேட்டில் ஏறி வந்தீங்களா நீங்க….? என்று ராஜனிடம் சண்டைக்கு போனாள் மீனா.
“பார்றா…. புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிடிச்சி போல….?என்றான் ராஜன்.
பாட்டியின் தோளில் தலையை சாய்த்துக் கொண்ட அன்னக்கொடியின் கண்கள் கலங்கி இருப்பதை சரியாக கண்டு கொண்டாள் மீனா.
“பாருங்க…கண் கலங்கி போய் உக்காந்திருக்கா. அவளை அழ வைக்க தான் இன்னைக்கு இங்க வந்தீங்களா நீங்க? ஆமா எப்ப ஊருக்கு வந்தீங்க?நீங்க அவுஸ்ரேலியாவில் தானே இருந்தீங்க….?
“நான் வந்து ஒரு வாரம் ஆச்சு மீனா…”பதில் சொல்லி கொண்டு அன்னத்தை தான் பார்த்து வைத்தான்.
“சரி எப்ப திரும்ப கிளம்பி அவுஸ்ரேலியா போறீங்க? என்று விடாமல் கேட்டான் கேசவன்.
“ஏன்டா….இனி திரும்பி வெளிநாடெல்லாம் போகல. இனி ஆயுசுக்கும் இங்கதான்….” என்று அன்னக்கொடியை பார்த்து சத்தமாக சொன்னான்.
அவன் சொன்னது தப்பாமல் அன்னத்தை காதில் விழுந்து விட்டது.
‘என்ன சொல்லுகிறான் இவன்? வெளிநாட்டுக்கு போகலையாமா…? என்று யோசனை கொண்டாள் அன்னக்கொடி.
“ என்ன சொல்றீங்க அண்ணா…? இங்கே நான் தங்க போறீங்களா….?ஏன் உங்க அவுஸ்ரேலியா வேலையை விட்டுட்டீங்களா?
“ வேலையை விடல கேசவா…. நானும் என் பெங்களூர் நண்பனும் சேர்ந்து கோயம்புத்தூரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்க இருக்கோம்.இன்னொரு பாட்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து எல்லாம் பாத்துப்பான்….”
“ஏன் வெளிநாட்டுக்கு போனா அங்கேயே இருக்க வேண்டியதுதானே? எதுக்கு இங்க வந்தீங்க….? என்று திரும்பவும் கேட்டான் கேசவன்.
“டேய் என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போற கேசவா…. உன் ப்ரெண்ட்டுக்கு என்னால் தொல்லை வரும் என்ற பயம் தான் உனக்கும் மீனாவுக்கும் மீனாவுக்கும். அது தான் இப்படி எல்லாம் பேச வைக்குது….? என்னை விட அவகிட்ட என்ன உரிமை இருக்கு உங்களுக்கு சொல்லுடா….”என்றான் கோபமாக.
“ஓஹோ அப்படியா…? எங்களை எல்லாம் விட அன்னக்கொடி கிட்ட என்ன உரிமை உங்களுக்கு?அது தான் எல்லாத்தையும் முடிச்சு வச்சுட்டாங்களே உங்க அம்மா.அப்புறம் எதுக்கு தேவையில்லாத பேச்சு…? விடாமல் சொன்னாள் மீனா.
“ப்ச்… புரியாம பேசாத மீனா….” அலுத்துக்கொண்டான் ராஜன்.
“உங்களுக்கு தான் அண்ணா எதுவும் புரியல.தயவு செய்து அன்னத்தை இன்னும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க….” என்றான் கேசவன்
இவர்கள் இருவருக்கும் என்ன சொல்லி புரியவைப்பது என்று குழம்பிப் போனான் ராஜன்.
“பிளைட்ல இருந்து இறங்கினதும் எங்களை தெரியாத மாதிரி போயிருங்க சரியா.அன்னத்தை திரும்பவும் டென்ஷன் பண்ணி வைக்காதீங்க. அவ தாங்க மாட்டா.அவளோட ஹெல்த்துக்கும் நல்லதில்ல ப்ளீஸ் ….”கொஞ்சலாக சொன்னாள் மீனா.
பதில் சொல்லாமல் அன்னக்கொடியைத்தான் பார்த்து வைத்தான் அவன்.கண்மூடி சீட்டில் சாய்ந்து படுத்திருந்தவள் முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது அவனுக்கு.
விமானம் தரையை தொடவும் எல்லோரும் கீழே இறங்கி வரிசையாக வெளியே போக தொடங்கினார்கள். பாட்டியை பிடித்துக் கொண்டு மீனா முன்னாடி போக அவர்களுக்கு பின்னால் கேசவன் போனான். அவனுக்கு பின்னால் அன்னக்கொடி நின்றிருந்தாள் .
சட்டென்று எழுந்து அன்னத்தின் பின்னால் வந்து நின்று கொண்டான் ராஜன் .
“எப்படி இருக்க தங்கம்?
திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள் அன்னக்கொடி.
“ உன்னைத்தான் கேட்கிறேன்…. நல்லா இருக்கியா….? என்று சொன்னபடி அவள் கையைப் பிடித்தான்.
“கைய விடுங்க…. என்ன பண்றீங்க….உங்க முஞ்சிய பார்த்துட்டு எப்படி இனி நல்லா இருக்க நான்….” சொல்லிக்கொண்டு கோபத்துடன் தன் கையை உதறி விடுவித்துக் கொண்டு வேகமாக வெளியே போனாள் அவள்.
அவள் சொன்னதை கேட்டு உயிரோடு மரித்து போனான் ராஜன்.என்ன செய்து எல்லாவற்றையும் சரி செய்ய போகிறேன் என்ற கேள்வி மட்டும் தான் அவனுக்குள் இப்போது.
வெளியே வரவும் ராஜனுக்கு கார் வந்து விட்டது.
“ பாட்டி வாங்க எல்லாரும் நம்ம காரில போகலாம்….” என்று பாட்டியிடம் வந்து சொன்னான் அவன்.
“இதோ பாருப்பா எங்க கிட்ட பேசுற வேலை வச்சுக்காத. உனக்கு கார் வந்துச்சா… உன் வீட்டு பணத்துல வாங்கின கார்ல ஏறி கிளம்பு ராசா. எங்க குறுக்க வராத…” முறைத்தபடி பதில் சொன்னார் பாட்டி.
அதே நேரம் சரியா கேசவன் அழைத்த வாடகை கார் அவர்களுக்கு அருகில் வந்து விட்டது.
பாட்டியை பார்த்தும் வண்டியிலிருந்து இறங்கி வந்தான் தியாகராஜன்.தம்பியை கூட்டி செல்ல காரை எடுத்து வந்திருந்தான் அண்ணன்.
“பாட்டி நல்லா இருக்கீங்களா?
“ஆமா தியாகு நல்லா இருக்கேன்.உன் பையன் குமரன் எப்படி இருக்கான்….?
“நல்லா இருக்கான் பாட்டி….”
“இந்தா உன் பையனுக்கு கொண்டு போய் குடு….”என்று தன் பையிலிருந்த தின்பண்டங்கள் அடங்கிய ஒரு பையை தூக்கி தியாகராஜனிடம் கொடுத்தார் வைதேகி பாட்டி.
“அது என்ன எங்கண்ணன் கிட்ட மட்டும் பேசுறீங்க. இவனும் நவநீதம் பெத்த பையன் தானுங்க பாட்டி….” என்று பாட்டியை பார்த்து சொன்னான் ராஜன்.
“இல்லப்பா இவன் மோகனசுந்தரம் பையன்.நவநீதம் பையன் ஊரை விட்டு ஓடி போனதா தான் கேள்விப்பட்டேன்…..” என்று சட்டென்று பாட்டி பதில் சொன்னதும் பெருங்குரலெடுத்து சிரித்தான் தியாகு.
“பாத்தியாடா இந்த பாட்டிக்கு கொழுப்ப….. என்கிட்ட பேசாம உன்கிட்ட பேச தெரியுது.ஏன்னா நீ எங்கப்பா போல இருக்கிறது தான் காரணமாம்.இருங்க இந்த ஊர்ல தான் இருக்க போறேன்.எல்லாரையும் கவனிச்சுக்கிறேன்…..” சொன்னபடி அன்னக்கொடியை தான் பார்த்து வைத்தான்.
என்னிடமிருந்து இனி தப்பித்துக்கொள்ள முடியாது என்று தான் அன்னக் கொடியை நோக்கியது அவன் பார்வை.
பேத்தியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் காருக்குள் ஏறிய பாட்டியை பார்த்தபடி தன் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான் வரதராஜன்.
தொடரும் .........
Last edited:
Previous thread
Next thread





























