18 – காதலின் ரீங்காரம்

👁️ 1208 Views

“என்னடி தங்கப் பொண்ணே…” மனைவியின் அந்த நெருக்கம்… அவனின் குரலை மிருதுவாக்கியிருந்தது.

“ஏதாவது செய்து என் தலைவலியை போக வைடா புருஷா…” என்று அவனைவிட மென்மையான குரலில் மதுமதி வேண்டுகோள் வைக்க,

“என்னடி செய்யணும்?” என்றவன் அவளின் தலையைத் தான் விடாமல் பிடித்துவிட்டான்.

அவளோ தன் தலையில் இருந்த அவனின் கையை எடுத்து அவளின் கழுத்தைச்‌ சுற்றிப் போட்டவள், அவனின் நெற்றியோடு நெற்றியை முட்டி அழுத்தினாள்.

“மது… என்ன செய்ற?” என்று கேட்டவனின் தொண்டையிலிருந்து இப்போது காற்று தான் வந்தது.

மதுமதியோ அவனின் நெற்றியோடு நெற்றி இன்னும் நன்றாக அழுத்தி உரசுவது போலத் தேய்த்துக் கொண்டே இருந்தாள்.

அவளின் அவ்வளவு நெருக்கத்தை மயூரன் எதிர்பார்க்கவே இல்லை. வலி தாங்க முடியாமல் ஏதோ செய்கிறாள் என்று மட்டுமே நினைத்துக் கொண்டவனுக்கு அதன்பின் வேறு எதுவும்‌ நினைக்கக் கூடத் தோன்றவில்லை.

தைலத்தின் மணம் அவனின் நாசியைத் துளைத்து உச்சந்தலை வரை ஏதோ சுள்ளென்று ஏறியது போல இருந்தது.

“ஏதாவது செய்டா புருஷா… ஏதாவது செய்..‌.” என்று‌ மதுமதி கிசுகிசுத்த குரலில் முனகி கொண்டே இருக்க, அக்குரலில் இருந்த ஒருவித மயக்கம் மயூரனின் மூளைக்குள் சென்று அவனை வசமிழக்க வைக்க முயன்றது.

“என்னடி செய்ய? உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே…” அப்போதும் அவளின் குரலுக்கு முழுதாக மயங்கிவிடாமல் மயூரன் முணுமுணுக்க,

“மடையா… மடையா… நான் உன் பொண்டாட்டி தானேடா? நீ என் புருஷன் தானே? உன் பொண்டாட்டி வலிக்குது சொல்றா. ஏதாவது செய்யணும்னு தோனாம… பிடிக்காதுன்னு சொல்ற… என்னைப் பிடிக்காதா உனக்கு? சொல்லு… என்னைப் பிடிக்காதா உனக்கு?” என்று அவன் அணிந்திருந்த கையில்லாத பனியனை கையில் பற்றிய மதுமதி கேட்க,

“அடியேய்! உனக்குத்தான்டி என்னைப் பிடிக்காது…” அந்த நேரத்திலும் நல்லவனாக உளறி வைத்தான் அவன்.

“அதெல்லாம் இல்லை. இப்ப உன்னை எனக்குப் பிடிக்கும். ம்ம்ம்… ம்ம்ம்… எனக்கு வலிக்குதுடா… ஏதாவது செய்டா புருஷா…” என்று அவள் அழுகையுடன் கூடிய சிணுங்கலாகக் கேட்க,

“தங்கப் பொண்ணே… என்னடி இப்படிச் சொல்ற… எனக்கு என்ன செய்யத் தெரியலையே… தலையைப் பிடிச்சு விடட்டுமா?” என்று கேட்டவன் அவளின் தலையைப் பிடிக்கப் போக, அவளோ அவனின் கையைப் பற்றித் தன் அங்கத்தில் வைத்தாள்.

“மது…” நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் அழைத்தான்.

“மய்யூ… மய்யூரா… என… எனக்கு… ஏதோ… ஏதோ…” என்று எதையோ சொல்ல வந்த மதுமதியால் சொல்ல முடியவில்லை. அவனின் நெற்றியோடு நெற்றி வைத்து ஏற்கெனவே உரசிக் கொண்டிருந்தவளின் உதடுகள் தவிப்பாய் அவனின் முகத்தில் ஊர்வலம் செல்ல ஆரம்பித்து, தன் இணையைக் கண்டுவிட்ட வேகத்துடன் அவனின் உதடுகளுடன் தன் உதடுகளையும் பிணைத்துக் கொண்டாள்.

மயூரனுக்குள் பெரும் இரசாயன மாற்றம். தான் மிகவும் விரும்பும் தன் மனைவி அவளாக வந்து முதல் முறையாக முத்தமிட… அவனுக்குச் சித்தம் கலங்கிப் போனது.

தன் மீது கடும் கோபத்தில் இருக்கும் மனைவி தன்னை இப்படி நெருங்குவாளா? இப்படி முத்தமிடுவாளா? என்றெல்லாம் அவனால் சிந்திக்கவே முடியவில்லை.

மதுமதியின் மென்மையான இதழ்கள் மயூரனின் அழுத்தமான அதரங்களை விட்டுப் பிரியாமல் அடம்பிடிக்க, தனக்குள் நேர்ந்து கொண்டிருந்த மாற்றத்தில் மயூரனும் பதிலுக்கு அவளின் இதழ்களுடன் சண்டையிட ஆரம்பித்தான். அவனின் கைகள் அவளின் மேனியில் ஊற, மதுமதியோ அவனுக்கு வசதியாக இன்னும் நெருங்கினாள்.

மனைவியே நெருங்கிய பின் மயூரனின் காதல் உணர்வுகளும் கட்டவிழ ஆரம்பித்தன.

அவனுக்குள் கண்ணியத்துடன் உறங்கிக் கொண்டிருந்த காதலன் காணாமல் போனான். கணவனாகத் தன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவன், மனைவியை முழுமையாக உணர ஆரம்பித்தான்‌.

அதன்பின் நிகழ்ந்தவை எல்லாம் ஆண் பெண்ணின் அந்தரங்க தருணங்களாக மாறிப்போயின.

ஏதோ ஒரு சத்தம் கேட்க, கண் இமைகளை மெல்லப் பிரித்தான் மயூரன்.‌

தன் நெஞ்சில் ஏதோ பாரமாக உணர்ந்தவன் தலையைத் தூக்கிப் பார்க்க, ஆடையில்லா வெற்று தோள் தான் அவனின் கண்களுக்கு முதலில் தெரிந்தது. அடுத்ததாகத் தன் நெஞ்சில் தலை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் மதி முகத்தைப் பார்த்தவன் கண்களைப் பெரிதாக விரித்தான்.

இதென்ன? எப்படி இது? என்று யோசித்தவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அவன் தலை கனப்பது போல இருக்க, மீண்டும் தலையணையில் தலையைச் சாய்த்தான்.

தலை சற்றுக் கனம் குறைந்தது போல இருந்தது. தன் கை மனைவியின் வெற்று முதுகை அணைத்துக் கொண்டிருப்பதையும், தானும் வெற்றுமேனியாய் இருப்பதையும் அப்போதுதான் உணர்ந்தான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவனுக்குள் பெரும் பூகம்பம் நிகழ்ந்தது போல் இருந்தது.

எப்படி? எப்படி? தானா? தானா இப்படி நடந்து கொண்டோம்? என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் ‘மதுமதியும் எப்படித் தனக்கு ஒத்துழைத்தாள்?’ என்ற கேள்வி தோன்ற, இரவு என்ன நடந்தது என்று யோசித்துப் பார்த்தான்.

மனைவி தலைவலி என்றதும், அவள் தன்னை நெருங்கி வந்ததும், தான் அவளின் தலையைப் பிடித்து விட்டதும், அவள் வலி தாங்காமல் ஏதேதோ முனகியதும், தான் பதில் சொன்னதும், அவள் தன் நெற்றியோடு நெற்றி நெருங்கி படுத்ததும்… மனைவி தன்னை முத்தமிட்டதும்… அதன்பின்… என்று யோசித்துப் பார்த்தவனுக்கு, சிந்தி சிதறிய துணுக்குகளாய் சிலது மட்டுமே நினைவு வந்தது… அதன்பின்… என்று யோசித்துப் பார்த்தவனுக்கு எதுவும் நினைவில் இல்லை.

அப்படி நினைவு இல்லாமல் போகுமளவிற்குத் தனக்கு என்ன நேர்ந்தது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போது அவனின் கைப்பேசி மெல்ல இசைத்தது.

அந்தச் சத்தத்திற்குக் கூட மதுமதியின் உறக்கம் களையவில்லை. அவளைத் தன்னை விட்டு பிரிக்கவும் அவனுக்கு மனமில்லை. இன்னொரு கையை மட்டும் சற்று எட்டி பெட்சைட் டேபிளில் வைத்திருந்த தன் கைப்பேசியை எடுத்தான் மயூரன்.

ஷோரூம் மேனேஜர்தான் அவனுக்கு அழைத்திருந்தார்.

அழைப்பை ஏற்று மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

அன்று ஷோரூமுக்கு வந்து சேர வேண்டிய புது வண்டிகள் வந்திருந்தன.

அதற்குக் காலையில் ஆறு மணிக்கு எல்லாம் ஷோரூம் செல்ல வேண்டும் என்று மயூரன் நினைத்திருந்தான். புது வண்டிகளை ஏற்றி வந்திருந்த லாரி வந்துவிட்ட தகவலை மேனேஜர் சொல்ல, இன்னும் சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தான் மயூரன்.

மீண்டும் அவனின் கவனம் மனைவியின் பக்கம் சென்றது. இருவரும் இருந்த நிலை அவனை உஷ்ணமேற்றியது.

“மது… என் தங்கப்பொண்ணே!” என்று கிசுகிசுப்பாக முனகியவன், தன் தலையை உயர்த்தி அவளின் உச்சந்தலையில் தன் அதரங்களைப் பதித்தான்.

“நமக்குள் எப்படிடி இது நடந்தது? எனக்கே சரியா நினைவில்லையே… உனக்கு நினைவு இருக்கா? ஒருவேளை உனக்கும் நினைவில்லைனா நீ கண் முழிச்சதும் என்ன சொல்வ? சும்மாவே சலங்கை கட்டாத குறையா ஆடுவியேடி. இப்ப என்ன செய்யக் காத்திருக்கயோ… ஆனா ஒன்னுடி. இப்படி ஒன்னு நமக்குள் நடக்கவே நடக்காதுன்னு நினைச்சேன். ஆனால் நடந்துருச்சு… ஆனா… இதை நீ எப்படி எடுத்துக்கப் போறன்னு தெரியலையே… எனக்கு எப்படிடி ஒன்னுமே நினைவில்லை? நீ என்னைக் கிஸ் பண்ணியது நினைவிருக்கு. அப்புறம்…” என்று மெல்ல முனகியவன், மதுமதியின் வெற்றுத் தோளில் தன் கையால் இறுக அழுத்தினான்.

அவள் தூக்கத்திலேயே லேசாக வலியில் சிணுங்க…

“வலிக்குதாடி தங்கப்பொண்ணே? ஸாரிடி…” என்று முனகியவன், தன் இறுகிய பிடியை தளர்த்தினான்.

அவள் எழுந்து விட்டால் இப்படி ஒருவர் அணைப்பில் ஒருவர் இருக்க முடியாது என்று புரிய, அவளை விட்டு பிரியவே அவனால் முடியவில்லை.

உரசிக் கொண்டிருந்த தேகங்கள் பற்றிக்கொள்ளத் துடித்தது. ஆனால்… என்று பெருமூச்சுவிட்டு முயன்று தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், மனைவியைத் தன் மார்பிலிருந்து விலக்கி தலையணையில் படுக்க வைத்துவிட்டு அசைந்து எழுந்தவனின் முதுகுக்குக் கீழ் அவளின் உடை இருந்தது.

ஏனோ அதைப் பார்த்து அவனால் மகிழ முடியவில்லை. அவனுக்கு இரவு நடந்தது சரியாக நினைவில்லாமல் போனதே அவனை உறுத்திக் கொண்டிருந்தது.

அதே யோசனையுடன், அவளின் உடையைக் கையில் எடுத்தான். அதன் கீழ் கிடந்தது அந்தச் சிறிய தைலக் குப்பி. அதை யோசனையுடன் கையில் எடுத்துப் பார்த்தான்.

அந்தக் குப்பியிலிருந்து வந்த மணம் நாசியைத் துளைத்தது.

‘இந்த என்ன தலைவலி தைலம்? இதைத்தானே மது நைட் தடவிக்கொண்டாள். நானும் அவளுக்கு இதைத்தான் தேய்த்து விட்டேன். இது தலைவலி தைலம் தானா?’ என்று யோசித்துக் கொண்டே அதன் லேபிளில் எழுதியிருந்ததைப் படிக்க முயன்றான். ஒரு இடத்தில் மட்டும் தலைவலி தைலம் போல் எழுதியிருந்தது. மீதி எழுத்துக்கள் எல்லாம் மிக மிகச் சிறிய எழுத்துக்களாக இருக்க, கவனித்துப் படிக்க முயன்றும் அவனால் முடியவில்லை.

எழுந்து உடையை மாற்றியவனின் பார்வை மனைவியைத் தழுவியது. சிறு குழந்தை போல் லேசாக வாயை பிளந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மதுமதி.

“உனக்கே தெரியாத சில விஷயங்கள் நடந்திருக்குடி தங்கப்பொண்ணே… அது எல்லாம் தெரிஞ்சா நீ தாங்குவியா? இல்லையே… தாங்க மாட்டியே…” என்று வேதனையுடன் மெல்ல முணுமுணுத்துக் கொண்ட மயூரனை மீண்டும் அலைபேசி அழைக்க, வேறு எதுவும் யோசிக்க நேரமில்லாமல் குளித்துக் கிளம்பி ஷோரூமுக்குச் சென்றான்.

அவன் ஷோரூமுக்குள் நுழைந்த போதுதான் மதுமதியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவளிடம் விளையாட்டாகப் பேசிவிட்டு வைத்து விட்டாலும் அவனின் மனமோ கனத்துப் போயிருந்தது.

அவனுக்குக் கவியுகன் சொன்ன சில விஷயங்கள் நினைவில் வர, அதை யோசித்துக் கொண்டே சில மாதங்களுக்குப் பின் மீண்டும் கவியுகனை அலைபேசியில் தொடர்பு கொண்டான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com