நந்தவனப்பூக்கள்
- Joined
- Sep 19, 2024
- Messages
- 294
- Reaction score
- 156
- Points
- 43
nice
Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
அடன்கொடுமைமெய் பிம்பம் நீயே!
கடந்த எபிக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
அத்தியாயம் - 3
தாமரையின் வீட்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே சண்டை, அதே அடிதடி, அன்னையின் ஒப்பாரி, அண்ணனின் விட்டேத்தி தன்மை என்று வழக்கம் மாறாமல் நாட்கள் சென்று கொண்டிருந்தன.
ஆனால், தாமரையின் மனத்தில் பெரும் மாற்றம்! அதற்குக் காரணம் கதிரவன் ஒருவன் மட்டுமே!
அவனை நினைத்த உடனே அவளின் முகம் மலர்ந்து மணம் வீச ஆரம்பித்துவிடும்.
இத்தனை நாட்களும் கல்லூரிக்குக் கடமையாகச் சென்றுகொண்டிருந்தவள், இப்போது காதலுக்காகவும், காதலனுக்காகவும் சென்றாள்.
தினமும் இருவரும் சந்தித்துத் தனியாகப் பேசிக் கொள்வார்கள்.
அப்போது எல்லாம் பெரும்பாலும் கதிரவன், அவளிடம் அன்பாகவும் இருந்தான். அனுசரணையாகவும் இருந்தான்.
வீட்டில் நடக்கும் சண்டை பற்றி அவனிடம் தயங்காமல் கண்ணீருடன் சொல்வாள்.
“இன்னும் கொஞ்ச நாள்தான் செல்லம். பொறுத்துக்கோ. நம்ம பிஜி படிப்பு முடிஞ்சிடும். எனக்கு மேல படிக்கணும்னு எல்லாம் அவசியம் இல்லை. எங்கப்பாவோட பஸ் கம்பெனியை எங்கண்ணா கூடச் சேர்ந்து நானும் பார்த்துப்பேன். அவனுக்கு ஒரு பஸ், எனக்கு ஒரு பஸ்ஸுன்னு அப்பா சொல்லிட்டார். அதை நான் இரண்டு மடக்கா டெவலப் செய்துடுவேன். வேலையைப் பத்தி கவலை இல்லை. என் அண்ணாவுக்கு எப்படியும் நம்ம படிப்பு முடியுறதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சிடும். அவனுக்கு முடிந்ததும், நான் நம்ம காதலை பத்தி வீட்டில் சொல்றேன். அப்புறம் நம்ம கல்யாணம், பஸ் கம்பெனின்னு ஜாம் ஜாம்னு இருக்கலாம்…” என்று அவளின் கண்ணீரை துடைத்து, தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அவளுக்கு உணர்ந்துவான்.
இன்னும் கொஞ்ச நாட்கள்தான் தன்னுடய கஷ்டம் எல்லாம். பின் தன்னவனைத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழலாம் என்று எதிர்கால வாழ்க்கையை எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தாள் தாமரை.
இன்னொரு நாள், “நீ ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ரில் பார்ட் டைம் வேலை பார்க்கிற தானே? அதை விட்டுடு தாமரை. காலேஜும் வந்துட்டு, வேலையும் பார்த்து நீ ஏன் அவ்வளவு கஷ்டப்படுற?” என்று கேட்டான் கதிரவன்.
“அந்த வேலையை வச்சுத்தான் என்னோட செலவை எல்லாம் பார்த்துக்கிறேன் கதிர். அதை விட்டுட்டால் கஷ்டம். என் அப்பாவோ, அண்ணாவோ என் படிப்புக்காக ஒரு பைசா செலவு செய்ய மாட்டாங்க. நான் போய்க் காசு கேட்டால், நீ படிக்கவே வேணாம், வீட்டில் இருன்னு சொல்லிடுவாங்க…” என்று வருத்தமாக உரைத்தாள் தாமரை.
“நீ ஏன் உன் அப்பாகிட்டவும், அண்ணாகிட்டவும் பணம் கேட்கணும்? அவங்ககிட்ட நீ கேட்க வேணாம், நீ கேட்காமயே உனக்குச் செய்ய நான் இருக்கேன்…” என்றான் கதிரவன்.
View attachment 579
படிப்பு செலவிற்கு மட்டுமல்ல… “இந்த நிறம் உனக்கு எடுப்பா இருக்கும்னு வாங்கினேன்…” என்று அவளுக்கு அவ்வப்போது அவன் உடை வாங்கி வருவான். “இந்தக் கிளிப் உனக்கு நல்லாயிருக்கும்னு வாங்கினேன்…” என்று நிற நிறமாகத் தலைமாட்டிகளை வாங்கி வருவான். “நீ கட்டியிருக்கும் வாட்ச் வார் நஞ்சி போய் இருக்கு. இதைக் கட்டிக்கோ…” என்று தங்க நிறம் கொண்ட கைக்கடிகாரம் வாங்கி வருவான். “கை செலவுக்கு உன்கிட்ட கொஞ்சம் பணம் இருப்பது நல்லது. இதை வச்சுக்கோ…” என்று அவளின் கையில் பணத்தைத் திணிப்பான்.
ஆனால், அதை எதையுமே தாமரை பெற்றுக்கொள்ளவில்லை.
“எனக்காக ஒருத்தர் பார்த்து பார்த்து வாங்கித் தருவது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு கதிர். வீட்டில் எதுவும் நான் கேட்டாலே திட்டும், அடியும்தான் விழும். இருப்பதை வச்சுச் சந்தோஷப்படப் பழகிக்கோடி. நமக்கு ஒன்னும் காசு வானத்துல இருந்து பொத்துன்னு விழன்னு சொல்லி அம்மா திட்டுவாங்க. எங்கப்பாவுக்குக் காசுன்னா அது அவர் சந்தோஷக்காக மட்டுமே பயன்படும் பொக்கிஷம். பெத்தவரே வீட்டுக்கு ஒன்னும் செய்வதில்லை. நான் ஏன் செய்யணும்னு அண்ணாவுக்கு வீம்பு. அம்மா வாங்கித் தருவதை மீறி நான் எதையும் ஆசைப்படுவதையே விட்டுட்டேன்.
ஸ்கூல் முடித்து காலேஜ் சேரணும்னு சொன்னப்ப கூட, உன்னைப் படிக்க வைக்க எல்லாம் காசு இல்லைன்னு அம்மா சேர்த்து விட மாட்டேன்னு சொன்னாங்க. ஒரே ஒரு முறை மட்டும் பணம் கட்டி சேர்த்து விடுமா. அப்புறம் நான் என் செலவுக்குப் பார்த்துக்கிறேன்னு கெஞ்சி கூத்தாடிதான் காலேஜிலேயே சேர்ந்தேன்.
காலேஜில் கஷ்டப்பட்டுக் காலர்ஷிப் வாங்கினேன். மீதி செலவுக்குப் பார்ட் டைம் ஜாப் போக ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் ஒரு செராக்ஸ் கடையில் வேலை பார்த்தேன். அதில் வரும் சம்பளம் என் படிப்புக்கு பத்தலைன்னு இந்த வருஷம்தான் நான் படிக்கிற படிப்பை வச்சு பேசிக் மட்டும் சொல்லித் தர்றேன்னு சொல்லி கம்ப்யூட்டர் சென்ட்ரில் கெஞ்சி கேட்டு அந்த வேலையை வாங்கினேன். முறையான சர்டிபிகேட் இல்லாம வேலை கிடையாதுன்னு சென்டர் ஓனர் அவ்வளவு ஸ்ட்ரிக்டா இருந்தார். அதையும் மீறி என் படிப்பே இந்த வேலையை நம்பித்தான் இருக்குன்னு கெஞ்சி வாங்கின வேலை அது கதிர். அதை அவ்வளவு சீக்கிரம் என்னால் விட முடியாது.
நீங்க எனக்காகச் செய்ய நினைப்பதும், வாங்கிக் கொடுக்க நினைப்பதையும் பார்த்து எனக்குச் சந்தோஷத்தில் கண்ணீரே வருது. ஆனால், இதெல்லாம் இப்ப எனக்கு வேணாம் கதிர். இதை நான் இப்ப வாங்கிக்கிட்டால் இதுக்காகத்தான் நான் உங்க காதலை ஏத்துக்கிட்ட மாதிரி ஆகிடும்…” என்று உறுதியாக மறுத்தாள் தாமரை.
“நான் அப்படிச் சொன்னேனா?” என்று கோப முகம் காட்டினான் கதிரவன்.
“நீங்க சொல்ல மாட்டிங்க கதிர். எனக்கு அது தெரியும். ஆனால், எனக்குத்தான் மனசுக்கு ஒப்பலை கதிர். எதுவா இருந்தாலும் நம்ம கல்யாணத்துக்குப் பிறகு கொடுங்க. மறுக்காமல் சந்தோஷமா வாங்கிக்கிறேன்…” என்றாள் தாமரை.
“உனக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசுடி…” என்று அவள் முகத்தோடு முகம் உரசி கொஞ்ச வருவான்.
அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளி நிறுத்தி, “இதுவும் கல்யாணத்துக்கு அப்புறம்தான். ப்ளீஸ் கதிர்!” என்று தாமரை முகத்தைச் சுருக்கி சொல்லும் போது, அவனுக்கு மனம் சுணங்கினாலும், அதற்கு மேல் அவளை வற்புறுத்த மாட்டான்.
அவன் கோபம் கொள்ளாமல் புரிந்து விலகிக்கொள்வது தாமரைக்கு அவனின் மீதான தன்மதிப்பை உயர்த்தியது.
ஏற்றத்தாழ்வு பார்க்காமல் தன்னை விரும்புவதோடு, தன் மனத்தையும் புரிந்து நடந்துகொள்கிறானே… என்று அவளுக்கு மனம் நெகிழும். எங்கே தன்னையும் மீறி, அவனைக் கொஞ்சி விடுவோமோ என்று கூடப் பயந்திருக்கிறாள். ஆனால், தானே அவனைத் தூண்டிவிடக்கூடாது என்று தன்னைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வாள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்களின் காதல் தங்கு தடையில்லாமல் வளர்ந்தது.
காதல் தந்த மயக்கம், அவள் வீட்டின் அடிதடி சூழலையும் இலகுவாகக் கடக்க வைத்தது.
இன்னும் சில மாதங்கள்தான்! பின் என் கதிரை கரம் பிடித்து, மகிழ்ச்சியான திருமண வாழ்வை வாழ்வேன். அன்னை, தந்தை போல் எங்களுக்குள் சண்டையே வராது. கதிரின் அன்பில் அனுதினமும் அகம் மகிழ்வேன் என எதிர்கால வாழ்க்கையை நினைத்து, நிகழ்கால வலிகளைக் கடந்து கொண்டிருந்தாள் தாமரை.
***
கல்லூரி முடிந்து அவள் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் சென்டர் செல்ல, பேருந்திற்காகக் காத்திருந்தாள் தாமரை.
அப்போது அவளைப் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்ற கதிரவன், சற்றுத் தள்ளி ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்திவிட்டு அவளின் அருகில் வந்தான்.
அவன் வருவதைப் பார்த்து, புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டாள் தாமரை.
View attachment 580
தலையை இடவலமாக அசைத்தவன், அவளின் அருகில் வராமல் தள்ளியே நின்றிருந்தான்.
இருவரும் கல்லூரிக்குள் அவ்வப்போது சந்தித்துப் பேசிக் கொள்வார்களே தவிர, ஜோடி போட்டு சுற்றுவதோ… வெளியிடங்களுக்குச் செல்வதோ, மற்ற இடங்களில் அருகில் நின்று பேசிக் கொள்வதோ கிடையாது.
தங்கள் படிப்பு முடியும் வரை மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள். படிப்பு முடிந்த பின் இருவரின் வீட்டிலும் பேசலாம்… என்று இருவரும் பேசி முடிவெடுத்திருந்தனர்.
அதனால் கதிரவன் அவளின் அருகில் வரவில்லை.
தாமரை செல்ல வேண்டிய பேருந்து வர, கதிரவனைப் பார்த்து ரகசியமாகத் தலையை அசைத்துவிட்டு, பேருந்தில் ஏறிக்கொண்டாள் தாமரை. அந்தப் பேருந்து கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்துவிட்டு, கடை முன் நிறுத்தியிருந்த வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான் கதிரவன்.
கம்ப்யூட்டர் சென்டர் இருக்கும் ஏரியாவில் பேருந்திலிருந்து இறங்கிய தாமரை, அப்போதுதான் கவனித்தாள். பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்றுத் தள்ளி தனது இருசக்கர வாகனத்துடன் கதிரவன் நின்று கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனிடம் கேட்கலாம் என்றால், அங்கே ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க, அவனிடம் பேசாமல் சென்றுவிட்டாள்.
வேலை முடிந்து அவள் வீடு திரும்பிய போதும் அவளுக்காகக் காத்திருந்தான் கதிரவன். அவள் பேருந்து பிடித்து வீடு சென்ற போதும் அந்த வழியிலும் வந்து நின்றான்.
அவளிடம் கைப்பேசி இல்லை. இருந்திருந்தால் அவனுக்கு அலைபேசியில் அழைத்துப் பேசியிருப்பாள். அவனின் இந்தச் செய்கை ஏன் என்று புரியாமல் குழம்பினாள் தாமரை. யார் பார்த்தாலும் பரவாயில்லை என அவனின் அருகில் சென்று கேட்டுவிடலாமா? என்று யோசித்து அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
அவளின் நோக்கம் புரிந்த கதிரவன், மறுப்பாகத் தலையை அசைத்தான். தாமரை அதற்கு மேல் அவனின் அருகில் செல்ல முயற்சி செய்யாமல் குழப்பத்துடன் வீட்டிற்குச் சென்று சேர்ந்தாள்.
அவள் பத்திரமாக வீடு சென்று சேர்ந்துவிட்டாள் என்று உறுதியான பின்னே அங்கிருந்து கிளம்பினான் கதிரவன்.
மறுநாள் கல்லூரியில் தாமரை கதிரவனைச் சந்திக்கச் சென்றபோது, வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் இல்லாமல் மாணவர்களின் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றான் அவன்.
“என்னாச்சு கதிர்? என்ன பிரச்சினை? ஏன் வித்தியாசமா நடந்துக்கிறீங்க? நான் போற இடமெல்லாம் பின்னாடி வர்றீங்க? இன்னைக்கு வழக்கமான இடத்தில் இல்லாம இவ்வளவு தூரம் வந்து மறைந்து நின்னு பேசுறோம்?” என்று குழப்பத்துடன் கேட்டாள் தாமரை.
“நமக்கு ஃபைனல் செமஸ்டர் வர, இன்னும் இரண்டு மாசம்தான் இருக்கு. அதுவரை நாம கொஞ்சம் கவனமா இருக்கணும் தாமரை…” என்றான் கதிரவன்.
“ஏன், என்னாச்சு?” பதற்றமாகக் கேட்டாள்.
“நம்ம விஷயம் அரசல் புரசலா எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்…” என்றான் தன் நெற்றியை ஒற்றைவிரலால் நீவிக்கொண்டே.
“ஓ!” என்று அதிர்ந்தவள், பின் யோசனையுடன், “ஆனால், உங்க காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்கன்னு சொன்னிங்களே… நீங்க வீட்டுக்கு செல்ல புள்ள உங்க ஆசையை நிறைவேத்துவாங்கன்னு சொன்னீங்க. அதனால் உங்கப்பாவுக்கு நம்ம காதல் விஷயம் தெரிந்தால் என்ன?” என்று குழப்பத்துடன் கேட்டாள் தாமரை.
“என் ஆசைக்கு எங்கப்பா மறுப்பு தெரிவிக்க மாட்டார்தான். இதுவரை அப்படி எதுவும் சொல்லவும் இல்லை. ஆனால், காதல் விஷயம் அப்படி இல்லையே? அதுவும் எங்கப்பா இந்த ஜாதி எல்லாம் கொஞ்சம் பார்ப்பார்…” என்று தயக்கத்துடன் சொன்னவனைத் தாமரை திகைத்துதான் பார்த்தாள்.
தங்கள் காதலுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று உரைத்தானே? என்ற கேள்வியும், திகைப்பும் அவளுக்கு.
அதை அவனிடமும் கேட்கவே செய்தாள்.
“காதல்னா சின்னச் சின்னப் பிரச்சினைகள் வரத்தானே செய்யும் தாமரை. ஆனால், நீ பயப்படாதே! அப்பா மாதிரி அம்மா இல்லை. நான் நம்ம படிப்பு முடிந்ததும், அம்மாகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேச சொல்றேன். அம்மா சொன்னா அப்பா கேட்பாங்க…” என்றான் சமாதானமாக.
“அதை இப்பவே நீங்க செய்ய வேண்டியதுதானே? அதை விட்டு நீங்க ஏன் என்னைப் பாதுகாப்பது போலப் பின்னாடியே வர்றீங்க? உங்க அப்பா என்னை எதுவும் பண்ணிடுவாரா?” பயம் துளிர்க்க கேட்டாள்.
“ச்சே… ச்சே… அப்படியெல்லாம் இல்லை தாமரை…” என்றான்.
“பின்ன ஏன்?”
“என் மனத் திருப்திக்கு தாமரை. ஒருவேளை நம்ம காதல் விஷயம் கேள்விப்பட்டு அப்பா அப்படி எதுவும் யோசிச்சா… உனக்கு நான் பாதுகாப்பா இருக்கேன்னு அப்பாவுக்கு உணர்த்த மட்டுமே நீ போற இடமெல்லாம் வர்றேன்…” என்றான்.
தாமரைக்குப் பயமாகவும், பெரும் குழப்பமாகவும் இருந்தது.
அவளின் கையை மென்மையாகப் பிடித்தவன், “நான் நினைச்சால் இன்னைக்கே கூட நேரா போய் நம்ம காதல் விஷயத்தை அம்மாகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேச சொல்லலாம் தாமரை. ஆனால், இப்ப எதுவும் வேண்டாம்னு பார்க்கிறேன். நமக்கு இன்னும் இரண்டு மாசத்தில் படிப்பு முடிய போகுது. இந்த நேரத்தில் இதைப் பத்தி பேசினோம்னா… பெரியவங்களைச் சமாளிக்கவே பெரும்பாடா போயிடும். அப்புறம் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. நாம இரண்டு பேரும் ஒரு டிகிரியாவது வாங்கிடணும். என்னைக் கூட விடு. ஆனால், நீயா கஷ்டப்பட்டுப் படிக்கிற படிப்பு இது. லாஸ்ட் நேரத்தில் வேஸ்டா போயிட கூடாது. அதுக்குத்தான் நாம கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நம்மோட லாஸ்ட் செமஸ்டர் அன்னைக்கு எக்ஸாம் முடிச்சிட்டு நேரா போய் நான் வீட்டில் பேசுறேன்…” என்றான் கதிரவன்.
“உங்கப்பாவுக்கு அரசல்புரசலா தெரிஞ்சிருச்சு சொன்னீங்களே?” என்று அப்போதும் தயக்கத்துடன் கேட்டாள் தாமரை.
“எனக்கு அப்படி சந்தேகம் வந்தது தாமரை. அப்பா இப்ப எல்லாம் என்னைக் குறுகுறுன்னு பார்க்கிற மாதிரி இருந்தது. ஏன் அப்படின்னு தெரியலை. நம்ம காதல் விஷயம் தெரிந்துதான் அப்படிப் பார்க்கிறாரோன்னு டவுட். அதான் எதுக்கும் நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கலாம்னு நினைச்சு உனக்குப் பாதுகாப்பா வர்றேன்…” என்று கதிரவன் சொன்ன பிறகும், தாமரையின் முகம் தெளியவில்லை.
விரும்பியவனைக் கைப்பிடித்து ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும் என்று அவள் காத்திருக்க, அவனோ தங்கள் காதலுக்கு விழைய போகும் பிரச்சினைகளைக் கண்முன் நிறுத்துகிறானே… தங்கள் காதல் ஜெயிக்குமா? தாங்கள் வாழ்வில் ஒன்று சேர முடியுமா? என்ற பயம் அவளை ஆக்கிரமித்தது.
அதை உணர்ந்தவன் போல், ஆறுதலாக அவளின் கரத்தை அழுத்திக் கொடுத்தான் கதிரவன்.
“என் மேல் நம்பிக்கை வைச்சு தைரியமா இரு தாமரை. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நாம ஒன்னு சேருவோம்…” என்று சொல்லி தைரியமூட்டினான்.
அவனின் ஆறுதல் மனத்திற்கு இதமாக இருக்க, தன் தலையை அவனின் தோளில் சாய்த்தாள்.
அவளின் தோளை சுற்றி கையைப் போட்டு லேசாக அணைத்துக் கொண்டான் கதிரவன்.
View attachment 581
மறுநாளிலிருந்து அவளின் பின் அவன் தொடர்வது தொடர்ந்தது.
அவனின் வாகனத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பின்மை என்று யோசித்தவன், நண்பனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வருவான்.
தலையில் தலைக்கவசம் அணிந்து கொள்வான்.
அவன் தனக்காக அப்படிப் பாதுகாப்பாக வருவது ஒருவிதத்தில் தாமரைக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றால், தங்கள் காதல் விஷயம் வீட்டினருக்கு தெரியவரும்போது பெரும் பிரச்சனையைச் சந்திக்க நேருமோ என்ற பயமும் அவளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது.
அவளின் காதல் தருணங்கள் பயமும், பதற்றமுமாகச் சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தாமரைக்குப் பெரும் இடி ஒன்று காத்திருந்தது.
ஒருநாள் இரவு உள்ளறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாமரையின் உறக்கத்தைக் கலைத்தது கைப்பேசியின் ஒலி.
அந்தச் சத்தத்தில் எழுந்து அமர்ந்தவள், உள்ளே இருந்தபடி கூடத்தை எட்டிப் பார்த்தாள்.
கூடத்தில் படுத்திருந்த மதனகோபாலின் அருகே இருந்த கைப்பேசி எழுப்பிய ஒலிதான் அது.
அவனோ அழைப்பை ஏற்காமல் கவிழ்ந்தடித்துப் படுத்திருந்தான்.
உறக்கம் தடைப்பட்ட எரிச்சலில் தாமரை அமர்ந்திருக்கும்போதே அழைப்பு நின்றுவிட, மீண்டும் தரையில் விரித்திருந்த பாயில் சாய்ந்தாள்.
அடுத்த நொடி மீண்டும் மதனகோபாலின் கைப்பேசி அலற, “அண்ணா, அந்தப் போனை எடு…” என்று எரிச்சலுடன் இங்கிருந்து தாமரை கத்த,
“ம்ப்ச், இந்த நேரத்தில் எவன் போனை போட்டு உசுரை வாங்குறான்?” என்று கடுப்புடன் முனகிக்கொண்டே எழுந்த மதனகோபால், “ஹலோ, யாருங்க இந்த நேரத்துல?” என்று கோபமாக அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தான்.
அண்ணன் பேசட்டும் என்று படுக்கையில் சாயப் போன தாமரை, அவன் பதற்றமாகப் பேச ஆரம்பிக்கவும், என்னவோ என்று பதறி எழுந்து வெளியே வந்தாள்.
“எப்போ? என்னாச்சு? உண்மையா?” என்று கேட்டுக்கொண்டே போன மதனகோபாலின் குரலில் நடுக்கம்!
View attachment 582
“இதோ நான் உடனே வர்றேன்…” என்று வேகமாகச் சொன்னவன், அங்கே நின்றிருந்த தங்கையைப் பதற்றம் குறையாமல் பார்த்தான்.
“என்னண்ணா? யாரு போனில்? யாருக்கு என்னாச்சு?” என்று தாமரை நடுக்கத்துடன் கேட்க,
“தாமரை… தாமரை…” என்றவனால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
“என்னாச்சுண்ணா? யாரு, என்ன சொன்னா?” என்று தாமரை அருகில் வந்து கேட்க,
“தாமரை… நம்ம… நம்ம… அம்மா…” என்று கண்கலங்கியபடி திணறினான் தமையன்.
“அம்மா? அம்மாவுக்கு என்ன?” என்று பிசைவது போலிருந்த நெஞ்சை கையில் அழுத்தியபடி கேட்டாள்.
“அம்மா நம்மை விட்டுப் போயிருச்சாம் தாமரை…” என்றவன் உடைந்து அழ, “ஐயோ! அம்மா…” என்று கத்தி கதறினாள் தாமரை.
Welcome to Nandhavanam Novels, your ultimate destination for exploring the rich and vivid creations in Tamil. Our mission is to celebrate and promote story writing, showcasing a diverse array of novels that reflect the culture, traditions, and contemporary issues of the society.
Started in 2019 by Ezhilanbu, We curate a wide selection of works, from classics to emerging voices, ensuring that every reader finds something that resonates with them. Whether you’re a lifelong fan of Tamil stories or a newcomer eager to discover its beauty, we strive to provide an engaging and enriching experience.
Explore the captivating realm of Tamil novels with us, where every story unfolds a new adventure and each page reveals a hidden gem. Enjoy your reading journey.