• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

EK Prefinal

அத்தியாயம் 32

அங்கே ஹாலில் நின்றிருந்தவர்கள் அனைவரும் அவளின் அந்தத் திமிரான செயலில் அப்படியே ஸ்தம்பித்து நிற்க,

"எனக்கு இந்த நாசமாப் போன காசு வேண்டாம்டா... உன் அண்ணன் சகாயனத்தான்டா வேணும்!" என்று அத்தனை பேர் முன்னிலையிலும் பைத்தியக்காரி போலக் கத்தினாள் ரிதன்யா.

அவள் அந்தப் பணப்பையைத் தூக்கி அடித்த வேகத்தில், அதில் இருந்த கட்டுக் கட்டான பண நோட்டுகள் ஹால் முழுக்கச் சிதறி விழுந்து சிதறின.

ரிதன்யாவின் இந்த வெறித்தனமான செய்கையைக் கண்டு அவளது பெற்றோர் மொத்தமாக அதிர்ந்து போய் நின்றார்கள். அவளது தந்தை அவமானத்தின் உச்சத்துக்கே சென்று, "ரிதன்யா! கல்யாணமான ஒரு ஆம்பிளைதான் வேணும் என்று வெட்கமேயில்லாமல் இப்படிக் எல்லோருக்கும் முன்னால் கேக்குறீயே... என்ன பைத்தியக்காரத்தனம் இது? அறிவிருக்கா உனக்கு?" என்று கத்தியபடி, அத்தனை பேர் முன்னிலையிலும் அவளது கையைப் பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அறை விட்டார்.

அந்த அடியின் வேகத்தில் ரிதன்யா ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனாள். தந்தை அடித்த கன்னத்தைத் தன் கைகளால் பொத்திக் கொண்டு, அவரைப் பரிதவிப்போடு பார்த்தாள்.

மகளின் அந்தப் பரிதாபமான பார்வை அவரது மனதை ஒரு நிமிடம் உலுக்கினாலும், அவர் தன் குரலை இரும்பாக்கி, "இனி உன் வாழ்க்கையில் சகாயன் இல்லைம்மா. அவர் இன்னுமொரு பெண்ணோட தன் வாழ்க்கையைத் தொடங்கிட்டார். நீ அவரோட மனதில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தல... அதுதான் ஆணித்தரமான உண்மை!" என்றார்.

"அப்பா... நாலு வருஷம் நான்..." என்று ரிதன்யா தவிப்போடு சொல்ல வர,

"நீ அவரை நாலு வருஷமாக உன் கைக்குள் வச்சுக்கணும் என்று பார்த்தியே தவிர, உங்கள் இருவருக்குள்ளும் காதல் என்ற ஒன்று இருந்ததையே மறந்திட்டாய். உன் பேச்சுகளும் உன் நடவடிக்கைகளும் அவருக்கு எத்தனையோ முறை அதிருப்தியை ஏற்படுத்தினாலும், காதல் என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காகத்தான் பேசாமல் பொறுமையா இருந்திருக்கார். ஆனா அப்பவும் நீதான் அவரைத் தரம் தாழ்த்திப் பேசினாய். அதிலேயே அவர் உன்னை முழுதாய் உதறிட்டார். அதனால்தான் அவரால் உன்னை உடனே மறந்திட்டு, அடுத்த வாழ்க்கைக்குள் நிம்மதியா போக முடிந்தது." என்றார் மேல்பூச்சு இல்லாமல் வார்த்தைகளை உடைத்து.

"அப்பா... ஆனா அவர் பண்ணினது தப்புத்தானே?" என்று ரிதன்யா தவிப்பாகக் கேட்க,

"தப்புத்தான்..." என்று சகாயனைப் பார்த்துக் குற்றம் சாட்டும் விதமாகப் பேசிய ரிதன்யாவின் தந்தை, மீண்டும் தன் மகளிடம் திரும்பி, "ஆனால், உங்கள் இரண்டு பேருக்குமிடையில் ஒருவர் புகுந்து, உங்களைப் பிரிக்க முடிஞ்சிருக்குன்னா... உங்கள் இரண்டு பேருடைய உறவும் உறுதியாக இல்லை என்றுதான் பொருள். உன் பக்கமும் சரி, அவர் பக்கமும் சரி... உண்மையான காதல் என்ற ஒன்று என்றோ காணாமல் போய்விட்டது" என்றார்.

"இல்லைப்பா... நான் அவன் காதலுக்கு உண்மையாகத்தான் இருந்தேன். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். என்னால் அவனை யாருக்கும் பங்கு போட முடியாது!" என்று ரிதன்யா பிடிவாதமாகச் சொல்ல,

முழுதாகவே சகாயன் அவள் கையை விட்டுப் போய்விட்டான் என்பதை இன்னும் உணராமல் பேசும் தன் மகளை நினைத்துப் பெருமூச்சு ஒன்றை விட்டார் ரிதன்யாவின் தந்தை. "ஒரு பட்டத்தை எப்பவும் நூலில் கட்டி நீயே இறுக்கிப் பிடிச்சிட்டு இருந்தாலும், ஒரு கட்டத்துல அந்த நூல் அறுந்துதான் போகும். அதுதான் உன் விஷயத்துலயும் நடந்திருக்கு. விடும்மா... உனக்கானவர் இவர் இல்லை" என்று அவர் முடிவாகச் சொன்னார்.

தந்தையின் அடுக்கடுக்கான பேச்சில் ரிதன்யாவுக்கும் தன் பக்கமிருந்த தவறுகள் கொஞ்சம் கொஞ்சமாக உணரப்பட, அவள் அதற்குமேல் பேசாமல் அமைதியாக நின்றாள்.

அதன்பின் அவளது தந்தை நடராஜனின் முன்னால் வந்து கைகளைக் கூப்பி, "நடராஜன் சார்... எங்களை மன்னிச்சிடுங்க. இவ பண்ணுன தப்புக்கெல்லாம் சேர்த்து நாங்க மன்னிப்புக் கேட்டுக்கிறோம். இவளுக்குச் சகாயன் மேல இருந்தது காதலே இல்லை சார். அவரைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கணும், தான் நினைச்சதுதான் நடக்கணும்ங்கிற அல்பப் பிடிவாதம்தான். நாங்க சொல்லுறது எதையும் கேட்காமல், இப்போ தன் வாழ்க்கையில தோத்துப்போய் நிக்கிறா. இதோ இந்த நிமிஷமே நாங்க இவளைக் கூட்டிட்டுப் போறோம். இனிமேல் இவளால உங்க குடும்பத்துக்கோ, சகாயனுக்கோ எந்தப் பிரச்சினையும் வராது. இது என் மேல சத்தியம்" என்று உடைந்த குரலில் கூறினார்.

அப்பொழுது பைனான்சியர் நிதர்சன் நிதானமாக முன்னே வந்தான். சிதறிக் கிடந்த பண நோட்டுகளைப் பார்த்தபடியே ரிதன்யாவை நோக்கித் திரும்பியவன், தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சட்ட ஆவணத்தை எடுத்து மேசையின் மேல் வைத்தான். அதை ரிதன்யாவின் தந்தை முன் நகர்த்தி, “பெரியவரே, இதில் சைன் பண்ணுங்க" என்று சொல்ல, அவரும் அதை மறுத்துப் பேசாமல், படித்துக் கூடப் பார்க்காமல் அமைதியாகக் கையெழுத்திட்டார்.

"மிஸ் ரிதன்யா... நீங்க காசைத் தூக்கி அடிச்சாலும் சரி, இல்லை மிதிச்சாலும் சரி... இந்த லீகல் டாக்குமெண்ட்ல உங்க அப்பா கையெழுத்துப் போட்டுட்டார். உங்ககிட்ட வாங்குன அசல் கடனும், அதுக்கான வட்டியும் முறைப்படி இப்போ முழுசா செட்டில் ஆகிடுச்சு. இதோ இந்த நிதர்சன் முன்னிலையில இனிமேல் நீங்களோ, உங்க குடும்பமோ சகாயன் குடும்பத்து மேல எந்தவொரு சிவில் அல்லது கிரிமினல் வழக்கும் தொடர முடியாது. அப்படி ஏதாச்சும் பண்ண நினைச்சீங்கன்னா... பிளாக்மெயில் பண்ணுனதுக்காகவும், மன உளைச்சல் கொடுத்ததுக்காகவும் உங்க மேல நாங்க கேஸ் போட வேண்டியிருக்கும்" என்று சட்டப்படியான இறுதி எச்சரிக்கையை மிகக் கம்பீரமாக விடுத்தான் மித்ரனின் தோழன்.

சகாயன் ஹாலில் சிதறிக் கிடந்த பண நோட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மீண்டும் பைக்குள் வைக்க, மித்ரனும், நிதர்சனும் அவனுக்கு உதவினார்கள்.

எல்லாப் பணத்தையும் எடுத்து அந்த பைக்குள் வைத்த பிற்பாடு ரிதன்யாவின் முகத்தைப் பார்த்தான் சகாயன். அவனது கண்களில் இப்போது எந்தக் கோபமும் இல்லை. ஒருவித பச்சாதாபம் மட்டுமே இருந்தது. "இனிமேலாச்சும் உன்னோட இந்தத் திமிரையும் அகங்காரத்தையும் விட்டுட்டு, ஒரு நல்ல மனுஷியா வாழப் பாரு ரிதன்யா" என்று அத்தனை அழுத்தமாகச் சொன்னான் சகாயன்.

அவன் தரப்பிலும் சில தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒருத்தியை வாழ்நாள் முழுதும் கூட வருவாள் என்று காதலித்துவிட்டு, தன் குடும்பத்துக்காக அவளைக் கைவிட்டது அவன் தரப்பில் நியாயமாக இருந்தாலும், நறுமுகையுடனான அவனது இந்த உடனடி வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தப்பாகத் தோன்றலாம் என்பதை அவனும் உணர்ந்தே இருந்தான்.

அவளது தாய் ரிதன்யாவின் கையைப் பிடித்துப் பலவந்தமாக இழுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடக்க, ரிதன்யா எதுவும் பேச முடியாமல், தன் அத்தனை பிளான்களும் தவிடுபொடியாகிவிட்ட அவமானத்தில், கண்கள் சிவக்க அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவர்கள் சென்ற பின், ரிதன்யாவின் தந்தை நிதர்சனை நோக்கி, "நிதர்சன்... இந்தப் பணம் நான் என் சொந்தக் காசுல இருந்து எடுத்துத் தரலைப்பா, வெளியில் வட்டிக்குக் கடனா வாங்கித்தான் அவசரத்துக்குக் கொடுத்தது. இப்போ இவங்ககிட்ட இருந்து இந்தத் தொகை அப்படியே எனக்குத் திருப்பிக் கிடைச்சது பெரிய விஷயம். இதை அப்படியே கொண்டு போய் நான் கொடுத்தா, நான் வாங்கியிருக்கிற அந்தக் கடனிலிருந்து முழுசா வெளியே வந்திட்டேன் என்கிற நிம்மதியாவது எனக்குக் கிடைக்கும். நான் இதை எடுத்துட்டுப் போகட்டாப்பா?" என்று அத்தனை ஏக்கமாக, நைந்த குரலில் கேட்டார்.

அவரது தற்போதைய இக்கட்டான சூழ்நிலையையும், முகத்தில் அலைமோதிய அந்தப் பெருத்த ஏமாற்றத்தையும் பார்த்தபோது நிதர்சனுக்கு அவர் மேல் ஒரு நிமிடம் பாவம் என்றுதான் தோன்றியது.

அவன் தன் முகபாவனையை லேசாக மாற்றிக் கொண்டு, "சரிங்க பெரியவரே... பணத்தைப் பத்திரமாகக் கொண்டு போய், முதல்ல அந்த வெளியில் வாங்கியிருக்கிற கடனை முழுசா அடைச்சுட்டு நிம்மதியா இருங்க" என்றான் அத்தனை மரியாதையோடு.

இறுதியாக ரிதன்யாவின் தந்தை நிதர்சனிடமும் நடராஜனிடமும் மீண்டும் ஒருமுறை கைகூப்பி மன்னிப்புக் கேட்டுவிட்டு, தன் மகளுக்குப் பின்னாடியே கனத்த இதயத்தோடு வெளியேறிச் சென்றார்.
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Previous thread
Next thread

Latest threads

Back
Top Bottom