- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
ஊனே உயிரே - Final
அதன்பிறகு வந்த நாட்களில் அவன் காதலுடன் பேச ஆரம்பிக்க, அவள்தான் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்துப் போனாள்.அவளால் அவன் பேச்சுடன் ஒன்றவும் முடியவில்லை. விலகவும் முடியவில்லை. தான் உண்மையை மறைத்துத் தவறு செய்கிறோம் என்று அவளுக்கு உறுத்த ஆரம்பித்தது.
இப்படி நாட்கள் செல்ல ஆரம்பிக்க, ஒரு நாள் அவளைப் பார்க்க வேண்டும் என்று செய்தி அனுப்பினான் அவன்.
அடுத்த நொடி அவளின் உடலே நடுங்கி போனது.
இதுவரை அவள் தன் புகைப்படத்தைக் கூட அவனிடம் காட்டவில்லை. முகநூலிலும் பதிவேற்றியது இல்லை.
இத்தனை நாட்களும் அவளைப் பார்க்காமலே பழகி காதல் வரை சென்றவன், இப்போது பார்க்க ஆசையாக இருப்பதாகச் சொல்ல, என்ன செய்வது என்று அறியாமல் தவித்துப் போனாள்.
“ஏன் இன்பா இவ்வளவு தயக்கம்? நான் உன்னைப் பார்க்க கூடாதா? உன் முகத்தைப் பார்க்க எனக்கும் ஆசை இருக்காதா? ஒரே ஒரு போட்டோ தானே கேட்டேன். அனுப்பேன்…” என்று ஆசையுடன் கேட்டான்.
“நான்… நான் ஒன்னும் அவ்வளவு அழகா இருக்க மாட்டேன் விழியன்…” என்றாள் தடுமாற்றத்துடன்.
“ஆமா, நான் மட்டும் ஆணழகன் போட்டியில் அவார்ட் வாங்கிட்டு வந்துருக்கேன் பார். சும்மா பிகு செய்யாமல், அனுப்புங்க மேடம்…” என்று சீண்டலாகவே கேட்டான்.
“அதில்லை விழியன், நான் உங்க கிட்ட என்னைப் பற்றிய ஒரு உண்மையை மறைச்சிட்டேன்…” என்றாள் தயக்கத்துடன்.
“உன்னைப் பற்றிய உண்மையா? அப்படி என்ன மறைத்திருக்க முடியும். நீதான் உன்னைப் பற்றி எல்லா விவரமும் என்கிட்ட சொல்லியிருக்கயே… உன் முழுப் பெயர் இன்பவல்லி. ஸ்கூல் படிப்போட உன் படிப்பை நிறுத்திட்ட. இப்ப நீ ஒரு செராக்ஸ் கடையில் வேலை செய்ற. உன்னோட அப்பா ஒரு டீ கடை வச்சிருக்கார்.
அம்மா உங்க அப்பாவுக்கு உதவியா கடையைப் பார்த்துக்கிறாங்க. உனக்கு ஒரு தம்பி இருக்கான். இப்ப அவன் படிச்சிட்டு இருக்கான்… இப்படி எல்லாமே நீ என்கிட்ட சொல்லிட்ட இன்பா. அதே மாதிரி நானும் என்னைப் பற்றி எல்லாம் உன்கிட்ட சொல்லியிருக்கேன். இதுக்கு மேல் நீ என்கிட்ட மறைக்க என்ன இருக்கு?” என்று இலகுவாகவே கேட்டான்.
சொல்ல வேண்டிய முக்கியமானதை மட்டும் நான் உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன் என்று நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன் விழியன்?
நீங்கள் வேணுமானால் என்கிட்ட ஒளிவு மறைவு இல்லாமல் பழகியிருக்கலாம். ஆனால், நான் அப்படி இல்லையே… என்று கலங்கிப் போனாள் பெண்ணவள்.
என்னிடம் உருகி உருகி காதல் சொன்னவன், தான் உண்மையைச் சொன்ன பிறகு என்ன செய்வான்?
என்ன செய்வான்? என்னை ஏமாற்றிவிட்டாய் என்பான். அருவருப்பாகப் பார்ப்பான். உன்னைப் போய்க் காதலித்தேனே என்று காறி உமிழ்வான். வேற என்ன செய்வான்? என்று நினைத்து மறுகினாள்.
“என்ன இன்பா, பதிலே காணோம்?” அவளின் வெகுநேர அமைதியைப் பார்த்து கேட்டான்.
அவனுக்கு என்ன பதில் அனுப்புவது என்று அவளுக்குப் புரியவே இல்லை. குழம்பி போய் இருந்தாள்.
ஊனே… உயிரே…
உன் பூமுகம் காணாமல்
ஊண் உறக்கம்
துறந்தேனடி நானே!
உன் பூமுகம் காணாமல்
ஊண் உறக்கம்
துறந்தேனடி நானே!
என்று உளற ஆரம்பித்தான்.
அதற்கும் அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை.
எப்போதும் அவன் இப்படி உளறி வைத்தால், ‘ஒரே ஒரு முறை தெரியாத்தனமா உங்க உளறலை கவிதைன்னு சொல்லி பாராட்டிட்டேன். அதுக்குத் தண்டனையா எப்பவும் இப்படியா விழியன் மொக்கை போடுவீங்க? தாங்கலை…’ என்று அவனைக் கேலி செய்பவள், இன்று அமைதியாக இருந்தது அவனுக்கு உறுத்தலை உருவாக்கியிருந்தது.
“என்ன இன்பா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே, “அம்மா சத்தம் போடுறாங்க. நான் அப்புறம் பேசுறேன் விழியன்…” என்று சொல்லி அப்போதைக்குத் தப்பித்துக் கொண்டாள்.
அதன் பிறகும் அவன் பேசிய போதெல்லாம், ஏதாவது ஒரு காரணம் சொல்லி புகைப்படம் அனுப்பாமல் தள்ளி போட்டாள்.
எவ்வளவு நாட்கள்தான் அவனும் பொறுப்பான்?
ஒரு நாள் 'நீ இன்னைக்குப் போட்டோ அனுப்பியே ஆகவேண்டும்' என்று பிடிவாதம் பிடித்தான்.
அவளுக்கும் அவனிடம் உண்மையை மறைக்க மறைக்கக் குற்றவுணர்வு கூடிக் கொண்டே போக, உண்மையைச் சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
“நீங்க கேட்ட என் போட்டோ நான் அனுப்புறேன் விழியன். ஆனால், அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.
“என்ன இன்பா, என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? சொல்லுடா…” என்று அவன் பாசமாகக் கேட்டு வைக்க, அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
“விழியன், நான் உங்களை ஏமாத்த நினைக்கலை. உங்ககிட்ட நான் உண்மையாத்தான் பழகினேன்…” என்று அவள் ஆரம்பிக்க,
“அதை நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா? என் இன்பா பற்றி எனக்குத் தெரியாதா?” என்று அவன் கேட்க, உடைந்து அழ ஆரம்பித்தாள்.
கண்ணில் இருந்து விடாமல் கண்ணீர் கசிய, மனம் நிலையில்லாமல் துடித்தது.
இந்தக் காதலுக்கு தான் தகுதியானவள் தானா? தன்னையே கேட்டுக் கொண்டாள்.
அதற்குள் அவளிடமிருந்து பதில் வராமல், “இன்பா, எங்கடா போய்ட்ட? ஏதோ சொல்ல வந்தியே, சொல்லுடா?” என்று அவன் உருக, இங்கே அவளின் உள்ளமும் உருகியது.
இவனின் இந்த அன்பை இனியும் தான் ஏமாற்றினால் தன்னை விட இழிவானவள் யாரும் இருக்க முடியாது என்று நினைத்தவள், கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்டாள்.
அடுத்த நொடி யோசிக்காமல் அவளின் முழுப் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட்டு, அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
மாநிறத்தில் அவள் முகம் லட்சணமாகவே இருந்தது. ஆனால், அவளின் இரண்டு கைகளிலும் ஊன்றுகோல் இருக்க, அப்படியே பார்வையைக் கீழே இறக்கினால், சேலை மறைத்த கால் பகுதியில் ஒரு கால் மட்டும் வெளியே தெரிய, இல்லாத இன்னொரு காலுக்குப் பதிலாக அங்கே ஊன்றுகோல்தான் இருந்தது. அதுவே அவளின் ஒரு கால் இல்லாத குறையை அவனுக்கு இந்நேரம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும். இதோ, இப்போது என்னை விட்டு போய் விடப் போகிறான்.
துடிக்கும் மனதுடன், அவனுக்கு அனுப்பி வைத்த தன் புகைப்படத்தை தானே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள் இன்பவல்லி.
அவள் எதிர்பார்த்தது போலவே, அவள் புகைப்படத்தை அனுப்பி வைத்த சில நொடிகளில் ஆப்லைன் போயிருந்தான் சுடர்விழியன்.
போய்விட்டான்! இதோ போயே விட்டான்! இனி என் பக்கமே திரும்பி பார்க்க மாட்டான்.
அவ்வளவுதான்! அவனின் உருகலும் அவ்வளவுதான்! அவனின் காதலும் அவ்வளவுதான்! இனி என்ன செய்யப் போகிறேன் நான்? என்று துடித்தவள், அந்த மெத்தை இல்லாத இரும்பு கட்டிலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள் இன்பவல்லி.
பின் ஏதோ நினைத்துக் கொண்டது போல், வேகமாக எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, தன் கைப்பேசியை அணைத்து, உயிர்ப்பித்துப் பார்த்து, உண்மையாகவே அவன் விலகிப் போய்விட்டானா? என்று தவிப்புடன் தேடிப் பார்த்தாள்.
அவன் ஆன்லைனில் இல்லவே இல்லை. தொடர்புக்கு அப்பால் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் இதுவரை நடந்ததை எல்லாம் நினைத்து நினைத்து அழுதாள்.
இரண்டு நாட்கள் சென்றிருந்தன.
கண்களில் ஜீவனைத் தொலைத்து தான் வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடையில் அமர்ந்திருந்தாள் இன்பவல்லி.
கடையின் முதலாளி மதிய உணவு உண்ண அவரின் வீட்டிற்குச் சென்றிருக்க, தான் கொண்டு வந்த உணவை உண்ண பிடிக்காமல், மேஜையில் தலையைச் சாய்த்து அமர்ந்திருந்தாள்.
ஜீவனைத் தொலைத்த கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் கட்டுபாடு இல்லாமல் பெருகி கொண்டே இருந்தது.
வேலைக்கு வந்த இடத்தில் அழக்கூடாது என்று அடக்கி வைத்ததில் கண்களில் வலி எடுத்ததுதான் மிச்சம்.
கண்களின் வலியை விட, மனத்தின் வலி பெரிதாக இருந்தது.
இதயத்தை யாரோ கசக்கி பிழிவது போல் வலி எடுக்க, அந்த வலியின் அளவை அவளால் தாளவே முடியவில்லை.
இந்த வலியிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவளுக்குப் புரியவே இல்லை.
எப்படிக் காதல் சொன்னான்? எப்படி உருகினான்? தான் பேசாமல் இருந்தாலே தவித்துப் போனானே? இப்போது என்னை மொத்தமாகத் தவிக்க வைத்து விட்டானே… என்று அவள் உள்ளம் துடியாய்த் துடித்தது.
அந்த மதியவேளையில் கடைக்கு யாரும் வராததால், தன்னில் மூழ்கிப்போய் மேஜை மீது சாய்ந்திருந்தவளை, “ம்க்கும்…” என்ற கனைப்புச் சத்தம் கலைத்தது.
யாரோ வாடிக்கையாளர் என்று வேகமாகத் தலையைத் தூக்கிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
“ஹலோ, நான் யாருன்னு தெரியுதா மேடம்?” என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியபடி கேட்டான் அவன்.
அவனைத் தெரியாமல் இருக்குமா? இந்த நொடி கூட அவனை நினைத்து தானே உருகி கொண்டிருந்தாள்.
“வி…விழியன்…” என்று திணறலுடன் அழைத்தவள், தடுமாறி மேஜையைப் பிடித்தபடி எழுந்து நிற்க முயன்றாள்.
“உட்கார். எனக்கு மரியாதை எல்லாம் வேண்டாம்…” என்று இலகுவாகச் சொன்னவன், சற்று தள்ளி இருந்த ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து அவளின் எதிரே போட்டு அமர்ந்தான்.
அவனை நேரில் பார்த்ததும், அவளின் கண்கள் கலங்கின. அதை மறைக்க முயலாமல், “நீ… நீங்க எ…எப்படி இங்க?” என்று தவிப்புடன் கேட்டாள்.
அவளுக்குப் பதில் சொல்லாமல் அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.
“உருகி, உருகி லவ் சொன்னவன், விட்டுட்டு போயிட்டான்னு நினைச்சியோ?” என்று நிதானமாகக் கேட்டான்.
“வி…விழியன்…” என்றவளால் வேறு பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.
அவள் அப்படித்தானே நினைத்தாள். அதை எப்படி மறுக்க முடியும்?
“உன்னோட இந்தக் கண்ணீர் அதைத்தான் சொல்லுது…” என்று தானே பதிலை சொன்னான்.
என்ன பேசுவாள் அவள்? என்ன பேச முடியும்? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு! தலையைக் குனிந்து கொண்டாள்.
“இன்பா, என்னைப் பார்!” அழுத்தமாக அழைத்தான்.
அவள் மெல்ல நிமிர்ந்து பார்க்க, “நான் சும்மா பொழுது போக்குக்காக உன்கிட்ட என் காதலை சொல்லலை. நீ எப்படி இருப்பன்னு தெரியாத போதே, உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். உருகி உருகி காதலிச்சிட்டு நான் எப்படி உன்னை விட்டுட்டு போவன்னு நினைச்ச?” என்று தீர்க்கமாகக் கேட்டான்.
“நீ…நீங்க… என் போட்டோ பார்த்ததும் ஆப்லைன் போயிட்டீங்க…” என்றவள் கண்ணிலிருந்து சட்டென்று ஒரு துளி நீர் இறங்கி கன்னத்தில் விழுந்தது.
அவள் சற்றும் எதிர்பாராமல் அவள் கன்னத்தில் விழுந்த கண்ணீரை கையை நீட்டி துடைத்துவிட்டான் சுடர்விழியன்.
அவள் விழிகளை விரித்துப் பார்க்க, “இந்தக் கண்ணீர் தேவையே இல்லை…” என்றவன், “அன்னைக்கு நானா போகலை. என் நெட்தான் என்னைப் போக வச்சிருச்சு…” என்று சொல்லி தோளை குலுக்கியவனை, நம்ப முடியாமல் பார்த்தாள்.
“எனக்குத் தெரியும், இந்த நேரத்தில் என்னை ஒரு ஏமாற்றுக்காரனா? சுயநலவாதியா நினைச்சிருப்பன்னு. என் இன்பாவை ஏமாற்றினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம் தானே?” என்று கேட்டான்.
‘இப்போது இப்படி உருகுபவர், அன்று ஏன் அப்படி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டு போனாராம்?’ என்று அவளின் மனம் சுணங்கவே செய்தது.
“அன்னைக்குத்தான் ஆன்லைனில் ஒரு படம் பார்த்தேன். அதிலேயே என் நெட் காலியாகிருச்சு. இருந்த கொஞ்ச நெட்டும், உன் போட்டோவை பார்த்துட்டு இருக்கும் போதே மொத்தமாகக் கட் ஆகிருச்சு. உன்கிட்ட சொல்லியிருக்கேன் தானே? எங்க ஊர் சின்னக் கிராம். அங்கே ரீசார்ச் எல்லாம் பண்ண முடியாது. பக்கத்து டவுனுக்கு வந்துதான் பண்ண முடியும். அதான் உடனே ரிசார்ச் பண்ணிட்டு உன்கிட்ட பேச முடியலை…” என்று அவள் கேட்காமலே விளக்கம் சொன்னான்.
அப்படியே இருந்தாலும், மறுநாள் ரீசார்ச் செய்துவிட்டு பேசியிருக்கலாமே? இரண்டு நாட்களாக ஏன் பேசவில்லை? என்ற கேள்வி அவளின் மனத்தில் ஓடியது.
அவள் கேள்வி புரிந்தது போல் அவனே சொன்னான்.
“மறுநாள் ரீசார்ச் செய்யக் கிளம்பிய போதுதான் எங்க நெருங்கிய சொந்ததில் ஒருவர் இறந்துட்டாங்கன்னு தகவல் வந்தது. அதுக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம். அதில் எனக்கு ரீசார்ச் பண்ண எல்லாம் நேரமே இல்லை. இரண்டு நாள் அங்கேதான் இருந்தேன். உன்னைப் போட்டோவில் அப்படிப் பார்த்த பிறகு, என்னால் அதுக்கு மேல சேட்டில்(chat) பேசிக்கலாம்னு பொறுமையா இருக்க முடியலை. உன்கிட்ட நேரில் பேசினால்தான் சரியா வரும்னு உடனே கிளம்பி வந்துட்டேன்…” என்று சொல்லி முடித்தான்.
“எ… எனக்கு ஒரு கால் இல்லை…” என்று தடுமாற்றத்துடன் முனகினாள்.
“அதைத்தான் நான் நீ அனுப்பிய போட்டோவிலேயே பார்த்தேனே…” என்று அவன் இலகுவாகச் சொல்ல, அவள் விழிகளை விரித்தாள்.
“நான் உன்னை இப்பவும் ஊனும் உயிருமாகக் காதலிக்கிறேன் இன்பா. உன்னால் நம்ப முடியாமல் போனாலும் இதுதான் நிஜம்! உன் உடல் ஊனத்தைப் பார்த்ததும், என் காதலில் ஊனம் வந்தால், நான் உன் ஊனை(உடலை) மட்டுமே காதலிக்கிறேன்னு அர்த்தமாகிடும்.
உன் ஊன், உயிர், உள்ளம், உன் எல்லாமும் எனக்கு வேணும் இன்பா…” என்றவன், தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.அவனின் கை மேல் தன் கையை வைத்தவள், கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் பெருகியது.
அது ஆனந்த கண்ணீர்!
ஊனே… உயிரே…
உன்னில் நானே!
என்னில் நீயே!
நம்மில் நாமே!
உன்னில் நானே!
என்னில் நீயே!
நம்மில் நாமே!
சில நொடிகளில் அவனின் முகநூல் பக்கத்தில் இடம் பிடித்தன இவ்வரிகள்!
Previous thread





























