Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 370
- Reaction score
- 566
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 12
கருத்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.
இத்தனை காலங்கள் கழித்து பிறந்த வீட்டு சொந்தங்களை பார்த்ததும் மனைவி முன்னுக்கு பின்னாக நடந்து கொள்கிறார் என்று தான் மோகனசுந்தரம் கொஞ்சம் அமைதியாக இருந்தார்.ஆனால் நாளாக நாளாக நவநீதத்தின் செயல்கள் எல்லாம் முற்றாக மாறி வருவதை கண்டு கொண்டார். அப்படிதான் தன் செல்வ நிலைக்கு நிகரானவர்களை மட்டும் இப்போது அருகில் சேர்த்துக் கொள்வது அப்பட்டமாக தெரிந்தது.
மாளிகை போல புது வீடு கட்டி கட்டி முடிக்கப்பட்டது.கிரகப்பிரவேச பத்திரிக்கை வைக்க கூட பழைய தெருவுக்கு வரவில்லை நவநீதம் .புது வீடு கட்ட தொடங்கியதுமே தெற்கு தெருவில் ஒரு வீடு பார்த்து குடி போய்விட்டார்கள்.பக்கத்தில் இருந்து கொண்டு புது வீட்டு வேலைகளை கவனித்து கொள்ள அது தான் இலகுவாக இருக்கும் என்று தான் சொல்லி புறப்பட்டார்.
விழாவுக்கு வந்த அன்னக்கொடி குடும்பத்தையும், பழைய தெருவில் வசித்தவர்களையும் கண்டு கொள்ளவில்லை நவநீதம். தன் அண்ணனையும் தனக்கு வேண்டியவர்களை எல்லாம் ஓடி ஓடி கவனித்துக் கொண்டிருந்தார்.இவர்களை எல்லாம் வா என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்.
மோகனசுந்தரம் மட்டும் சிரித்த முகமாக எல்லோரையும் வரவேற்று உள்ளே கூட்டிக்கொண்டு போனார். இவர்கள் ஒரு பக்கம் உட்கார்ந்து கொள்ள, நவநீதத்தின் சொந்தங்கள் இன்னொரு பக்கம் என இரண்டு பிரிவுகளாக தான் அங்கே அமர்ந்திருந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்து கல்லூரிக்கு லீவு போட்டு வந்திருந்த அன்னக்கொடி ,கேசவன்,மீனா மூவருக்கும் ஏன்டா வந்தோம் என்பது போல் ஆகிவிட்டது.
எல்லோரும் சேர்ந்து வாங்கி வந்திருந்த இரண்டு பெரிய வெள்ளி குத்து விளக்குகளை மட்டும் சிரித்த முகமாக வாங்கி கொண்ட நவநீதம் சாப்பிடுங்கள் என்று யாரையும் பார்த்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.
நடப்பதை எல்லாம் பார்த்து வெறுத்து போனது வந்தவர்களுக்கு. சரவணனும் பூங்கொடியும் சாப்பிடாமல் கிளம்புவதை பார்த்து நண்பர்கள் மூவரும் சொல்லாமல் கொள்ளாமல் அவர்களுடன் சேர்ந்து கிளம்பி விட்டார்கள்.
மோகனசுந்தரம் வந்தவர்களை சாப்பிட அழைத்து செல்லும் போது தான் அன்னக்கொடியும் ,அவள் அக்காவும் கூட வந்த நண்பர்களும் அங்கே இல்லை என்று கண்டு கொண்டார்.
ஹாலில் அமர்ந்திருந்த அன்னக்கொடியையும் மற்றவர்களையும் பார்த்து தலை அசைத்து புன்னகை முகத்துடன் வரவேற்றான் ராஜன்.அவ்வளவு தான். அதன் பின் அவனை காண முடியவில்லை. மகன் அவர்களுடன் உட்கார்ந்து விட கூடாது என்று நினைத்த பெற்றவள் அதை பார், இதை பார் என்று அவனுக்கு வேலை ஏவி கொண்டிருந்தார்.
இங்கே நடப்பது எதுவும் ராஜனின் கவனத்திற்கு வரவில்லை.அம்மாவின் இந்த மாற்றம் அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.தந்தை அழைத்து சொல்லும் வரை நடந்தது எதுவும் அவனுக்கு தெரியாது.
யாரிடமும் எதுவும் பேசாமல் பெரிய ஹாரியரில் உணவை வாங்கிக் கொண்டு தன் வண்டியில் ஏறி அன்னம் வீடு நோக்கி கிளம்பினான் அவன்.
வழியில் இருந்த ஒரு ஹோட்டலில் இருந்து அன்னக்கொடியும் மற்றவர்களும் வெளியே வருவதை கண்டு கோபம் பொத்துக்கொண்டு வந்தது அவனுக்கு.
“எங்க வீட்டு பங்சனுக்கு வந்துட்டு சாப்பிட பிடிக்கலையா உங்களுக்கு? சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்து ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா…? என்று கோபமாக சரவணனிடம் கேட்டபடி அன்னக்கொடியையும் அவள் நண்பர்களையும் முறைத்து வைத்தான்.
“உங்க வீட்டு பங்சனுக்கு வந்த எங்களை வாங்கன்னு சொன்னியா…? இல்ல சாப்பிட சொல்லி ஒரு பேச்சுக்காச்சும் கேட்டியாடா ராஜன்? கோபமாக கேட்டாள் பூங்கொடி.
“என்ன சொல்ற? அதிர்ச்சியுடன் வந்தது அவன் குரல்.
அன்னை எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தது தான் அவன் மற்ற வேலைகளில் கவனமாக இருந்தான்.ஆனால் தான் பார்த்துக் கொள்வதாக சொன்ன அன்னை எதற்கு இப்படி நடந்து கொண்டார் என்ற குழப்பம் அவனுக்கு.
“ஏன் உங்களை கூப்பிடனும்….. நீங்கெல்லாம் நம்ம வீட்டு ஆளுங்க தானே?
“உங்க வீட்டு ஆளுங்களா…..? சரிதான்… அப்போ நம்ம தெருவில இருந்து வந்தவங்க,மாணிக்கம் தாத்தா இவங்க எல்லாரையும் ஏன் உள்ள வாங்கன்னு சொல்லல உங்கம்மா?
முன்பு வசித்த வடக்கு தெருவின் பெரிய மனிதன் மாணிக்கம் தாத்தா தான். எந்த வீட்டில் விசேஷம் நடந்தாலும் முதல் அழைப்பு அவருக்கு தான்.அவரை கூட அன்னை உள்ளே அழைக்கவில்லையா என்ற யோசனை அவனுக்கு.
எல்லாரையும் வீட்டுக்கு வரவைத்து அவமானபடுத்தியது போல் நடந்து கொண்ட அன்னையின் செயலை மன்னிக்க முடியவில்லை ராஜனால்.
“இனி நாம எல்லாரும் இப்படியே கொஞ்சம் தள்ளி இருந்துக்கலாம் வரதா….” முன்னால் வந்து ராஜனை பார்த்து சொன்னாள் அன்னக்கொடி.
நடப்பது எல்லாவற்றையும் பார்த்து நவநீத மணி குடும்பத்து உறவு இனி சரியாக வராது என்று அவளுக்கு புரிந்து விட்டது.
“ஏய் என்னடி பேச்சு இது…? இந்தா இதை பிடி.... எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வந்திருக்கேன்.... வீட்டுக்கு போய் சாப்பிடுங்க …..”
“வேண்டாம்….” என்று தலையாட்டி மறுத்தாள் அவள் .
“எங்க வீட்டு சாப்பாடு மட்டும் தான் வேணாமா இல்ல நானுமா…? என்று கேட்ட ராஜனின் குரலில் இருந்த வருத்தம் அப்பட்டமாய் தெரிந்தது எல்லோருக்கும்.
“அப்படி நாங்க யாரும் நினைக்கல அண்ணா.ஆனா இனி என்ன வருமோ என்று தான் பயமா இருக்கு….” என்றான் கேசவன்.
“அப்படி எல்லாம் ஆக விட்டுட மாட்டேன் கேசவா . அவளை சாப்பாட்டை வாங்க சொல்லுடா….”
“வாங்குடி அன்னம்….” என்றாள் மீனா.
அவனிடம் கையை நீட்டினாள் அன்னக்கொடி.
பையை கொடுக்காமல் அவள் முகத்தை தான் பார்த்தான் ராஜன் .தான் பேசாமல் சாப்பாட்டை கொடுக்க மாட்டான் என்று சரியாக கண்டு கொண்டாள் அவள்.
“அதை கொடுடா இப்படி…..”என்று சாப்பாட்டு பையை பறித்துக்கொண்டு கூட வந்தவர்களுடன் சிறிது தூரம் நடந்தவள் திரும்பி நின்று ராஜனை தான் பார்த்தாள்.
“நாம அந்த ஓட்டு வீட்டில பக்கத்து பக்கத்திலயே இருந்திருக்கலாம்.நீங்க ஏன்டா இப்படி ஊரிலேயே பெரிய வீடு கட்டி பெரிய காசுக்காரங்களா மாறிட்டீங்க?இப்ப பாரு எல்லாமே மாறிப்போச்சு….” கண்களில் நீர் நிறைய சொல்லிக்கொண்டே வீடு நோக்கி நடக்க தொடங்கியவளை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜன் .
வீட்டுக்கு வந்தவன் அங்கு நடப்பவைகளை நன்றாக உற்று கவனிக்க தொடங்கினான்.
தன் பக்க சொந்தங்கள் கிளம்பும் போது சிரித்தபடி விடை கொடுத்த அன்னை, அன்னக்கொடியின் பெற்றவர்களும் அவர்களுடன் வந்தவர்களும் கிளம்பும் போது வெளியில் கூட வரவில்லை என்று சரியாக கண்டு கொண்டான்.
வேகமாக அவர்களுக்கு அருகே விரைந்து வந்தான் அவன்.
“அத்தை ,மாமா சாப்பிட்டீங்களா….?மாணிக்கம் தாத்தா சாப்பிட்டாச்சா? எல்லாரும் சாப்பிட்டீங்களா….? எல்லோரிடமும் அக்கறையோடு கேட்டான்.
“நாங்க எல்லாரும் சாப்பிட்டாச்சுப்பா….இங்க ஏதோ வித்தியாசமா தெரியுது…..என்னன்னு எனக்கு சரியா சொல்ல தெரியல.மதியாதார் தலைவாசல் மிதிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.அது இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சுது. நாங்க கிளம்புறோம்….” வருத்தமாக அவனிடம் சொன்ன மாணிக்கம் தாத்தா ,கூட வந்த எல்லாரையும் அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அத்தை ,மாமா இருவரும் தன்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை என்று அப்போது தான் கண்டு கொண்டான் அவன்.என்ன நடந்திருக்கும் என்று என்ற யோசனை தான் அவனுக்கு.
விழாவுக்கு வந்திருந்த சுகந்தி,சுமதியை சபையில் காட்டி இவர்கள் இருவரையும் தான் இரண்டு மகன்களுக்கும் கட்டி வைக்க போவதாக சொல்லிக்கொண்டிருந்தார் நவநீதம் என்று ராஜனுக்கு தெரியாது.அவர் சொன்னதை எல்லாம் அன்னக்கொடியும் அவளை சேர்த்தவர்களும் கேட்டு விட்டார்கள் என்று அவனுக்கு எங்கே தெரிய போகிறது.
மறக்காமல் அன்னக்கொடிக்கு போனில் அழைத்து தான் கொடுத்த உணவை எல்லாரும் சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டுவிட்டு தான் சாப்பாட்டில் கை வைத்தான் ராஜன் .
தாய் வீட்டு சொந்தங்கள் வீடு முழுவதும் அலைந்து கொண்டிருப்பதை பார்க்க பற்றி கொண்டு வந்து அவனுக்கு.அன்று இரவே அவசரமாக வேலைக்கு கிளம்ப வேண்டும் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி கோயம்புத்தூர் வந்துவிட்டான் .
அதன் பின் வந்த ராஜனின் போன் அழைப்புக்கள் எதையும் அன்னக்கொடி கண்டு கொள்ளவில்லை என்பது தான் உண்மை.
வீடு குடி போய் ஒரு மாதத்தில் வரும் நல்ல நாளில் இரண்டு மகன்களுக்கும் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று அடுத்த குண்டை போட்டார் நவநீதமணி.
“எதுக்கு ரெண்டு பேருக்கும் ஒண்ணா பண்ணனும். அதெல்லாம் வேணாம்.தியாகு ஊருக்கு வர இன்னும் மூணு மாசம் இருக்கு.அவனுக்கு மட்டும் நிச்சயம் பண்ணிக்கலாம்.ராஜன் சீக்கிரம் அவுஸ்ரேலியா கிளம்ப போறான்.அவன் போய் வரட்டும் அப்புறம் பார்க்கலாம்….” என்று சொன்னார் ராஜனின் தந்தை.
“அதெல்லாம் வேண்டாம் ரெண்டு பேருக்கும் ஒண்ணாவே நிச்சயதார்த்தம் வச்சுக்குவோம்….” என்று முரண்டு பிடித்தார் மனைவி.
உடனே மகனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டார் தந்தை.
அன்னக்கிளியின் கல்லூரி படிப்பு இப்போது இறுதி வருடத்தை நெருங்கி விட்டது. இன்னும் மூன்று வாரங்களில் புது கிளாஸ் போக இருக்கிறாள்.
மறுபக்கம் ஊர் திருவிழா தொடங்கிவிட்டது. திருவிழாவின் சிறப்பே முகூர்த்த நாளில் அம்மனுக்கு நடக்கும் திருக்கல்யாணம் தான்.அம்மனுக்கு கல்யாணம் நடக்கும் போது பெண்கள் எல்லோரும் கோவிலில் வைத்து புது தாலி கயிறு மாற்றிக் கொள்வார்கள்.
திருவிழாவுக்கு ஊருக்கு வந்திருந்தான் ராஜன்.இரண்டு நிச்சயதார்த்தங்களையும் ஒன்றாக செய்வதில் மும்முரமாக இருக்கும் தாயின் எண்ணத்தை சரியாக கண்டு கொண்டான் அவன். அண்ணனுக்கு போன் போட்டு தன் திட்டத்தை சொல்லி விட்டான். ஜாக்கிரதையாக எல்லாவற்றையும் செய்து கொள் என்று தன் ஆதரவை தம்பிக்கு தெரிவித்தான் அண்ணன் தியாகு.
ராஜனின் சம்பள பணத்தை அவன் பெயரிலும், தியாகுவின் பணத்தை அவன் பெயரிலும் வங்கியில் சேமிப்பாக போட்டு விடுவார் தந்தை.மகன் தன் எண்ணத்தை சொன்னதும் அவன் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்து விட்டார் தந்தை.அதோடு சிறு வயதிலிருந்து போட்டு வைத்த போஸ்ட் ஆபீஸ் சேமிப்பும் கையில் சேர்ந்து கொண்டது.
தந்தையை கூட்டிக்கொண்டு போய் அன்னக்கொடியின் தந்தையை மளிகை கடையில் வைத்து சந்தித்து வந்தான்.கோவில் அம்மனின் திருக்கல்யாண நாளும் விடிந்தது.
தொடரும்...........
Previous thread





























