Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 375
- Reaction score
- 571
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 16
ரிசப்ஷன் முடிந்து இரண்டு வாரங்கள் ஓடி போய்விட்டது.அப்படியிருக்கும் போது. திடீரென்று ஒரு நாள் மதியம் ராஜன் ஆபீஸில் மயக்கம் போட்டு விழுந்து வைத்தான் . ரமேஷும் கூட இருந்தவர்களும் சேர்ந்து அவனை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். உடனே அன்னக்கொடிக்கு தகவல் வந்துவிட்டது.
அடித்து பிடித்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள் அவள்.பிளட் பிரஷர் அதிகமாகி தலை சுற்றி மயக்கம் போட்டிருக்கிறான் என்பது தான் முக்கிய காரணம்.இவனுக்கு எதுக்கு பிரஷர் வந்துச்சு….? அடுத்தவங்களுக்கு பிரஷர ஏத்திவிடுறது தானே இவன் வேலை என்ற யோசனை அவன் மனைவிக்கு.
மனைவியை பார்த்ததும் கட்டிலில் படுத்திருந்த ராஜன் களைப்போடு புன்னகைத்து வைத்தான்.
“பிரஷர் கூடி மயக்கம் போடுற அளவுக்கு என்னாச்சு….? சார் எப்பவும் அடுத்தவங்களுக்கு தானே பிபி ஏத்தி வைப்பீங்க …..”
“யாருக்கு தெரியும்…..”என்றான் சோர்வோடு.
“யாருக்கு தெரியுமென்னா….எதுக்கு மயக்கம் போட்ட? நீ என்ன மாசமாவா இருக்க மயக்கம் போட ….”
“என்னடி இப்படி எல்லாம் பேசுற….?என் பொண்டாட்டி என்னை கிட்டவே சேர்த்துக்கிறதில்ல தெரியுமா.அவ ஒரு ரூமுக்கு போய் தனிக்குடித்தனம் பண்றா. இதுல நான் எப்படி மாசமா இருக்க…. ?
“ச்சீ என்ன போச்சுடா இது….” கணவனை முறைத்து வைத்தாள் அன்னக்கொடி.
“ஏய் நீ தான்டி கேட்ட…”
“அது….அது… எதோ ப்ளோவில வந்துடுச்சு விடு…”
“எதுக்கு இப்படி பிரஷர் கூடுச்சு உனக்கு….?ஆபிஸில ஏதாவது ப்ராப்ளமா….என்ன…?
“அதெல்லாம் இல்லடி தங்கம் …”
“அப்புறம் என்னாச்சு வரதா…?
கணவன் தங்கம் என்று சொன்னதும் தானாகவே எப்போதும் போல வரதா என்று பதில் சொன்னாள் அன்னம்.
“நான் சரியா தூங்கி பல நாளாச்சு.அந்த ஸ்ரெஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். பீர் குடிச்சா தூக்கம் வரும் என்று கொஞ்ச நாளா குடிச்சு வேற பாத்தேன். அதுவும் சேர்ந்து தான் இப்படி எல்லாம் ஆயிடுச்சு போல…..” குடிகாரன் என்று அதற்கு வேறு கத்தி வைப்பாளோ என்ற பயத்தில் மெதுவாக வந்தது அவன் குரல்.
“எதுக்கு தூக்கம் வரல…. என்னடா மனுஷன் நீ….இதுல ஆல்கஹால் வேற….வெட்கமா இல்ல உனக்கு….இருடா உன்னை பற்றி எல்லோருக்கும் சொல்லி வைக்கிறேன் ராஸ்கல்…. ” கோபத்துடன் அவனை முறைத்தாள்.
“ஹேய் என்னடி மொடா குடிகாரன் மாதிரி பேசுற….சும்மா ஒரு டின் பீர்ல என்ன வந்திட போகுது சொல்லு….”
“ஏன்டா பீர்ல என்ன ஆல்கஹால் சேர்க்காமல் பன்னீரா கலந்து விக்கிறாங்க…..குடிகாரன் பேச்சை பாரு. வெளிநாடு போயிட்டு வர்றவங்க எல்லாம் இப்படி எதாவது ஒன்னு பழகிட்டு தான் தான் திரும்பி வருவீங்களாடா கருமம் புடிச்சவனே….” என்று சண்டை போட்டாள் அவனிடம்.
“அப்படி எல்லாம் இல்லடி…..” என்று இன்னும் ஏதோ சொல்ல வந்தான் ராஜன்.
“சிஸ்டர் என்ன சொல்றான் உங்க புருஷன்…”என்றபடி ரமேஷும் கூட வந்த மற்ற இரண்டு பேரும் சேர்ந்து உள்ளே வந்தார்கள். அன்னக்கொடி வந்ததும் அவர்கள் எல்லாம் ரூமை விட்டு வெளியே போய் நின்றிருந்தார்கள்.
“என்ன நடந்துச்சு ரமேஷ் அண்ணா….?
“லஞ்ச் பிரேக் சாப்பிட போகலாம் என்று சொன்னான். பாத்தா மயக்கம் போட்டு தரையில விழுந்து கிடக்கிறான் உன் வீட்டுக்காரன்.காலைல அப்படி என்ன பயமுறுத்தி அனுப்பி வச்ச இவனை… ”
“யாரு உங்க ஆள நான் பயனுறுத்துறேனா…?இது உங்களுக்கே நியாயமா இருக்கா….”
“ஏம்மா இவன் உன் ஆளு மட்டும் தான்.இவன் என் ஆளுன்னு நீ சொல்றதை எல்லாம் என் பொண்டாட்டி கேட்டா பத்து நாளைக்கு சாப்பாட்டை கட் பண்ணிடுவா.அது உனக்கு நல்லாவே தெரியும்.இனி என்னை இப்படி எல்லாம் டென்ஷன் பண்ணி வைக்காத மா…. ”
ராஜன் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டுக்கு ரமேஷ் குடும்பமாக குடியேறி வந்ததும் இரண்டு குடும்பத்து நெருக்கமும் அதிகமாகி விட்டது.அதிலும் அன்னக்கொடி சட்டென்று எல்லோருடனும் பழகி விடுவாள்.ரமேஷின் மனைவி சரண்யா,மகன் அஸ்வினுடன் தனியாக வெளியே போய் வரும் அளவுக்கு பழக்கமாகி விட்டாள் இப்போது.
“டேய் நான் இப்ப பேஷண்டுடா.என்னை கொஞ்சம் அமைதியா இருக்க விடுங்கடா . நீங்க எல்லாம் ஆபீஸ் போய் சாப்பிடுங்க.என் பொண்டாட்டி என்னை பாத்துப்பா.அவ கூட இருக்கா தானே….நீங்க கிளம்புங்க….”என்று அவர்களை அனுப்புவதில் குறியாக இருந்தான் ராஜன்.
“பொண்டாட்டியை பார்த்ததும் எங்களை கழட்டி விடுற பாத்தியா.சரி சரி நாங்க கிளம்புறோம்…” என்று விடைபெற்றார்கள் அவர்கள்.
திரும்பவும் ராஜனை டாக்டர் வந்து பார்த்து மருந்து கொடுத்து ,ஹெல்தி லைப் ஸ்டைலுக்கு பழக்க படுத்தி கொள்ள சொல்லி அறிவுரை கூறினார்.மாலை வரை ஹாஸ்பிட்டலில் தங்கியிருந்துவிட்டு தான் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் அவர்.
கணவனும் மனைவியும் வீடு வந்து சேர இரவு எட்டு மணியாகிவிட்டது.இன்னும் நான்கு நாட்களில் முழு உடலுக்குமான பரிசோதனைக்கு போக வேண்டும்.
“தங்கம் ரச சாதம் பண்ணி தரியா.அது மட்டும் தான் சாப்பிடணும் போல இருக்கு…..”என்று சொல்லியபடி தன் அறைக்குள் குளித்து விட்டு வெளியில் வந்தான் ராஜன்.
“சாதம் தான் வச்சிருக்கேன்.ரசம் வச்சதும் சாப்பிடலாம்….”சொல்லியபடி சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
கணவன் ஏன் பல நாள் தூக்கமில்லாமல் இருக்கிறான் என்ற யோசனை தான் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.புது வீட்டுக்கு வந்த நாள் முதலாக நிம்மதியான உறக்கம் தான் அவளுக்கு.கணவனுடன் வந்து விட்டேன் என்ற மன நிம்மதி தான் இப்படி அசந்து தூங்க காரணம் என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
தாலியை பறித்து போன நாளிலிருந்து தூக்க மாத்திரையின் உதவியால் தான் அவள் இரவுகள் கடந்து போனது.ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை. கணவன் இல்லாமல் தனியாக இருக்கிறாள் என்ற ஊர் பேச்சுக்கள் வேறு அவளை தினமும் வாட்டி வதைத்தது உண்மைதான்.
ராஜன் வந்து கூப்பிட்டதும் அவனுடன் வரமாட்டேன் என்று அவள் வாய் மட்டும் தான் சொன்னது. ஆனால் மனமோ அப்பாடி என்னை தேடி வந்துவிட்டனே என்று பேரானந்தம் கொண்டு துள்ளியது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
தான் நன்றாக உண்டு உறங்கி கொண்டிருக்க, இன்னொரு அறையில் ஒரு காலத்தில் உயிராக நேசித்தவன் தூக்கமின்றி தன்னை வருத்திக் கொண்டு, ஹாஸ்பிடல் வரை போய் வந்திருக்கிறான் என்று வேறு குற்ற உணர்ச்சியாக இருந்தது அவளுக்கு.
அதுவும் மன அழுத்தத்தில் பீர் குடித்து தூங்க முயன்றிருக்கிறான் என்று அவன் சொன்னதை கேட்டதும் தாளவில்லை அவளுக்கு.மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று வசனம் பேசி, பிள்ளைகளை எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் நன்றாக வளர்த்திருந்தார் நவநீதம்.அந்த விஷயத்தில் அவரை குறை சொல்ல முடியாது.அப்படி இருக்க இதையெல்லாம் மாமியார் குடும்பம் அறிந்தால் என்ன சொல்வார்களோ என்று கலக்கமாக இருந்தது அவளுக்கு.
கணவனிடம் மனம் விட்டு பேசி, அவன் உடல் நிலை சரியாக தானும் சேர்ந்து உதவ வேண்டும் என்று முடிவாக நினைத்துக் கொண்டாள்.இரவு உணவை முடித்துக்கொண்டு பால்கனியில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள் இருவரும்.ராஜன் கூட மனைவியுடன் மனம்விட்டுப் பேசி விடும் எண்ணத்துடன் தான் அங்கு வந்து உட்கார்ந்து கொண்டான்.
கணவன் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டவள் அவன் கையை பிடித்து வைத்துக் கொண்டாள்.
உட்கார்ந்தபடியே சரிந்து அவள் தோளில் தன் தலையை சாய்த்துக் கொண்டான் கணவன்.
“சரி சொல்லு எதுக்கு தூங்காமல் இப்படி ஆச்சு ….என்ன பிரச்சனை உனக்கு…இன்னைக்கு ரெண்டு பேரும் மனம் விட்டு எல்லாம் பேசிக்கலாம் சரியா….”
“என்னடி நான் ஹாஸ்பிடல்ல படுத்ததும் நீயா என் கையை பிடிக்கிற.உன்னோட தோளில சாஞ்சுகிட்டா எதுவும் சொல்லாமல் அமைதியா இருக்க.ரொம்ப பயந்திட்டியா இல்ல பாவம் பையன் என்று இரக்கப் படுறியா …”
“அதெல்லாம் இல்ல…நீ ஹாஸ்பிட்டல்ல படுத்துட்டுடா உன் பேங்க் பேலன்ஸ் எல்லாத்தையும் சுருட்டிக்கலாம் என்ற பிளான் மட்டும் தான்டா எனக்கு ….”
“கேடி நீயாவது உண்மையை ஒத்துகிறதாவது….”
“சரி சொல்லு சீரியஸ்ஸா உனக்கு என்ன பிரச்சனை?நான் இங்க வந்தது உனக்கு புடிக்கலையா…?அது தான் உனக்கு இப்படி ஆச்சா? என்று தன் கேள்வியில் குறியாக நின்றாள்.
“கொஞ்சம் நிறுத்துறியா…..எப்ப பாரு என்னை தப்பவே புரிஞ்சுப்பியா.உனக்கு நல்ல விதமா யோசிக்கவே வராதா...." என்றான் கோபமாக.
“எதுக்கு கோவப்படுற கூல் கூல்….” என்று சமாதானமாக சொன்னாள்.
“நீ என்னோட வந்தப்புறம் தான் இரவில கொஞ்சம் நிம்மதியா ஃபீல் ஆச்சு. என் பிரச்சனை என்னன்னு சொல்லுவேன்.அப்புறம் தள்ளி எல்லாம் உட்கார கூடாது ப்ராமிஸ்….”என்று தன் கையை நீட்டினான்.
“சரி சரி ப்ராமிஸ்….”என்று அவன் கை மேல் தன் கையை வைத்தாள் மனைவி.
“நான் சரியா தூங்கி பல வருஷமாச்சு தங்கம்….நாலு வருஷமா நான் நானா இல்லை.இதுல எப்படி எனக்கு தூக்கம் வரும் நீயே சொல்லு….”
‘இது என்ன புதுசா? என்ற யோசனையோடு அவனை பார்த்தாள்.
“அது உன்னை கேட்காமல் தாலி கட்டி ,அதை எங்கம்மா கழட்டி எடுத்தது கூட தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து என்னை கடத்திட்டு போனாங்க.உன்னை திரும்ப வந்து பார்க்க முடியாமல் ஓடி போயிட்டேன்….”என்று தயங்கியபடி அவள் முகத்தை பார்த்தான்.
“என்ன மயக்க மருந்து கொடுத்து கடத்தினார்களா …..?என்று அதிர்ந்து போனாள் அவள்.யாரும் அவனுக்கு நடந்த கொடுமைகளை இதுவரை அவளிடம் சொல்லியிருக்கவில்லை. பெற்ற தாயும், தாய்மாமனும் செய்யும் வேலையா இது என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டாள் அவள்.
“ஏன் உனக்கு எதுவும் தெரியாதா….”
“இல்ல….உங்கம்மா அப்படி பண்ணும் போது நீ எங்க போயிட்ட என்ற கோபத்துல நான் யாரையும், எதுவும் கேட்டுகல….”
“அதனால தான் என்னை பாக்கவே கூடாதுன்னு நினைச்சியா…”
‘ஆமாம்’ என்று தலையை மட்டும் ஆட்டினாள் அவள்.
தன்னை கடத்தியது, அங்கிருந்து தப்பி வந்தது என்று நடந்தவற்றை மனைவியிடம் ஒப்புவித்தான் ராஜன்.
“கல்யாணம் மட்டும் பண்ணிட்டு அவுஸ்ரேலியா போயிடலாம்.திரும்பி வந்து மிச்சம் எல்லாம் பாத்துக்கலாம் என்று மட்டும் யோசிச்சேனே தவிர, இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைச்சு கூட பாக்கல சாரிடி…..”
அவனுக்கு ஆறுதல் சொல்வது போல மற்ற கையையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“உனக்கு தாலி கட்டி உன்னையும், அத்தை மாமாவையும் நிம்மதி இல்லாமல் பண்ணிட்டேன்.மன்னிச்சிருடி….இதையெல்லாம் நினைச்சா மனசு ஒரு மாதிரி ஆயிடும்.அப்புறம் எப்படி சரியா தூங்க முடியும் ….”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல….அது முடிஞ்சு போச்சு….இப்ப நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு போதும்….இன்னும் மனசை போட்டு குழப்பி எதையாவது இழுத்து வச்சுக்காத ப்ளீஸ்…..”
“இல்லடி உன்னை விட்டுட்டேன் தானே.ஊருக்கு வந்ததும் உன்னை தேடி பெங்களூர் வந்துட்டேன்.ஆனா எந்த மூஞ்சிய வெச்சுட்டு உன்னை வந்து பார்க்க. ஆபிஸ் வேலைய பாத்துட்டு ஊருக்கு கிளம்பினா பிளைட்டில் எனக்கு பக்கத்துல நீ .உன்னை இறுக்கி கட்டி புடிச்சு என் கைக்குள்ள வைச்சிருக்கணும் போல தோணிச்சு.ஆனா என்ன உரிமையில கேட்கறதுன்னு தெரியல.இப்ப கூட உன்னை கட்டிக்க தோணுது.ஆனா என்ன சொல்லுவியோ என்று தயக்கமா இருக்குடி…..”என்று குரல் கலங்க சொல்லியபடி பாவமாக அவளை தான் பார்த்தான் .
“நான் எப்போ என்னை கட்டிக்க வேணாம் என்று சொன்னேன்….” என்று சொன்னவள் தயக்கமின்றி கணவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் அன்னக்கொடி.
தொடரும்......
Previous thread
Next thread