• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
114
Reaction score
138
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 1

சென்னையின் அந்தப் பரபரப்பான மாலை நேரம். அடையாறு சிக்னலில் நின்றிருந்த கார்களுக்குள் ஒன்றில்,

"குட் ஈவ்னிங் சென்னை! நான் உங்க ஆர்ஜே மித்ரன் பேசுறேன். இன்னைக்கு நம்ம எஃப்.எம்ல பார்க்கப்போற டாபிக்... மௌனம். சில நேரங்கள்ல நாம பேச நினைக்கிற வார்த்தைகளை விட, பேசாம விடுற மௌனத்துக்கு அதிக அர்த்தம் இருக்குல்ல? அதுவும் காதல்ல மௌனம்னு வந்துட்டா... அதுக்கு ஒரு தனி ஆழம் உண்டு. அந்த மௌனத்தையே ஒரு மியூசிக்கா மாத்திட்டா எப்படி இருக்கும்? இதோ, காலத்தால் அழியாத இந்த அழகான பாட்டு உங்களுக்காக!" எனும் அந்தத் துள்ளலான குரலைத் தொடர்ந்து, "மௌனமே பார்வையாய்..." பாடல் மெல்ல ஒலிக்கத் தொடங்கியது.

மாலையில் சூட்டைத் தணிக்கும் வண்ணம் சிறு சிறு துளிகளாக மழை மேகத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த கணம், அந்தப் பாடல் ஒலிக்கும் பொழுது காரிலிருந்தவர்களை அந்த வானொலி தொகுப்பாளனின் குரலும், அந்தப் பாடலும் அந்தப் பரபரப்பான சிக்னல் நெரிசலையும் மறந்து, ஒரு நிமிடம் தங்களுக்குள் லயிக்கச் செய்தது.

அந்தக் காரினுள் அமர்ந்திருந்த நறுமுகை காரின் ஜன்னலை மெல்லக் கீழே இறக்கி விட, அவளின் அப்பா நெடுமாறன் அன்பான கண்டிப்புடன், "புது மழைடா... உடம்புக்குச் சேராம போகப் போகுது" என்றார்.

"அப்பா சிச்சுவேஷன் செமயா இருக்குல்ல.. அதுவும் ஆர்ஜேயோட குரல் அப்படியே நெஞ்சைக் கவ்வுது" என்று தந்தையிடம் சொன்னவள் தலையை மெதுவாக வெளியே விட எத்தனிக்க,

"தலையை உள்ளே எடுடா.. எவனாவது அடிச்சிட்டு போகப்போறான்" என்றார் நெடுமாறன்.

"அப்பா... அவள் ஆர்ஜே மித்ரனோட தீவிர விசிறி!" என்று இடையில் புகுந்து தந்தைக்கு ஞாபகப்படுத்தினாள் நறுமுகையின் அக்கா யாழினி.

நறுமுகை தொலைக்காட்சியில் நேரத்தை வீணடிக்காமல், காலையிலும் மாலையிலும் வானொலியில் மித்ரனின் நிகழ்ச்சிகளைத் தவறவிடாமல் கேட்பது அவளது தந்தை நெடுமாறனும் அறிந்ததுதான். மகளின் அந்த ரசனை அவருக்குப் பிடித்திருந்தாலும், இப்போது மழையில் இப்படித் தலையை வெளியே நீட்டி லூசுத்தனம் செய்வதைக் கண்டு அவருக்கு எரிச்சல் தான் மேலோங்கியது.

"சிக்னல் விழுந்துடுச்சு ஜன்னலை மூடுமா... மழையில நனைஞ்சு சளி பிடிச்சுக்கிட்டா, அப்புறம் அந்த டாக்டர்கிட்ட பேசும்போது இன்னும் அதிகமா திக்கப் போகுது" என்று அவர் எரிச்சலுடன் சொல்ல, நறுமுகை அரைமனதுடன் கண்ணாடியை ஏற்றிவிட்டாள்.

"நல்ல பாட்டு... எல்லோரும் கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன்" என்று கணவருக்குப் பக்கத்திலிருந்த நறுமுகையின் தாய் பூங்குழலி சொல்ல, அந்தக் காரின் உட்புறம் ஒரு அழகான அமைதி குடிபுகுந்தது. வெளியே மழையின் வாசமும், உள்ளே இளையராஜாவின் இசையும் இணைய, நறுமுகை மட்டும் அந்த மௌனத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

நறுமுகை படிப்பில் கெட்டிக்காரி என்றாலும், பதட்டம் ஏற்படும் பொழுது அவளது வாய் வார்த்தைகள் அவளுக்கே பயனற்றதாக மாறிவிடும். அந்தளவுக்கு முன்னால் இருபவருக்கு ஒன்றுமே புரியாமல் திக்கும்.

"எல்லாச் சூழ்நிலையையும் நிதானமா சமாளி, பதட்டப்படாதே" என்று அக்கா முதல் அப்பா வரை அடிக்கடி சொன்னாலும், சின்ன விஷயத்திற்கே அவளுக்கு இதயம் வெளியே வந்து குதிக்கவா என்பது போலத் துடிக்கத் தொடங்கிவிடும்.

இன்னும் மூன்று மாதத்தில் அவளுக்குக் கல்லூரியில் இறுதியாண்டு வைவா எனப்படும் நேர்முகத் தேர்வு இருக்கிறது. எங்கே அங்கே குழுமியிருக்கும் பேராசிரியர்களைக் கண்டு பதறி, அந்தப் பரீட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் நறுமுகைக்கு ஏற்பட்டிருந்தது.

யாழினியிடம் பேசும் பொழுது, அதை வெளிப்படுத்தும் வண்ணம்"எனக்கு இப்பவே பயமா இருக்குக்கா. தியரி எக்ஸாம்னா நான் பாட்டுக்குத் தனி ஆளா உக்காந்து எழுதிருவேன். ஆனா நூறு பேர் முன்னாடி நின்னு பேசணும்னா... என் தொண்டை அப்படியே அடைச்சுக்கும். வார்த்தையே வராது" என்று அடிக்கடி சொல்லி ஆதங்கப்பட்டாள்.

யாழினியும் தன்கையை உட்கார வைத்து நிறைய அறிவுரைகளையும் புத்திமதிகளையும் சொல்லியும் அவை பயனற்றுப் போனதால், யாழினி தந்தையிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து, "அப்பா... இவளைப் பேசாம ஒரு ஸ்பீச் தெரபிஸ்ட்கிட்ட கூட்டிக்கிட்டுப் போவோம்." என்றாள்.

நெடுமாறன் முதலில் தயங்கி, 'இவ்வளவு காலமும் அது எதுக்கு? அவதான் சாதாரண நேரங்கள்ல சரியாத்தானே பேசுறா?' என்று அவர் நினைக்க,

யாழினியோ "அப்பா... இப்போ மட்டும் இல்ல, நாளைக்கு இவ வேலைக்குன்னு போகும்போது நிறையப் பேர் முன்னாடி பேச வேண்டி வரும். அப்பவும் இதே மாதிரி பதற்றப்பட்டா அவ கரியரே வீணாகிடும். நாம இவ்வளவு நாள் காலம் தாழ்த்தினதே பிழை" என்று தங்கைக்காக வாதாட,

மகளின் எதிர்காலத்தின் நன்மைக்காக நெடுமாறன் மருத்துவரிடம் காட்டிவிடுவோம் என மனமுவந்து சம்மதித்தார்.

அதற்காகத்தான் முழு குடும்பமுமாக அந்தப் பேச்சுப் பயிற்சியாளரைப் பார்க்கக் கிளம்பி விட்டார்கள்.

அந்தப் பயிற்சிக் கூடமே பேச்சுப் பயிற்சிக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான். அதன் உரிமையாளர் டாக்டர் சகாயன். அவன் ஒரு ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜிஸ்ட். பேச்சு வராமல் தவிக்கும் குழந்தைகளுக்கும், திக்குவாய், பேச்சுக் குறைப்பாடு உள்ளவர்கள் அனைவருக்கும் பேச்சைக் கொடுக்கும் ஒரு நிதானமான மருத்துவன். முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் சகாயன், தீர்க்கமான கண்களும், மெல்லிய புன்னகையும் கொண்ட வசீகரமான இளைஞன்.

அந்த டாக்டர் சகாயனிடமே யாழினி தன் தங்கைக்கான முன்பதிவைச் செய்திருந்தாள். காரில் தாயை இருக்கச் சொல்லிவிட்டு, தந்தையையும் தங்கையையும் அந்தக் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றாள் யாழினி.

வரவேற்புப் பகுதியில் இருந்த பெண்ணிடம் நறுமுகையின் சந்திப்பு நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டவள், "அப்பா, வாங்க... நாம எல்லாம் பக்கத்திலே இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டு வருவோம். அவள் டாக்டரைப் பார்த்திட்டு போன்பண்ணட்டும், நாங்க வந்து கூட்டிட்டு ரெஸ்டாரண்ட் போகலாம்" என்றாள்.

நெடுமாறன் தன் சின்ன மகள் தனியாகச் சமாளிப்பாளா என்று தயங்கி நிற்க, "நீங்க அம்மாட்ட போங்க அப்பா... நான் இவளை விட்டுட்டு வாறேன்" என்று தந்தையை முதலில் அனுப்பி வைத்தவள், தங்கையிடம் திரும்பி, "நீ ஒன்னும் சின்னப் பாப்பா இல்லைதானே? நீயே உனக்காகப் பேசு, அப்போதான் உன் பிரச்சனை சரியாகும்" என்றாள்.

போகத் தயாரான அக்காவின் கையை இறுக்கப் பற்றிக்கொண்ட நறுமுகை, "நீயும் என்கூட வாக்கா..." என்று அவளைப் பிடித்து வைத்துக் கொள்ள முயன்று கெஞ்சினாள். "எதுக்கு? உனக்காக மவுத் பீஸ் வேலையைப் பார்க்கவா? திக்கித்தான் பேசணும்னாலும் நீயே பேசு. அப்பத்தான் உன் பிரச்சனை அந்த டாக்டருக்குத் தெரியும்" என்று யாழினி மறுக்க, நறுமுகை "ப்ளீஸ்..." எனக் கண்ணாலேயே கெஞ்சினாள்.

"எக்ஸ்கியூஸ் மீ..." என்று அங்கே ஒரு கம்பீரமான ஆணின் குரல் கேட்க, இருவருமே பாதையை மறித்து நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது அப்பொழுதுதான் புரிந்தது. யாழினி தங்கையின் கையை இழுத்துத் தன்பக்கம் நிறுத்தி வழிவிட்டபடி, "சாரி டாக்டர்!" என்றாள்.

ஒரு மருத்துவர் என்பதற்குரிய எந்த அடையாளமும் இல்லாமல், மிகச் சாதாரணமாக நின்றிருந்த தன்னை இவள் எப்படித் துல்லியமாகக் கண்டுபிடித்தாள் என்ற வியப்பில் சகாயன் தன் புருவங்களை உயர்த்தி பார்க்க,

"ஹாய் டாக்டர்! நான் யாழினி. இது என் தங்கச்சி நறுமுகை. உங்க வெப்சைட்டைப் பார்த்துதான் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்தேன். அதுல உங்க போட்டோ இருந்தது டாக்டர்... அதான் டக்குனு கண்டுபிடிச்சுட்டேன்" என்று அவள் விளக்க, சகாயன் லேசாகப் புன்னகைத்தான்.

அவன் நறுமுகையைப் பார்த்தான். அவள் தன் அக்காவிடம் அத்தனைத் தெளிவாக பேசுவதைக் கவனித்தவன், "நறுமுகை நல்லாத்தானே பேசுறாங்க... அப்புறம் எதுக்கு என்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட்?" என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டான்.

"இல்ல டாக்டர்... இப்போப் பேசுவா, ஆனா பதட்டம் வந்தா கொஞ்சம் திக்க ஆரம்பிச்சுடும்" என்று சொன்ன யாழினி, தன் தங்கையின் பிடியிலிருந்த கைகளை விலக்கிக் கொண்டு, "டாக்டர், நான் இங்க இருந்தா இவ கதைக்க மாட்டா... நான் பிறகு வாறேன்" என்று சொல்லிவிட்டு யாழினி அங்கிருந்து நழுவினாள்.

நறுமுகை தன்னைத் தனியே விட்டுவிட்டுப் போகும் அக்காவைப் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றிருக்க, சகாயன் அவளைப் பார்த்து, "உள்ளே வாங்க நறுமுகை..." என்று அழைத்தான்.

இவ்வளவு நேரமும் அவனின் குரலினை நறுமுகை ஆழமாகக் கவனிக்கவில்லை. ஆனால், இப்போது அவள் பெயரை அவன் உச்சரித்த விதம், அந்தக் குரலின் ஏற்ற இறக்கம்... அவள் காதுகளில் மின்னல் வெட்டியது!

கடந்த இரண்டு வருடங்களாக வானொலியில் அவள் கேட்டு ரசிக்கும், அவளின் ஒவ்வொரு காலைப் பொழுதையும் உற்சாகப்படுத்தும் அந்த மாயக் குரல் இது! "எப்படிச் சாத்தியம்? ஆர்ஜே மித்ரனா இங்கே டாக்டராக?" என்பது போன்ற ஒரு திகைப்பில் அவள் நிற்க, நறுமுகையின் அதிர்ச்சியைப் புரிந்து கொள்ளாத அவன், "என்ன?" என்பது போலத் தன் புருவங்களை உயர்த்தி வினவினான்.

நிச்சயமாக இது அவன்தான்! அவன் புருவம் உயர்த்தும் அழகும், அந்தக் குரலின் காந்த ஈர்ப்பும் அப்படியே வானொலியில் அவள் கற்பனை செய்து வைத்திருந்த மித்ரனோடு பொருந்திப் போனது. அவளது நாவெழும்பி வார்த்தைகள் வர மறுத்து அடம்பிடிக்க, "ஒன்னுமில்லை..." என்பது போல மெல்லத் தலையசைத்துவிட்டு, தன் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த முயன்றபடி, அவனுக்குப் பின்னால் அவனது அறைக்குள் அடியெடுத்துவைத்தாள் நறுமுகை.
 
Last edited:
Next thread

Latest threads

Top Bottom