• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
114
Reaction score
138
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 26

நாட்கள் மிக வேகமாக ஓடி, ஒரு மாதம் என்ற நிலை வந்துவிட்டது.

'இந்த நாட்கள் எப்படி ஓடியது?' என்று கேட்டால், அந்தப் புதுமண ஜோடிகள் நான்கு பேருக்குமே நிச்சயம் தெரியாது. அந்தளவிற்கு அளவற்ற அன்பும் அன்யோன்யமுமாக, நான்கு பேருமே தங்களின் முதல் இரண்டு வாரங்களை மூணாரின் அழகிய சூழலிலும், அடுத்த இரண்டு வாரங்களை ஆனந்தியின் பிறந்த ஊரிலும் கழித்திருந்தார்கள்.

அங்கே உறவினர்களின் வருகை, அவர்களின் வீட்டு விருந்து உபசாரங்கள் என முழுதாக ஒரு மாத காலத்தை எந்தவித அலுப்பும் இல்லாமல் இந்த நாட்கள் அப்படியே விழுங்கிவிட்டன.

ஆனந்தி தன் சொந்த ஊருக்கு வந்து ஒரு வாரம் முடிந்த உடனேயே, கணவன் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்ற கவலையிலேயே, "நான் திரும்பவும் நம்ம வீட்டுக்கே போகப் போறேன்..." என்று நடராஜனிடம் பிடிவாதம் பிடித்தார்.

அப்போதுதான், நடராஜன் அங்கே நிலவும் பிரச்சினையின் தீவிரத்தை அவருக்கு மெதுவாக, பக்குவமாக எடுத்துச் சொன்னார். தாங்கள் ரிதன்யாவின் பிரச்சினையைச் சமாளிக்கப் பணத்தைத் திரட்டுவதில் ஐம்பது சதவீதம் (50%) வெற்றி பெற்றுவிட்டதாகவும், நிதர்சன் காசிப்பிள்ளையிடம் தற்பொழுது ஒரேடியாகத் தூக்கிக் கொடுப்பதற்கு இப்பொழுது கொஞ்சம் பணம் பற்றாக்குறையாக இருப்பதாகவும் கூறி, அவர் தங்களுக்கு இரண்டு கிழமைக்கு நேரம் கேட்டிருக்கிறார். அவர் தரும் பணம் கைக்கு வருமட்டும் சென்னை வர வேண்டாம் என ஆனந்தியை அங்கேயே தங்க வைத்திருந்தார்.

நேற்றுத்தான் நிதர்சன் காசிப்பிள்ளை முழுப்பணத்தையும் நடராஜனிடம் ஒப்படைத்திருக்க, உடனேயே தன் குடும்பத்துக்கும் தெரியப்படுத்தி, நேற்று இரவுதான் அனைவரும் சென்னைக்குத் திரும்பியிருந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததிலிருந்தே நறுமுகைக்கு ஒரே வாந்தியும் மயக்கமுமாக இருந்தது. உடல் அத்தனை சோர்ந்து போயிருந்தாலும், தனக்குப் பிடித்தமான அந்த 'ஆர்.ஜே. மித்ரன்' குரலையாவது கேட்டுத் தன் சோர்வை மறக்கலாம் என்று கஷ்டப்பட்டு ஹாலில் வந்து உட்கார்ந்திருந்தாள். ஆனால், என்ன துரதிர்ஷ்டமோ... வானொலியில் இன்று அவளுக்குப் பரிச்சயமான அந்தக் குரலுக்குப் பதிலாக வேறு ஒருவருடைய குரல்தான் ஒலித்துக் கொண்டிருந்ததே தவிர, அவள் ஆவலோடு எதிர்பார்த்த குரல் ஒலிக்கவே இல்லை.

அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழும்பி வந்த யாழினி, தன் தலையைத் தேய்த்தபடியே நறுமுகையின் அருகில் வந்தமர்ந்து, "என்ன நறுமுகை... உன் டேர்ன் முடிஞ்சதா? நான் இப்பதான் உள்ளே வாந்தி எடுத்து முடிச்சிட்டு வாறேன்..." என்று அலுத்துக் கொண்டாள்.

"எனக்கு அதெல்லாம் பேஸ்ட்டை வாயில வைக்கும் போதே ஆரம்பிச்சிடுச்சு அக்கா... நேத்து நைட் சாப்பிட்ட மிச்சம் சொச்சம் எல்லாம் அப்படியே வெளியே வந்திடுச்சு" என்று நறுமுகை தன் பங்கிற்குப் புலம்பினாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், சமையலறையிலிருந்து கையில் இரண்டு டம்ளர்களோடு வந்த ஆனந்தி, "இந்தாங்க... ரெண்டு பேரும் முதல்ல இந்தப் பாலைக் குடிங்க" என்று நீட்டினார்.

"ஐய்யோ... எனக்கு வேண்டாம் மாமி! இந்த விடியற்காலையில பால் வாடைக்கே எனக்குத் திரும்பவும் வாந்தி வரும் போல இருக்கு" என்று யாழினி தன் மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு அலறினாள்.

"எனக்கும் இப்போதைக்கு பால் வேண்டாம் மாமி... எனக்கு நல்லாச் சூடா ஒரு டீ இருந்தா கொடுங்களேன்" என்றாள் நறுமுகை ஏக்கமாக.

"அதெல்லாம் ஒன்னும் முடியாது... விடிஞ்சதும் உடம்புக்குப் பால் தான் நல்லது, அதை நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் குடிச்சே தீரணும்" என்று அன்பாக மிரட்டினார் ஆனந்தி.

"அம்மா... அவங்களுக்குத்தான் இப்போ பால் குடித்தால் வாந்தி வரும்னு சொல்றாங்கள்ள, அப்புறம் ஏன் கட்டாயப்படுத்துறீங்க? அவங்களை விடுங்களேன்..." என்றபடி அங்கே வந்து சேர்ந்தாள் மித்ரா.

"ஓ... நீயும் எழும்பியாச்சா? சரி, உனக்கும் இனிமே விடியக் காலையில பால் தான். இரு, உனக்கும் போய் எடுத்துட்டு வாறேன்" என்று ஆனந்தி மீண்டும் சமையலறைக்குக் கிளம்பப் பார்த்தார்.

"ஏன்... நான் எதுக்காகப் பால் குடிக்கணும்? எனக்கு எப்பவும் போல டீ தான் வேணும்" என்று தன் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு சிணுங்கினாள் மித்ரா.

ஆனந்தி சமையலறை வாசலில் நின்று கொண்டு, "நீ ஏன் குடிக்கணும்னா... என் மருமகள்களைப் பக்கத்துல வச்சுக்கிட்டு உனக்கு மட்டும் நான் தனியா டீ போட்டுக் கொடுப்பேனாக்கும்? இனிமே இந்த வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் விடியற்காலையிலும் சரி, சாயங்காலமும் சரி... பால் மட்டும்தான்! வேண்டாம்னு நினைக்கிற ஆட்கள் பேசாமல் குடிக்காம இருக்கலாம், ஆனா டீ மட்டும் கிடைக்காது" என்று ஒரு செல்லக் கட்டளை போட்டுவிட்டு உள்ளே சென்றார்.

அதே சமயம், வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, யார் என்று யாழினி, நறுமுகை, மித்ரா எட்டிப்பார்க்க நெடுமாறன் வீட்டிலிருந்து அவரும் பூங்குழலியும் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்களைக் கண்டதும் யாழினி ஆச்சரியத்துடன், "என்னப்பா இது? நேத்து நைட்டுதான் அம்மாவும் நாங்களும் சொந்த ஊரிலிருந்து டயர்டா வந்தோம். அதுக்குள்ள இன்னைக்கு விடியற்காலையிலயே நீங்க ரெண்டு பேரும் இங்க வந்துட்டீங்க... எங்களைப் பார்க்காம உங்களால ஒரு நாள்கூட இருக்க முடியலையா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

அதற்கு நெடுமாறன், "அப்படி இருந்தா பரவாயில்லையேம்மா... உன் மாமனார் விடியற்காலையிலயே எனக்குப் போன் பண்ணி, அந்த வெடிகுண்டு எப்ப வேணாலும் வெடிக்கும் போல இருக்கு... நீங்களும் சீக்கிரமாப் புறப்பட்டு நம்ம வீட்டுக்கு வாங்க'ன்னு கூப்பிட்டுட்டார். அதான் பதறி அடிச்சுட்டு ஓடி வாறோம்" என்றார்.

ரிதன்யாவைத்தான் அப்பா 'வெடிகுண்டு' என்று சொல்கிறார்" என்று புரியாதவள் இல்லையே நறுமுகை! ரிதன்யாவை நினைத்தவுடனே மனதுக்குள் ஒரு நொடி இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொண்டது.

தங்கள் வீட்டை ரிதன்யா ஆள்வைத்து வேவுபார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று தான் சகாயன் மூணாரிலிருந்தே இங்கே வர வெளிக்கிட, "நீ வந்தாய் என்றால் எனக்கு கொள்ளிவைக்கிறதுக்கு வா" என்று நடராஜன் கடுமையாக சொன்னதன் காரணமாக, திரும்ப எல்லோரும் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆனந்தியின் ஊருக்குப் போனது.

என்னதான் அவர்களின் வாழ்க்கை சந்தோசமாகச் சென்றுகொண்டிருந்தாலும் ரிதன்யா என்ற முள்ளை நீக்காமல் அந்தச் சந்தோசம் முழுமை பெறாது.

அதனால் இன்றோடு அந்தப் பிரச்சனை முடிவுபெற்றால் சந்தோசம் என்று நினைத்தவள், பொதுவாக இந்த நேரத்தில் ஆண்கள் எல்லோரும் அந்த வீட்டிலிருக்கும் ஜிம் அறையில்தான் இருப்பார்கள் என்று ஒரு முறை மித்ரா சொன்னதால் அங்கே சென்று பார்க்காமல் இருந்தவள், தந்தை சொல்வதைப் பார்த்தால் அவர்கள் வீட்டிலில்லாதது போல இருக்க, "உங்க மாப்பிள்ளைகள், மாமா எல்லாம் எங்கே?" என்று நறுமுகை சுற்றிலும் பார்த்துவிட்டுப் பொறுமையாகக் கேட்டாள்

"அவங்க பேங்க் வரைக்கும் தான் போயிருக்காங்க நறுமுகை... நேத்து நைட்டே நீங்க எல்லாரும் ஊர்ல இருந்து பத்திரமா வந்து சேர்ந்த விஷயத்தை, சொல்ல வேண்டிய ஆட்களுக்குச் சொல்லியாச்சு. இன்னையோட இந்த ரிதன்யா பிரச்சினையை முழுசா பேசி முடிச்சுடணும்னு சம்பந்தி ரொம்ப உறுதியா இருக்கார். அதான் எல்லாரும் காலையிலேயே கிளம்பிட்டாங்க" என்றுநெடுமாறன் விளக்கினார்.
 
Previous thread

Latest threads

Top Bottom