• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
751
Reaction score
4,559
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 16

"சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள்.

"ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுடுங்கண்ணா" என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள்.

அங்குச் சென்று பார்க்க, இவளும் இவளின் மேலதிகாரி மட்டுமே இருக்க, அலுவலகமே வெறிச்சோடி இருந்தது.

'யாருமே இல்லாத கடைல, யாருக்கு டீ ஆத்த இவர் என்னை வரச் சொல்லிருக்காரு' என்று நினைத்தவளாய், கதவைத் தட்டிக் கொண்டு அவர் முன் சென்று நின்றாள்.

"நான் உங்களை என்ன செய்யச் சொன்னா, என்ன செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க? என்னமோ சிலைக் கணக்குலாம் எடுக்கிறீங்களாம்! திருவிழா முடிஞ்ச பிறகு இதுலாம் பார்த்துக்கலாம்னு தானே சொன்னேன்" என்றவர் கேட்கவும்,

'ஆஹா! அந்த மாதவப் பெருமாள் கோவில்ல ஏதோ கருப்பு ஆடு இருக்கு போலயே! அதுக்குள்ள இவருக்கு நியூஸை ஒலிபரப்பு செஞ்சிருக்கே! நேத்து மலை மேல இருக்க சிவன் கோவில்ல கூட தான் செக் பண்ணேன். அதை யாரும் இவர்கிட்ட சொல்லலையா? நேத்து முருகேசன் அண்ணாவை அங்கே கூட்டிட்டு போகலையே! ஒரு வேளை அவர் தான் இவர்கிட்ட என்னைப் போட்டுக் கொடுத்திருப்பாரோ' என்று யோசித்தவளாய் அமைதியாக நின்றிருந்தாள்.

"இந்தக் கணக்கு வழக்குலாம் அப்புறம் பார்க்கலாம். ரெண்டு நாளா திருவிழால ஏதோ கைக்கலப்பு நடக்குதுனு எனக்குக் கம்ப்ளைண்ட் வந்திருக்கு! போய் அது என்னனு பாருங்க" என்று அவளை அனுப்பி வைத்தார்.

அன்றைய நாள் முழுவதும் ஆத்மநல்லூர் கோவிலிலேயே அவளின் மேலதிகாரி அவளுக்கு வேலை மேல் வேலை வழங்கிக் கொண்டு இருந்ததால் இரவு ஒன்பது மணியளவில் தான் வீட்டிற்கே வந்தாள். அதனால் அன்று பிரகலாதப் பெருமாள் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது.

"இந்த ஆபிசர் சார், நான் பிரகலாதப் பெருமாள் கோவிலுக்குப் போகக் கூடாதுனு வேணும்னே இப்படி எனக்கு வேலையைக் கொடுத்துட்டாரோ?" என்று சிந்தித்தவளாய் வீட்டிற்குள் நுழையவுமே, அழைப்பு மணி அடித்து விட்டு உள்ளே வந்தார் செந்தாமரை.

தான் அத்தனை தாமதமாக வந்த போதும், தனக்காக உணவுடன் வந்து நின்ற செந்தாமரை அம்மாவைப் பார்த்து நெகிழ்வாகிப் போனது அவளுக்கு.

"அம்மாவை நினைச்சிட்டே தான் உள்ளே வந்தேன். அந்தக் குறையை நீங்க தீர்த்துட்டீங்கமா" செந்தாமரையின் கைப்பற்றி மனதார உரைத்தவள், "டூ மினிட்ஸ் மா! ஃப்ரஷ் ஆகிட்டு வந்துடுறேன்" என்றவளாய் உள்ளே சென்றாள்.

செந்தாமரை அம்மா மேஜையில் உணவை வைத்துப் பரிமாற, வந்து உண்டாள் தாமரை.

"நீங்க போங்கம்மா! நான் சாப்பிட்டுக்கிறேன். உங்க பையன் ஹஸ்பெண்ட்லாம் உங்களை தேடப் போறாங்க" என்றவள் சொன்னதும்,

"அட நீ வேறம்மா! என் பையனும் புருஷனும் எப்ப வீட்டுக்கு வராங்க போறாங்கனு அவங்களுக்கே தெரியாது. மாசத்துக்கு நாலஞ்சு நாள் தான் வீட்டுல தங்குறதே! அதான் பொழுது போகாம இப்படி என்னால முடிஞ்சதை இங்க வர்ற ஆபிசர்ஸ்க்கு செஞ்சிட்டு இருக்கேன்" என்றார்.

"உங்க பையன் எப்படி பூசாரி ஆனாரு?" எனக் கேட்டாள்.

பிரகலாதப் பெருமாள் கோவில் பற்றி நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்துக் கேட்டிருந்தாள்.

"அதை ஏன்மா கேட்குற! நேத்து உன்னைப் பார்க்க இங்க வந்தாரே ஒரு சாமியார். அவர் தான்மா இதுக்குக் காரணம். என் புருஷன் அரசியல்வாதியா இருந்து நிறைய பாவம் செஞ்சிட்டாராம். அதுக்குப் பரிகாரமா எங்க பையன் நித்தம் கடவுளுக்குப் பணிவிடைச் செய்ற பூசாரியானா தான் என் புருஷனுக்கு எம் எல் ஏ பதவி கிடைக்கும்னு சொல்லி பத்தாவது படிச்சிட்டு இருந்த பிள்ளை மனசை சாமி பக்கம் திசைத் திருப்பி இப்படி அவன் வாழ்க்கையையே நாசமாக்கிட்டாங்க இரண்டு பேரும்" கண்களைத் துடைத்தவாறு வேதனையுடன் உரைத்ததைக் கேட்டு கவலையாகிப் போனது தாமரைக்கு.

தனக்கு மட்டுமே அந்தச் சாமியார் காட்சிக் கொடுத்ததாய் நினைத்திருந்த தாமரைக்கு இவரது பேச்சில் அந்தச் சாமியார் இங்கேயே வாழ்பவர் என்று புரிந்தது. பிறகு எப்படி அன்று சென்னையில் தங்களைச் சந்தித்தார் என்ற கேள்வி எழும்பியது.

"அப்ப அந்தச் சடாமுடி சாமியார் நல்லவர் இல்லயா?" என்றவள் கேட்டதற்கு,

"அந்தச் சாமியாரோட குலதெய்வமே பிரகலாதப் பெருமாள் தான்மா. அவரோட சொந்த வாழ்க்கை பத்திலாம் எதுவும் தெரியாதுமா. ஆனா அந்தக் கோவிலுக்கு கவர்மெண்ட் ஆபிசர்ஸ் எதுவும் ஆக்ஷன் எடுக்க மாட்டேங்கிறாங்கனு கோவத்துல அவர் தான் இந்த ஆபிசரை எல்லாம் எதுவும் செஞ்சி சாகடிச்சிடுறாரோனு எனக்குச் சந்தேகமா இருக்குமா. அதான் நீங்க இங்கே வந்ததுமே ஜாக்கிரதையா இருங்கனு எச்சரிக்கை செஞ்சேன். என் மகன்கிட்ட இதைச் சொன்னதுக்கு என்னை அடிக்கவே வந்துட்டான். அந்தளவுக்கு அவனுக்கு அந்தச் சாமியாரைப் பிடிக்கும். அவரைத் தெய்வமா பார்ப்பான். என்னைப் பொறுத்த வரைக்கும் அந்தச் சாமியார் என் மவன் வாழ்க்கையைக் கெடுத்த பாவி! இனி அந்தச் சாமியாரைப் பார்த்தீங்கனா பேசாதீங்கமா" என்று முடித்தவராய் சாப்பாட்டுப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார் செந்தாமரை.

'என்னது அந்தச் சாமியார் தான் இவங்க சாவுக்குலாம் காரணமா?' நெஞ்சில் கிலிப்பிடித்தது தாமரைக்கு.

'அய்யோ அவர் சொல்லை நம்பித் தானே மாதவன் என் பின்னாடியே வந்திருக்காரு! அவருக்கு எதுவும் ஆகிடக் கூடாது கடவுளே' தன்னை மீறி மாதவனின் நலனை எண்ணி கவலைக் கொண்டது அவள் மனது.

'சக்தி அண்ணா இங்க இறந்த ஆபிசர்ஸ் பத்திலாம் அவர் ஃப்ரண்ட் மூலமா இன்வெஸ்டிகேட் செய்றதா சொன்னாரே! அவர்கிட்ட நாளைக்கு இந்த விஷயத்தைச் சொல்லனும்' என்று மனத்தில் குறித்துக் கொண்டாள்.

தோண்டத் தோண்ட குழம்பிய குட்டையாய் பிரச்சினைகள் தன்னை குழப்பிக் கொண்டிருப்பதை எண்ணி கடுப்பாகிப் போனாள் தாமரை.

'நீ தனியாளு இல்ல தாமரை! உனக்கு உதவி செய்ய சிவநேசன், முத்தரசினு தெய்வீக தம்பதியே இருக்காங்க. கடவுள் அவங்க மூலமா உன்னை காப்பாத்துவாரு! தைரியமா இரு'

வாழ்வில் தன்னை மீறிய பயமும் சங்கடமும் வரும் பொழுது தான், தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்பவர் கூட கடவுளின் துணையைத் தேடி ஓடுவர். அந்நிலையில் தான் இருந்தாள் தாமரை.

இறைவனை வேண்டிக் கொண்டவளாய், தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள்.

இங்கு தாமரை செந்தாமரையிடம் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், சோலைவனத்தில் மாதவன் தங்கியிருக்கும் விடுதியின் வரவேற்பாளினி அலைபேசியில், "யெஸ் மாதவன் சார், என்ன பிரச்சினை? இதோ ரூம் சர்வீஸ் அனுப்பி வைக்கிறேன் சார்" என்று பேசியதைக் கேட்டிருந்த இளவஞ்சி சக்தீஸ்வரனுக்கு இன்ப அதிர்ச்சி.

"ஹே தங்கப்பொண்ணு! அந்த மாதவன் இங்கே தான் தங்கியிருக்காரு போலயே" வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சக்தீஸ்வரன், இளவஞ்சியிடம் மெல்லமாய் உரைத்தான்.

வரவேற்பாளினியிடம் மாதவனின் அறை எண்ணைக் கேட்டறிந்து கொண்டு அவனின் அறைக்குச் சென்றனர் இருவரும்.

அறையின் வாசலில் தம்பதியராய் இருவர் நிற்பதைப் பார்த்து குழம்பியவாறு நின்றிருந்த மாதவனிடம், "தாமரையோட பாதுகாப்பைப் பத்தி உங்ககிட்ட பேசனும்" என்றான் சக்தீஸ்வரன்.

"தாமரையா?" விழிகள் விரிய பார்த்தவன், "உள்ளே வாங்க" என்று இருவரையும் அழைத்து அமரப் பணித்தான்.

ஆத்மநல்லூர் கோவிலுக்கும் தங்களுக்குமான தொடர்பைக் கூறி தங்கள் இருவரையும் அறிமுகம் செய்து கொண்ட சக்தீஸ்வரன், "இங்கே தாமரைக்கு ஏதோ பிரச்சினை வரப் போகுதுனு ஃபீல் ஆகி, நீங்க இங்கே வந்திருக்கிறதா தாமரை எங்ககிட்ட சொன்னாங்க. நீங்க உணர்ந்தது உண்மை தான் மாதவன்" என்று சொன்னதும் பதட்டமடைந்தவனாய்,

"நிஜமாவா? அப்ப என் உள்ளுணர்வு சொன்னது உண்மையா? தாமரைக்கு என்ன பிரச்சினை வரும்னு நினைக்கிறீங்க?" எனக் கேட்டான்.

"அவங்க வந்திருக்க வேலை தான் பிரச்சினையே! கடந்து இரண்டு வருஷத்துல அந்தக் கோவிலுக்கு ஆபிசரா வந்தவங்க மூனு பேரு இறந்திருக்காங்க. இரண்டு பேரு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிருக்காங்க. ஏன் இப்படி நடக்குதுனு நானும் என்னோட வக்கீல் ராஜாவும் மறைமுகமா இன்வென்ஸ்டிகேட் செஞ்சிட்டு இருக்கோம். இது வரைக்கும் இறந்து போனவங்க பேட்டர்ன்ஸ்லாம் செக் செஞ்சதுல இயற்கையா நடந்த மரணம் மாதிரி தான் இருக்கு. அதாவது பாம்பு கடிக்கிறது, திடீர்னு கோவில்ல கூரை இடிஞ்சி விழுறதுனு தான் இவங்க இறப்புக்கான காரணம் சொல்லப்பட்டிருக்கு. ஏதோ தெய்வ குத்தத்துல தான் இப்படிலாம் நடக்கிறதா இங்குள்ள ஊர் மக்கள்லாம் பேசிக்கிறாங்க. அது என்ன தெய்வக் குத்தம்னு கண்டுபிடிக்கிற வேலைல தான் இப்ப நானும் என் மனைவியும் இறங்கியிருக்கோம். அதுக்கு உங்க உதவி வேணும்" என்றான் சக்தீஸ்வரன்.

"தாமரைக்காகனு நீங்க சொல்லும் போது என்னாலான எல்லா உதவியும் நான் செய்வேன் சார்" என்றான் மாதவன்.

"நாளைக்கு தாமரையோட சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலுக்குப் போங்க. அங்கே நீங்களும் தாமரையும் சேர்ந்து தியானம் செய்யுங்க. உங்களுக்கும் தாமரைக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்புனு கேளுங்க. அதுல தான் இங்கே நடக்கிற பிரச்சினைக்கான தீர்வு இருக்குனு எனக்குத் தோணுது. நானும் என் மனைவியும் இப்படித் தான் ஆத்மநல்லூர் சிவலிங்கம் காணாமல் போனதைக் கண்டுபிடிச்சோம். நீங்க இரண்டு பேரும் ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிறவி எடுத்திருக்கீங்க. உங்க தாமரைக்கு எதுவும் ஆகுறதுக்கு முன்னாடி அது என்னனு கண்டுபிடிக்கனும் நீங்க" என்றான் சக்தீஸ்வரன்.

"கண்டிப்பாகச் செய்றேன் சார்" என்றவனாய் அவர்களை வழியனுப்பி விட்டு படுத்தவனுக்கு உறக்கம் கண்களைத் தழுவவில்லை.

அதே நிலையில் தான் உறக்கம் வராது படுத்திருந்தாள் தாமரை.

இன்று காலையில் இருந்து நிகழ்ந்தவைகளை நினைத்துப் பார்த்தவாறு படுத்திருந்தவளுக்கு சக்தீஸ்வரன் இளவஞ்சி ஜோடியின் காதல் கல்யாணக் கதையை நினைத்து மனத்திற்குள் இனம்புரியாத இன்பம் பெருக்கெடுத்தது.

"கட்டிக்கிட்டவரைத் தான் காதலிப்பேன்னு வைராக்கியமா இருந்து, தான் கட்டிக்க வேண்டியவரையே கல்யாணம் செஞ்சிருக்காங்களே இந்த அரசிமா! எவ்ளோ கொடுத்து வச்சவங்கல! எனக்கு ஏன் அப்படி நடக்காம போய்டுச்சு. நான் அவங்க மாதிரி வைராக்கியமா இல்லாம போய்ட்டேனா? அந்தச் சாமியார் பொய்னா, நானும் மாதவனும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ பிறந்தவங்கனு அந்தச் சாமியார் சொன்னதும் பொய்யா? ஆனா மாதவனைப் பார்க்கும் போதெல்லாம் மனசுல வர்ற உணர்வுக்கு காரணம் என்ன? நான் ஏன் மாதவனை முன்னாடியே பார்க்காம போனேன். மாதவனும் ஏன் என்னை முன்னாடியே பார்க்காம வேற கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு? சிவநேசன் முத்தரசி மாதிரி நாங்களும் ஏதோ காரண காரியத்துக்காகப் பிறந்திருக்கோம்னா எங்களுக்கு ஏன் முதல்ல வேறொருத்தங்க கூட கல்யாணமாச்சு?" என்று மாதவனையும் தன்னையும் குறித்து யோசித்தவாறே அப்படியே உறங்கியிருந்தவளின் கனவில் அவளின் கேள்விக்கான விடையைக் காண்பித்திருந்தார் மாதவப்பெருமாள்.

கூம்பு வடிவமைப்பில் கட்டிப்பட்ட குடில் அது!

அதனுள் நான்கு நபர்கள் தங்கக் கூடிய அளவில் விசாலமான அறைகள் இருந்தன.

அங்கிருந்து சில அடி தூர நடையில் இருந்தது பிரகலாதப் பெருமாள் கோவில். அதன் கட்டுமானம் நிறைவடையும் நிலையில் இருந்தது.

அக்கோவிலின் பூசாரியாக நியமிக்கப்பட்டிருந்தவர், தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த மக்களுக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி உரைத்துக் கொண்டிருந்தார். அம்மக்களுள் ஒருவராய் அமர்ந்திருந்தாள் கோதை.
 

Latest threads

Top Bottom