- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,434
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
ஊனே... உயிரே...
தேடல்!கண்களும், மனமும் தேடித் தேடி ஓய்ந்து போயின.
வரவில்லை! வரவே இல்லை!
அவளின் தேடலுக்குரியவன் வரவே இல்லை.
தன் கைப்பேசியின் இணையம்தான் வேலை செய்யவில்லையோ?
நான்கு, ஐந்து முறை கைப்பேசியை அணைத்து அணைத்து உயிர்ப்பித்துவிட்டாள்.
ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
அவளின் கைப்பேசி இணையம் நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்தது.
ஆனால், அவளின் தேடலுக்குரியவன் மட்டும் தொடர்பு எல்லையில் இல்லை என்ற பதிலே அவளுக்குக் கிடைத்தது.
சற்றுமுன் வரை, கை ஓயாமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன், இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால்!
எல்லை இணையத் தொடர்புக்கு மட்டுமல்ல. அவனுக்கும், அவளுக்கும் இடையே உள்ள தொடர்பை கூட, எல்லைக்கு அப்பால் வைத்து விட்டான் என்று சத்தம் இல்லாமல் உரக்க சொன்னது அவனின் இந்த விலகல்.
அவனின் விலகலை தாங்கவியலா இதயம் கசிந்துருக, கண்கள் கண்ணீரை கசிந்தன.
அதிலும் அவள் கண்கள் இதுவரை தன்னுடன் உரையாடிய அவன் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே கசிய, எழுத்துக்களும் கலங்கி போயிருந்தன அவளின் கண்களின் வழியே!
கூடவே அவளின் நினைவுகள் முதல் முறையாக தான் அவனுடன் பேசிய தருணங்களை நினைவு கூர்ந்தன.
முகநூல்! எத்தனையோ நட்பு வட்டத்தை இணைத்திருக்கின்றது. புதிய நட்புகளையும் உருவாக்கி தந்திருக்கின்றது.
அவளும் தன் பள்ளி கால நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவே முகநூலில் நுழைந்தாள்.
கால ஓட்டத்தில் புதுப் புது நபர்களிடமிருந்து நட்பழைப்பு வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள அவள் தயங்கியது உண்டு.
இந்த இணைய வழி தொலை தொடர்பு வழியாக நல்ல விஷயங்கள் பல நடந்தாலும், கெட்ட விஷயங்களும் கலந்தே இருந்ததால், பழக்கம் இல்லாத, ஒரு புதிய நட்பு வட்டத்தை அவளால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனால், அறியாத நட்பு வட்டத்தை நாடாமல் முகநூலில் வரும், கவிதை பக்கங்கள், நகைசுவை பக்கங்கள், சினிமா பக்கங்கள், பாடல் காணொளி பக்கங்கள் என்று அதை மட்டும் பார்த்து, தன் பொழுதுபோக்காகப் பயன்படுத்திக் கொள்வாள்.
அப்படி ஒரு நகைசுவை பக்கத்தை அவள் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், அந்தக் கவிதை அவள் கண்ணில் பட்டது.
அந்த வரிகளுக்கு அவள் வைத்த பெயர் கவிதை. ஆனால், அதை எழுதியவனோ அதற்கு 'உளறல்' என்றுதான் பெயர் வைத்திருந்தான்.
வர்ணம் தீட்டினாள்
தன் வர்ணம் இல்லா
கயல்விழிகளால்!
தன் வர்ணம் இல்லா
கயல்விழிகளால்!
அந்த எழுத்துக்களுக்குக் கீழ், ஒரு பார்வையில்லா பெண் ஓவியம் வரைவது போலிருந்த புகைப்படத்தைப் போட்டிருந்தான் அவன்.
அதற்கு விளக்கமாக, “என்னடா இவன் எப்பவும் மொக்கை ஜோக்தான் ஷேர் பண்ணுவான். இப்ப கவிதைங்கிற பெயரில் புதுசா ஒரு மொக்கையை ஷேர் பண்ணிருக்கானே… இதெல்லாம் கவிதையான்னு நீங்க என்னைக் காறி துப்ப போறீங்கன்னு தெரியும்.
இருந்தாலும், தில்லா இதை ஷேர் செய்த என்னை நீங்க பாராட்டியே ஆகணும். ஏன்னா, இது நானே எழுதிய மொக்கை கவிதையாக்கும்…” என்று எழுதி, கண்ணாடியை போட்டு ஸ்டைல் காட்டும் ஸ்மைலிகளையும் போட்டு வைத்திருந்தான்.
அதற்கு வந்த கமெண்ட்களில் சிலர் அவனைக் கலாய்த்திருக்க, சிலர் கவிஞரே என்று கேலியாக உரைத்திருக்க, அடடே! மொக்கை மன்னன், மொக்கை கவிஞனானே… என்று கிண்டலாகப் பேசியிருந்தனர்.
ஒரு சிலர் நன்றாக இருப்பதாகப் பாராட்டியிருந்தனர்.
அந்த ஒரு சிலரில் அவளும் அடக்கம். ஆனால் அந்த ஒரு சிலரை போல், கமெண்ட்டில் தன் கருத்தை சொல்லாமல், உள்பெட்டியில்(Inbox) தன் கருத்தை தெரிவித்தாள் அவள்.
பொது வெளியில் எப்போதும் அவளுக்குக் கருத்துக்கள் சொல்ல பயமுண்டு. அந்தக் கருத்தை பார்த்துவிட்டு, அந்த முகநூல் பக்கத்திலிருந்து சிலரிடமிருந்து புதியதாக நட்பு அழைப்பு நாடிவருவதை ஒரு முறை அனுபவ பூர்வமாகக் கண்ட பிறகு, பொதுப் பக்கங்களில் கருத்துக்கள் போடுவதில்லை அவள்.
அன்றும் அதே போல் தன் மனத்தை சட்டென்று பாதித்த அந்த வரிகளைப் பற்றி, உள்பெட்டியில் தெரிவித்தாள்.
“ஹாய், இன்னைக்கு நீங்க போட்ட கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க. அதை நீங்க மொக்கைனு சொல்லியிருக்க வேண்டாம்…” என்று பாராட்டையும், வருத்தத்தையும் சேர்த்தே தெரிவித்திருந்தாள்.
சில நொடிகளிலே அவளுக்குப் பதில் வந்தது.
“அட! உங்களுக்குப் பெரிய மனசுங்க! நான் எழுதியதை கவிதைன்னு சொன்னதே பெரிய விஷயம். அதை மனம் திறந்து பாராட்ட இன்னும் பெரிய மனசு வேணும்ங்க. அந்தப் பெரிய மனதிற்கு ரொம்ப நன்றி!” என்ற பதிலை பார்த்துவிட்டு,
“ஏன் தாழ்வாகச் சொல்றீங்க? நிஜமாகவே நல்லா இருந்தது…” என்று பதிலுக்கு அனுப்பினாள்.
எப்போதும் யாரிடமும் இப்படிப் பதிலுக்குப் பதில் வாதாட மாட்டாள். நன்றி என்று வந்துவிட்டால், அத்துடன் பேச்சை முடித்துக் கொள்வாள். ஆனால் இன்று அவனிடம் வாதாட தூண்டியது அவள் மனம்.
“பின்ன என்னங்க? நான் சும்மா, அந்தப் படம் கண்ணில் பட்டதும் கிறுக்கி வச்சேன்…” என்று ஜஸ்ட் லைக் தட் என்பது போல் கையை விரிக்கும் ஸ்மைலி அனுப்பி வைத்தான்.
“உங்களுக்கு அது கிறுக்கலா தெரியுது. ஆனால், எனக்கு அதில் பல அர்த்தம் தெரியுது…” என்றாள் உணர்வு பூர்வமாக!
அவனுக்கு வியப்பு! அவள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட அதில் ஒன்றுமில்லை என்றே நினைத்தான்.
அதனால், “என்னங்க சொல்றீங்க? பல அர்த்தமா? எழுதிய எனக்கே அப்படி ஒன்னும் தெரியலையே?” என்று தன் வியப்பை மறைக்காமல் வெளியிட்டான்.
“அதைச் சொன்னால் புரியாது. விடுங்க… பை!” என்று அவள் அத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.
சட்டென்று அவள் தன் பேச்சை முடித்துக் கொண்டதுடன்தான், அவர்களின் முதல் உரையாடல் ஆரம்பித்தது.
அதன் பிறகு அவளும் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. அவனும் கண்ணியத்துடன் விலகி கொண்டான்.
ஆனால், அதன் பிறகு வந்த நாட்களில் நகைச்சுவை துணுக்குகளை மட்டும் பகிராமல், அவனே எழுதியது என்று ஒரு படம் போட்டு அதுக்குப் பொருத்தமாக நான்கு வரிகள் எழுத ஆரம்பித்தான்.
அவனின் பக்கத்தில் நகைச்சுவை துணுக்குகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவள், அதன்பின் அவன் போடும் அந்தப் படங்களுக்காகவும், அவனின் வரிகளுக்காக மட்டுமே அவனின் பக்கத்தைத் தேடி சென்றாள்.
நடுவில் இரண்டு முறை, அவளைப் பாதித்த வரிகளை உள்பெட்டியில் சென்று பாராட்டினாள். அவனும் பிகு செய்யாமல் நன்றி சொன்னான்.
அப்படியே தொடர்ந்த நிலையில், ஒரு நாள் அவளுக்கு ஒரு புதிய நட்பு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் இருந்தவனின் புகைப்படத்தைப் பார்த்தே அவளுக்கு யார் என்று தெரிந்து போனது. அந்த முகநூல் பக்கத்திற்கு உரியவன்தான். அவன் பக்கத்தில் எப்போதாவது அவன் தன் புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறாள்.
முகநூல் பக்கத்தில் அவன் பெயர் இருக்காது. ஜஸ்ட் பார் ஃபன் என்ற பெயரில் அந்தப் பக்கத்தை வைத்திருந்தான்.
இதில் அவன் புகைப்படத்துடன் அவன் பெயரும் இருக்க, அவனின் பெயரை முதல் முறையாக அறிந்து கொண்ட நாள் அன்று.
சுடர்விழியன்! அவன் பெயரே அவளுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. அவன் கண்களும் அவன் பெயருக்கு ஏற்ற வகையில் சுடர் விட்டுக் கொண்டிருந்தன.
அவனின் தீட்சண்யமான கண்களை அவளையும் மீறி சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள்.
அந்தக் கண்களில் ஒருவித குறும்பும் கூத்தாடிக் கொண்டிருந்தது. அவன் கண்களுக்குப் போட்டியாக உதட்டிலும் குறும்புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.
நல்ல ஜாலியான ஆளாக இருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது.
தாடையில் புற்களாய் தாடி. இது எதற்காம்? என்ற கேள்வியும் அவளுக்குத் தோன்றியது.
அடுத்த முறை அவனிடம் பேசினால் கேட்க வேண்டும்… என்று மனத்தின் ஓரம் குறித்துக் கொண்டாள்.
அவனைப் பற்றி அத்தனை யோசித்தும், அவனின் நட்பு அழைப்பை மட்டும் அவள் ஏற்கவில்லை.
அவனிடம் பேசியிருக்கிறாள்தான். பேசிய வரை அவன் கண்ணியம் மீறவில்லைதான். ஆனாலும், ஏதோ ஒரு தயக்கம்! சட்டென்று அவனைத் தன் நட்பாக இணைத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் கிடப்பில் போட்டாள்.
அவள் உடனே நட்பு அழைப்பை ஏற்றுக் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்திருப்பான் போலும். இரண்டு நாட்கள் பொறுத்தவன், அதற்கு மேல் முடியாமல், முதல் முறையாக அவனே அவளை உள்பெட்டியில் அழைத்தான்.
“தயக்கம் ஏனோ தாரகையே?” என்று மட்டும் முதலில் அனுப்பி வைத்தான்.
அது எதற்கு என்று உடனே புரிந்துவிட்டாலும், அவள் பதில் அனுப்பவில்லை.
“நண்பி நட்பாக மாற இந்த நண்பன் என்ன செய்ய வேண்டுமோ?” என்று அடுத்த முறை அனுப்பினான்.
அதற்கும் மௌனம் சாதித்தாள் அவள்.
நண்பி என்று சொல்லி விட்டு நட்பை கேட்குறான்? என்ன டிசைன் இவன்? என்று மனத்தில் மட்டும் நினைத்துக் கொண்டாள்.
ஏனோ? ஏனோ?
இந்த மௌனம் ஏனோ?
உந்தன் மனம்தான் என்னவோ?
இந்த மௌனம் ஏனோ?
உந்தன் மனம்தான் என்னவோ?
என்று கைக்கு வந்ததை டைப் செய்து அனுப்பி வைத்தான்.
இவன் தன் எழுத்தை மொக்கை என்று சொல்லிக் கொள்வதில் தவறே இல்லை என்று நினைத்து, தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் அவன் இப்படியே அனுப்பிக் கொண்டிருக்க, மூன்றாவது நாள் போனால் போகிறது என்பது போல் அவனின் நட்பு அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
“வாவ்! விடா முயற்சி விஷ்வரூப வெற்றின்னு இதைத் தான் ஊருக்குள் சொல்லுவாங்களோ?” அவள் நட்பில் இணைந்த அடுத்தக் கணம் செய்தி பறந்து வந்தது.
“உங்களுக்கு என்ன வேலையே இல்லையா? வெட்டி ஆபீஷரா? எந்த நேரமும் ஆன்லைனில் சுத்துறீங்க?” என்று கிண்டலாகக் கேட்டுப் பதில் அனுப்பினாள்.
“வாவ்! எப்படிங்க சரியா சொன்னீங்க? நான் வெட்டி ஆபீஷர் தாங்க. அதுவும் வெட்டி வெட்டி பார்க்கிற ஆபீஷர்…” என்றான்.
“வெட்டி வெட்டி பார்க்கிற ஆபீஷரா? அப்படினா?” புரியாமல் வினவினாள்.
“நீங்களே கண்டுபிடிங்களேன்…”
“எனக்குத் தெரியலை…”
“ரொம்ப ஈஸிங்க. அதுவும் பொண்ணுங்க அதிகம் குறை சொல்ற கேட்டகிரியில்தான் என் வேலை வரும்…” என்று பற்களைக் காட்டி சிரிக்கும் ஸ்மைலி வந்தது.
“அப்படிப் பொண்ணுங்க எதைக் குறை சொல்லுவாங்க? எனக்குப் புரியலையே?” குழப்ப ஸ்மைலியை அனுப்பி வைத்தாள்.
“என்னங்க நீங்க இவ்வளவு விவரம் இல்லாமல் இருக்கீங்க? சரி, நானே சொல்லிடுறேன். நான் டெய்லருங்க…” என்று அனுப்பிக் கூடவே கத்திரிக்கோல் படத்தை அனுப்பி வைத்தான்.
அப்போதுதான் அவன் சொன்னதே அவளுக்குப் புரிந்தது.
“இது அநியாயம்! நீங்க இப்படி எந்த நேரமும் போனை பார்த்து துணியை வெட்டி தைச்சுக் குடுத்துட்டு, அது சரியில்லைன்னு சொன்னால் பொண்ணுங்களையே குறை சொல்லுவீங்களா?” என்று போர்க்கொடி தூக்கினாள்.
“ஹையோ! நீங்களும் ஒரு பொண்ணு என்பதை மறந்து போய்ச் சொல்லிட்டேன்ங்க…” என்று பயந்தவன் போல் பாவ்லா காட்ட,
“என்னது?” என்று உக்கிரமாய் இருக்கும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள்.
இப்படி நீண்ட அவர்களின் உரையாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது.
அவ்வப்போது பேசிக் கொள்ள ஆரம்பித்தவர்கள் நாளடைவில், அனுதினமும் பேசிக் கொள்ளும் நிலைக்கு வந்தனர்.
பின் வேலைபளு என்று ஒரு நேரம் குறித்து அந்த நேரத்தில் வழக்கமாகப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
இரவு ஒன்பது மணி அவர்களின் உரையாடல் நேரம். அந்த நேரத்தை அவளுமே ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த எதிர்பார்ப்பை அவள் நட்பு என்ற கட்டுக்குள் அடக்கி வைத்திருக்க, அதை அவன் உடைத்து காதல் என்ற கட்டுக்குள் கொண்டு வந்தான்.
ஒரு நாள் திடீரெனப் பேசிக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று 'ஐ லவ் யூ!' என்று விட்டான்.
அடுத்த நொடி அவளுக்குக் கைகள் நடுங்க ஆரம்பிக்க, கைப்பேசியைப் படுக்கையில் தூக்கிப் போட்டு விட்டாள்.
“ஹேய், பதில் சொல்லுமா…”
“நான் லவ் சொன்னது உனக்குப் பிடிக்கலையா?”
“என் மேல் கோபமா?”
“ப்ளீஸ், பேசேன்…”
அவள் கைப்பேசியைத் தூக்கி போட்டதை அறியாமல், தொடர்ந்து தவிப்புடன் செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான் சுடர்விழியன்.
ஒரு வாரம் ஆனப் பிறகும் அவன் அனுப்பிய செய்திகளைப் பார்க்காமல் தவிர்த்தாள்.
அதைத் தவிர்த்தவளால் அவள் மனம் அவனைத் தேடியதை மட்டும் அவளால் தவிர்க்க முடியவில்லை.
ஆம்! அவள் மனத்திலும் அவன் இடம் பிடித்திருந்தான்.
ஆனால், அதை அவளால் ஒப்புக்கொள்ளத்தான் முடியவில்லை.
எங்கே அவன் அனுப்பிய செய்திகளைப் பார்த்தால் தன் மனம் உடைந்து விடுமோ என்ற பயத்தில் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
ஆனால், ஒரு வாரம் வரைதான் அவளின் கட்டுபாடு எல்லாம். அதற்கு மேல் அவள் மனத்திற்கு அவளாலேயே கடிவாளம் போட முடியாமல் போக, அவர்களின் வழக்கமான நேரத்தில் அன்று இரவு, கைப்பேசியை எடுத்து, அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளைத் திறந்து பார்த்தாள்.
ஒரு வாரமாக அவன் அனுப்பிய செய்திகளைப் படிக்கப் படிக்க அவள் கண்ணில் இருந்து அருவியாய் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“இன்பா, டேய் என்கிட்ட பேசுடா தங்கம்…”
“நீ பேசாமல் இருப்பதை என்னால் தாங்க முடியலை…”
“எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு…”
“நான் அப்படி என்ன தப்பு செய்தேன்னு என்னை இப்படித் தண்டிக்கிற?”
“என் மனதில் நீ இருப்பதைச் சொன்னது தப்பா?”
“உன் மனதை தொட்டு சொல்லு! நீயும் என்னை லவ் பண்ற தானே?”
“இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாதே! நான் நம்ப மாட்டேன்…”
“அப்படி என்ன பிடிவாதம் உனக்கு?”
“ஏய், பேசுடி…”
“உன் மௌனம் என்னைக் கொல்லுதுடி…”
“என்னால் சாப்பிடவே முடியலை இன்பா…”
“உன் நினைப்பாவே இருக்கு…”
“ஒரே ஒரு வார்த்தை என்கிட்ட பேசிடேன்…”
“ஐயோ! செத்துப் போயிடலாம் போல இருக்குடி இன்பா…”
கடந்த ஒரு வாரமாக, அவன் பேசிய காதல் பிதற்றல்கள் கொட்டிக்கிடந்தன.
அவன் கடைசியாகச் சொன்னதைக் பார்த்ததும், அவள் உயிர் துடித்துப் போனது.
கண்ணிலிருந்து கடகடவெனக் கண்ணீர் இறங்கிவந்தது.
அதற்குப் பிறகு அவன் வேறு எந்தச் செய்தியும் அனுப்பவில்லை என்றதும், அவளின் உயிர்நாடியின் தாளம் தப்பியது.
நடுங்கிய விரல்களால், “என்ன பேசுறீங்க நீங்க?” என்று அனுப்பி வைத்தாள்.
அடுத்த நொடி உயிர் பெற்று வந்தவன் போல், “இன்பா… இன்பா… வந்துட்டியாடி? என்னை விட்டு எங்கடி போன? அப்படி என்ன கோபம் உனக்கு? இனிமேல் இப்படிப் போய்ப் பார். நிஜமாகவே நான் செத்து போறேன்…” என்று படபடவென்று செய்தியை அனுப்பி வைத்தான்.
அவனின் ஒவ்வொரு எழுத்திலும் தெரிந்த காதலில், அவளின் ஊனும், உயிரும் துடித்தது.
“ப்ளீஸ், இப்படிப் பேசாதீங்க…” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் எழுதி அனுப்பி வைத்தாள்.
“அப்படித்தான் பேசுவேன். என்னை விட்டுப் போனால் நான் அப்படித்தான் பேசுவேன். அந்த அளவுக்கு நான் உன் மேல் உயிரே வச்சுருக்கேன்டி இன்பா…” என்று உருகினான்.
அவளின் இதயமும் உருகி அவனைத் தேடி ஓடியது.
பெரும் தவிப்புடன் உதட்டை கடித்துக் கொண்டாள்.
“இனி நீங்க இப்படிப் பேசினால் நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன்…” அவன் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் சொன்னாள்.
“நீ என்கிட்ட பேசாமல் போனால்தான் இப்படிப் பேசுவேன். நீ என்கிட்ட பேசு. அப்பத்தான் இப்படிப் பேச மாட்டேன்…” என்று பேரம் பேசினான்.
அவளால் மட்டும் அவனிடம் பேசாமல் எப்படி இருக்க முடியும்? இந்த ஒரு வாரமாக அவனிடம் பேசாமல் அவள் தவித்த தவிப்பும், துடித்த துடிப்பும் அவளுக்கு மட்டும் தானே தெரியும்.
அதனால் அவனிடம் அவள் பேச ஆரம்பித்தாள். ஆனால், 'நானும் உன்னைக் காதலிக்கிறேன்' என்று அவள் சொல்லவில்லை.
அவள் சொல்லாமலே அவள் தன்னிடம் பேச ஆரம்பித்ததை வைத்து அவனே புரிந்து கொண்டான்.
Next thread





























