• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
751
Reaction score
4,562
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 5

கொடிமரத்தினருகே ஒருவன், தன்னைச் சுற்றி நின்றிருந்த கோவில் பணியாளர்களிடமும் நிர்வாகியிடமும் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, அவனின் முதுகை வெறித்தவளாய் அருகே சென்றாள் தாமரை.

அவளைக் கண்டதும், "வாங்க மேடம்" என்று இத்தனை நேரமாய்த் தன்னிடம் அநாகரிகமாகச் சண்டையிட்டிருந்த கோவில் பணியாளர்கள் சற்று பயத்துடன் அமைதியாகப் பேசுவதைக் கண்டு, யாரது என்று திரும்பிப் பார்த்த அந்தச் சண்டைக்காரன், தாமரையைக் கண்டு இன்ப அதிர்வுக்குள்ளானவனாய், 'அட நம்ம ராங்கி ராக்காயி! புடவைல ஆளே மிடுக்கா வேற மாதிரி இருக்காளே' கண்கள் மின்ன மனத்திற்குள் கூறிக் கொண்டான்.

பட்டு வேட்டிச் சட்டையில் மாதவனைக் கண்டவளின் பார்வை சற்று அதிர்ந்து, பின் மேலும் கீழுமாய் அவனது உடையை வலம் வந்து அவன் முகத்தில் வந்து நின்றது.

"நீங்க இங்கே எப்படி?" எனக் கேட்டான் மாதவன்.

"இது என் கண்ட்ரோல்ல வர்ற கோவில்! என்ன பிரச்சினை மாதவன் சார்" எனக் கேட்டாள். முந்தைய நாள் தேவையில்லாமல் அவன் மீது பழிப்போட்டு சண்டைப்போட்டிருந்ததால் இன்று சற்று அமைதியாகவே பேசினாள்.

"நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க. காலை பத்து மணி அபிஷேகத்துக்கு ஆன்லைன்ல புக் செஞ்சிட்டு வந்திருக்கேன். உள்ளே அனுமதிக்க மாட்டோம்னு சொல்றாங்க? எனக்கான நியாயத்தைத் தான் நான் கேட்கிறேன். அதுக்கு உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோனு தெனாவட்டா சொல்றாங்க. அதான் இங்கே புகாரளிக்கனு ஒட்டியிருந்த நம்பருக்கு போன் செஞ்சி கம்ப்ளைண்ட் பண்ணேன்" என்றான்.

"ஓ இவர் தான் ஆபிசுக்கு போன் செஞ்சி சொன்னதா?" மனத்தோடு எண்ணிக் கொண்டவளாய், "ஒரு நிமிஷம் இருங்க சார்! என்னனு பார்க்கிறேன்" என்றவள் கோவில் வளாகத்தில் இருந்த அலுவலகத்திற்கு அவனை அழைத்துச் சென்று அங்கிருந்த காத்திருப்பு இடத்தில் அமரச் சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவளாய் கோவில் அலுவலர் மற்றும் பணியாளர்களிடம் கோபமாக உரையாடுவது மெல்லிய சத்தமாக இவனது செவியில் விழுந்தது. அவளின் முகப்பாவனையிலும் நன்றாகத் தெரிந்தது.

கோவில் அலுவலகக் கணினியில் பார்த்தவளாய், மேலதிகமான கோபத்துடன் சத்தமாய், "என்னங்க சார்! ரெண்டு நாள்ல வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபராகிப் போகப் போறவ, இந்தக் கோவிலைக் கண்டுக்காம விட்டுடுவானு நினைச்சி உங்க கோல்மால் வேலை எல்லாம் திரும்பவும் செய்யத் தொடங்கிட்டீங்களா? முப்பது நபருக்கான அர்ச்சனை டிக்கெட்டும் ஒரே ஆளு வாங்கினதா காமிக்குது. இந்தத் தப்புக்கு நீங்க எல்லாரும் துணை போயிருக்கீங்க. அப்படித் தானே" என்றவளாய் அலுவலர் மற்றும் பிற பணியாளர்களையும் சேர்த்து அனைவரையும் முறைத்துப் பார்த்தாள்.

கண்டுபிடித்துவிட்டாளே என்று உள்ளுக்குள் நடுங்கினாலும் அமைதியாக அவளைப் பார்த்திருந்தார் அந்த அலுவலர்.

"இப்படி ஒரே ஏஜெண்ட்டுக்கு அதிக காசுக்கு நீங்க அபிஷேக டிக்கெட்டை விக்குறது தப்புன்னு மேலிடத்துக்கு நான் கம்ப்ளைண்ட் செஞ்சி ஆக்ஷன் எடுத்ததுலாம் மறந்து போச்சா? நான் இந்த ஊரை விட்டு போற கடைசி நாள் வரைக்கும் என்னால உங்க மேல ஆக்ஷன் எடுக்க முடியும். ஞாபகம் இருக்கட்டும்" அதட்டலாய் வந்த அவளது குரல் வெளியே நின்றிருந்த மாதவனின் செவியிலும் விழுந்தது.

இவள் கூறும் கோல்மால் வேலையாக என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்று தெளிவாகப் புரிந்தது இவனுக்கு.

நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்

நேர்த்தியாய் பருத்திப் புடவை உடுத்தி இன்று அவள் வந்த நேரத்தில் இருந்து இப்பொழுதைய அவளின் பேச்சு வரை பார்த்தவனுக்குப் பாரதியாரின் இந்தப் பாடல் வரிகள் தான் மனத்திற்குள் வந்து போனது.

'ராங்கிக்காரியா இருந்தாலும் அதுலயும் ஒரு நேர்மை இருக்கு இந்தப் பொண்ணுக்கிட்ட' என்று மனத்தில் மெச்சிக் கொண்டான்.

நேற்று தந்தை சொன்னது போல், அவளைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்று தோன்றியது‌. அவளின் இந்த மிடுக்கான தோற்றமும் நிமிர்வான பேச்சும் பிடிக்கவும் செய்தது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கே வந்தவள், "நீங்க உள்ளே போகலாம் மாதவன் சார். கொஞ்ச நேரத்துல அபிஷேகம் ஸ்டார்ட் ஆகிடும்" என்று அவனை அனுப்பி வைத்தாள்.

அந்த அலுவலகத்தின் கணக்குக் கோப்புகளை எல்லாம் கணனியில் பார்வையிட்டவளாய் தனது பணியைச் செய்து முடித்தவள், அங்கிருந்து கிளம்பும் சமயம் அபிஷேகம் முடிந்து வெளியே வந்தான் மாதவன்‌.

அலுவலக அறையின் வாயிலில் தாமரை நின்றிருப்பதைக் கண்டு புன்னகைத்தான். அவளும் இவனைப் பார்த்து புன்னகைத்து நிற்க, அவளருகே இவன் சென்று நின்றதும், "அபிஷேகம்லாம் நல்லபடியா பார்த்தாச்சா? எதுவும் பிரச்சினை இல்லையே?" எனக் கேட்டாள்.

'ராங்கி ராக்காயிக்கு அக்கறையாவும் பேச வருதே' என்று மனத்தோடு எண்ணியவாறு அவளைப் பார்த்து மென்னகையுடன், "எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது. ரொம்ப சந்தோஷம்" என்றான்.

இருவரின் உள்ளத்திலும் மற்றவர் மீது இப்பொழுது எவ்வித கோபங்களும் வெறுப்பும் இல்லாமல் உண்மையான அக்கறை மட்டுமே நிலைக்கொண்டிருந்த இத்தருணத்தில் வயது முதிர்ந்த காவி உடையுடுத்திய சடாமுடி சாமியார் ஒருவர் இவர்களின் அருகே வந்தார்.

"ரெண்டு பேரும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ பிறவி எடுத்தவங்க. நீங்க சேர்ந்து செய்ய வேண்டிய காரியம் உங்களுக்காகக் காத்திருக்கு! சீக்கிரம் ஆத்மநல்லூருக்குப் போங்க" என்றவராய் பைத்தியக்காரனைப் போல் ஏதேதோ பிதற்றியவாறு அங்கிருந்து அகன்றிருந்தார்.

'என்னது நாங்க சேர்ந்து வாழ பிறவி எடுத்தவங்களா? இந்த மாதவனே காசு கொடுத்து இந்தச் சாமியார இப்படிச் சொல்ல வச்சிருப்பாரோ? அப்படினாலும் மாதவனுக்கு நான் ஆத்மநல்லூருக்குப் போகப் போறது தெரியாது தானே' என்று அவளும்,

'ஆத்மநல்லூரா? அது எங்க இருக்கு? அங்கே ஏன் நாங்க சேர்ந்து போகனும்! நான் தாமரையைப் பொண்ணு பார்க்கத் தான் தங்கியிருக்கேன்னு தாமரைக்கே தெரியாதே! இதுல சேர்ந்து வாழ பிறந்திருக்கோம்னு தெரிஞ்ச மாதிரி சொல்றாரே? சும்மா வாய்க்கு வந்ததை உளறிட்டு போறாரோ?' என்று அவனும்,

வெவ்வேறு யோசனையுடன் செல்லும் அவரைப் பார்த்திருந்தனர்.

அவர் மீதிருந்த பார்வையை விலக்கி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, ஏதோ இனம்புரியாத ஈர்ப்பை இருவருக்குள்ளும் உணர்ந்தனர்.

காலம்காலமாக மனத்திற்கு நெருக்கமான உன்னத உறவாய் தாங்கள் வாழ்ந்தது போன்ற உணர்வுகள் இருவருக்குள்ளும் ஊற்றெடுக்க, மனத்தில் இருந்த பாரங்கள் அனைத்தும் பறந்து மனம் இறகு போல் பஞ்சாய் மாறி காதலில் திளைத்திருப்பது போல் உணர்ந்தவர்களின் பார்வை பின்னிக் கொள்ள, "கோதை" என அவனும், "கண்ணா" என அவளும் விளித்திருந்தனர்.

அந்நேரம் அவளை அழைத்துச் செல்ல அவளருகே வந்து நின்ற அரசாங்க வாகனத்தின் சத்தத்தில் தங்களை சூழ்ந்திருந்த மாயச்சிந்தனையிலிருந்து விடுபட்டவர்களாய் இயல்பு நிலைக்கு வந்தவர்களின் உடலும் உள்ளமும் நிலைக்கொள்ளாமல் தவிக்க, பார்வையைத் திருப்பிக் கொண்டனர்.

அவளைப் பார் பாரென உள்ளம் கூக்குரலிட, 'இப்ப எனக்கு என்னாச்சு? நான் ஏன் தாமரையை அப்படிக் கூப்பிட்டேன்' என்று யோசித்தவாறு தாமரையைப் பார்த்தவன் அவள் விழிகளில் தெரிந்த கலக்கத்தில், "என்னாயிற்று கோதை? ஏனிந்த கலக்கம்?" எனக் கேட்டான்.

அவன் பேசிய சொற்கள் எதுவும் அவனது மூளையில் பதியவேயில்லை. 'என்னாச்சு தாமரைக்கு' என்று தான் சிந்தித்திருந்தான் அவன். ஆனால் கேட்டிருந்தவளின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் பொங்கியது. கண்களைச் சிமிட்டி விழாமல் தடுத்தாள்.

தங்களை காண எத்தனை நாட்களாய் காத்திருந்தேன் என்று அவளின் ஆழ்மனதும், உன்னை எங்கெல்லாம் தேடினேன் என்று அவனது ஆழ்மனதும் பேசிக் கொள்ள,

இருவரது ஆன்மாக்களையும் தூண்டிவிட்டு சென்றிருந்த அந்தச் சடாமுடிச் சாமியார் எங்கோ அமர்ந்தவராய் தெய்வீகமாய் புன்னகைத்திருந்தார்.

அவனின் முகத்தில் பதிந்திருந்த அவளின் பார்வையை விலக்கியவளாய், "எங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி என்னை எங்கேயாவது பார்த்திருக்கீங்களா மாதவன்?" எனக் கேட்டாள்.

இயல்பு நிலைக்கு வந்திருந்தனர் இருவரும்.

முதல் முறையாக தன்னிடம் மென்மையாக பேசுகிறாள் என்றெண்ணிக் கொண்டவனாய் ஆச்சரியமாகிப் புருவத்தை உயர்த்திச் சிரித்தவன், "இல்லையே தாமரை. ஏன் அப்படிக் கேட்குறீங்க?" எனக் கேட்டான். இயல்பாய் பெயர் சொல்லிப் பேசியிருந்தனர் இருவரும்.

"இல்ல எனக்கு முதல் முதல்ல உங்களைப் பார்த்தப்ப... ஏன் இப்ப கூட... உங்களை எனக்கு ரொம்ப உரிமையானவரா நெருக்கமானவரா தெரியும்ங்கிற மாதிரி மனசுல தோணுது. அதான் அந்தப் பெரியவர் அப்படிச் சொன்னதும் கொஞ்சம் ஷாக்காகிடுச்சு" தன்னை மீறியே அவனிடம் இதனை உரைத்திருந்தாள் தாமரை.

'என்னை முதல் தடவைப் பார்க்கும் போதே இப்படித் தோணுச்சா? எனக்கு இப்ப தானே இப்படி ஃபீல் ஆகுது' என்றெண்ணியவனாய் இவன் நிற்க,

"மேடம்" என்று அழைத்தார் ஓட்டுனர்.

கைக்கடிகாரத்தில் நேரமாவதை பார்த்தவள், "நான் வரேன் மாதவன்" என்றவளாய் அரசாங்க வாகனத்தில் ஏறி அமர்ந்தவளை நோக்கி வந்தவன், "தேங்க்யூ தாமரை" மனதார உரைத்திருந்தான்.

"எதுக்கு?" என்று புரியாது இவள் விழிக்க, "உங்களால தான் இன்னிக்கு என் பேருல அபிஷேகத்தைச் செய்ய முடிஞ்சிது" என்றவன் கூறவும், அவளும் புன்னகைத்து தலை அசைத்தவளாய் வண்டியைக் கிளப்புமாறு ஓட்டுனரிடம் சைகை செய்தாள்.

இருவருக்கும் அதன் பிறகு இதனை பற்றிச் சிந்திக்கும் நேரமில்லாமல் தங்களது வேலையில் மூழ்கிப் போயினர்.

அன்று மாலை தாமரை அலுவலகத்தில் இருந்து வரவே தாமதமாகி விட, வக்கீல் ராஜாவிடம் ஆத்மநல்லூரைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பமே அமையவில்லை. இன்னும் நான்கு நாட்களில் ஆத்மநல்லூருக்குச் செல்ல வேண்டுமே என்று பதட்டமாய் இருந்தது அவளுக்கு‌.

இரவுணவை உண்டு விட்டு ஒன்பது மணியளவில் ராஜாவிற்கு அழைக்கலாம் என்ற எண்ணத்தில் மொட்டை மாடிக்குச் சென்றவள் அங்கு வானத்தை வெறித்தவாறு நின்றிருந்த மாதவனைக் கண்டு அப்படியே நின்று விட்டாள்.

மாதவனைப் பார்த்ததும் தான் இன்று அக்கோவிலில் நிகழ்ந்தவைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது அவளுக்கு‌.

அந்நேரம் வானத்தில் இருந்த நிலவைப் பார்த்தவனாய், "இந்த மனசை மாதிரி சிக்கலானது உலகத்துல எதுவுமே இருக்காதுல! நேத்து வரைக்கும் பிடிக்கலைனு சொன்ன பொண்ணை இன்னிக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி, என்னிக்குமே பிரியவே கூடாதுன்ற அளவுக்கு மனசு விரும்புதே! இதென்ன விந்தையா இருக்கு" என வாய் விட்டே புலம்பியிருந்தான் மாதவன்.

அவனின் பேச்சைக் கேட்டவளுக்கு, அவன் எந்தப் பெண்ணைக் கூறுகிறான்? தன்னையா கூறுகிறான் என்ற சந்தேகம் எழுந்தது. ஆயினும் அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று திண்ணமாக நம்பினாள்.

வேறு ஏதோ பெண்ணை விரும்புகிறான் போலும் என்று தோன்றிய நொடி நெஞ்சில் சுருக்கென வலிக்க, ஏன் தான் இவ்வாறு உணர்கிறேன் என்று புரியாமல், அங்கிருந்து திரும்பிச் சென்று விடலாம் என்று திரும்பிய போது, ஆளரவம் கேட்டு மாடியின் வாசற்படியை திரும்பிப் பார்த்த மாதவன், "ஹேய் தாமரை! வாங்க" அழகான சிரிப்புடன் அவளை அழைத்தான்.

முகம் வெளிற அவனைத் திரும்பிப் பார்த்தவளாய் சிநேகப் புன்னகையுடன் ஹாய் என்றவள் அவனருகே சென்று நின்றாள்.

"என் மேல உள்ள கோபமெல்லாம் போய்டுச்சா தாமரை?" மொட்டை மாடிச் சுவரில் முதுகைச் சாய்த்து கைகளைக் கட்டிக் கொண்டவனாய் அவளின் முகத்தைப் பார்த்தவாறு கேட்டிருந்தான் மாதவன்.

"உங்க மேல கோபப்பட நான் யாரு?" வேறெங்கோ பார்வையைப் பதித்தவளாய் அவள் கூறவும்,

"நாம ரெண்டு பேரும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ பிறந்தவங்கனு அந்தச் சாமியார் சொன்னாரே! மறந்து போச்சா?" என்று கேலியான சிரிப்புடன் அவன் கேட்க,

"ஓஹோ அப்ப நீங்க தான் அந்தச் சாமியாருக்கு காசு கொடுத்து அப்படிப் பேச வச்சீங்களா?" எனக் கேட்டிருந்தாள் தாமரை.
 

Latest threads

Top Bottom