கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
751
Reaction score
4,559
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 7
"நிஜமாவே ஆத்மநல்லூர்னு ஒரு ஊரு இருக்கா?" என்று மாதவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், ஆமெனத் தலையசைத்தாள் தாமரை.

"அந்த ஊருக்கு நீங்க டிரான்ஸ்ஃபர் ஆகிப் போகப் போறீங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா தாமரை?" என்றவன் கேட்டதற்கும் ஆமென அவள் தலையசைக்க,

"அப்புறமும் உங்களுக்கு எப்படி அந்தச் சாமியார் பேச்சுல நம்பிக்கை இல்லாம போச்சு. அப்படி ஒரு ஊரு இருக்கிறதா கூட எனக்குத் தெரியாது தாமரை. ஆனா அந்தச் சாமியாருக்கு நீங்க அந்த ஊருக்குப் போகப் போறது தெரிஞ்சிருக்கு" என்றவனாய் நெற்றிச் சுருங்க எதையோ யோசித்தவன்,

"அங்கே உங்களுக்கு எதுவும் பிரச்சினை வருமோ" என்று கூறும் போதே அவனது இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.

'இல்ல என் கோதைக்கு நான் எதுவும் ஆக விட மாட்டேன்' என்றவன் ஆழ்மனது பதைப்பதைப்புடன் முழங்க, உறுமும் உள்ளுணர்வை அடக்கவியலாதவனாய்,

"அந்தச் சாமியார் ஆத்மநல்லூருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே போகனும்னு சொன்னாரு! நானும் உங்க கூட வரவா?" எனக் கேட்டான்.

"இல்ல வேண்டாம் மாதவன். நான் என்னைப் பார்த்துப்பேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க" என்றவளாய் அங்கிருந்து சென்றிருந்தாள் தாமரை.

அவள் சென்றப்பின் தனது அறைக்குள் நுழைந்தவனின் மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது. எவ்வாறேனும் ஆத்மநல்லூருக்கு அவளுடன் தானும் சென்றுவிட வேண்டுமெனத் துடித்த ஆழ்மனத்தை அடக்கும் வழிவகைத் தெரியாதவனாய் தந்தைக்கு அழைத்தான்.

மறுபுறம் ரங்கராஜன் அழைப்பையேற்ற மறுநொடி, "அப்பா, எனக்கு இப்பவே தாமரையைக் கல்யாணம் செஞ்சி வைங்கப்பா" என்றான்.

திடீரென அழைத்து மகன் இவ்வாறு கூறியதில் முதலில் திகைத்துப் பின் வாய்விட்டுச் சிரித்திருந்தார்.

"என்னடா நேத்து வரைக்கும் அந்தப் பொண்ணைப் பிடிக்கலை அந்த வீட்டை விட்டே போறேன்னு சொல்லிட்டு இருந்தவன் இன்னிக்கு அந்தப் பொண்ணைக் கட்டி வைங்கனு சொல்லிட்டு இருக்க! திடீர்னு என்ன அதிசயம் நடந்துச்சு?" என்றவர் பேசியதை சமையலறையில் இருந்து கேட்டிருந்த வினோதினி,

"என்னது நம்ம பிள்ள கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டானா?" என்றவராய் மகிழ்வுடன் முகப்பறை நோக்கி ஓடோடி வந்தார்.

அவரின் கையில் இருந்த கைப்பேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டவராய், "மாதவா! நிஜமாவாடா சொல்ற" என்று சந்தோஷ மிகுதியுடன் கேட்டார்.

"ஆமா அம்மா! எனக்கு இப்பவே தாமரையைக் கல்யாணம் செஞ்சி வையுங்க" உறுதியான குரலில் உரைத்திருந்தான்.

மகனின் இந்தத் திடீர் பிடிவாதத்தில் கவலைக் கொண்டவராய், "அவசரப்படாதடா மாதவா" என்று ரங்கராஜன் கூறவும், "ஏங்க நம்ம பையனுக்கு இளமை ஊஞ்சலாடுதா என்ன? அவசரப்படாதனு சொல்லிட்டு இருக்கீங்க" என்றவராய் கணவரை முறைத்தார் வினோதினி.

"நான் இப்பவே விமலாக்கிட்ட பேசி அவ பொண்ணுக்கிட்ட பேச சொல்றேன்" வினோதினி கூறவும்,

"நானே அந்தப் பொண்ணுக்கிட்ட பேசிட்டேன்மா" என்றான் மாதவன்.

"என்னது நீயே பேசிட்டியா?" என்று பெருத்த ஆச்சரியத்துடன் ரங்கராஜன் வினோதினி இருவரும் ஒருங்கே கேட்டிருந்தனர்.

"டேய் உனக்கு என்னாச்சு திடீர்னு" என்று வினோதினி வியப்புடன் கேட்க, காலை முதல் இப்பொழுது வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் உரைத்திருந்தான் மாதவன்.

ரங்கராஜன் வினோதினி இருவருக்குமே இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"எனக்கு இப்ப தாமரை கூடப் போயாகனும். ஆனா அவ கல்யாணம் செய்யாம என்னைக் கூடக் கூட்டிட்டுப் போக மாட்டா! அவளுக்கு ஏதோ பிரச்சனை வரப் போகுதுனு என் ஆழ்மனசு சொல்லுதுப்பா. அவளுக்கு எதுவும் ஆகுறதுக்கு முன்னாடி, அவளை நான் காப்பாத்தியாகனும். அதுக்கு எங்க கல்யாணம் சீக்கிரமா நடக்கனும். ப்ளீஸ்ப்பா அவகிட்ட பேசுங்களேன்"

மகனின் இந்தக் கெஞ்சலான பேச்சில் அவரின் மனம் பரிதவிக்க, "சரிடா மாதவா! அப்பா உனக்காகக் கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுவேன். ஆனா இது உடனே நடக்கக் கூடிய காரியம் இல்லயேடா" என்றவராய் யோசித்தவர், "அப்பா ஒரு ஐடியா சொல்றேன்" என்றவர் தனது எண்ணத்தைப் பகிர்ந்தார்.

"நீ தாமரை கூடப் போகுறதுக்குத் தானே அவளோட ஒப்புதல் வேணும்! நீ தனியா வேற பஸ்ல அந்த ஊருக்குப் போ மாதவா! அங்கே அந்தப் பொண்ணு தங்கியிருக்க இடத்துக்குப் பக்கத்துல தங்கிக்கோ! உன்னோட கண்காணிப்புல அந்தப் பொண்ணை வச்சிக்கோ" என்றவர் சொன்னதும்,

"வாவ் சூப்பர் ஐடியா அப்பா! என் அப்பானா அப்பா தான்" என்றவன் கூறிக் கொண்டிருக்க, "என்னது அந்தப் பொண்ணு பின்னாடிப் போகப் போறியா? அப்ப உன் வேலை என்னாகுறது?" என்று கத்தியிருந்தார் வினோதினி.

"அங்க போய் வர்க் ஃப்ரம் ஹோம் பார்த்துக்கிறேன். ஆபிஸ்ல ஒத்துக்கலைனா கொஞ்ச நாளைக்கு லாங் லீவ் எடுத்துக்கிறேன். இதனால என் வேலைக்கு எதுவும் பிரச்சினை வராத அளவுக்கு நான் பார்த்துக்கிறேன்மா. நீங்க கவலைப்படாதீங்க" என்றான்.

"எப்படியோ உன் கல்யாணம் நல்லபடியா நடந்தா அது போதும்டா எனக்கு" என்று பெருமூச்சுடன் வினோதினி கூற,

"கண்டிப்பாக என் கல்யாணம் தாமரையோட நடக்கும்மா" என்று உத்தரவாதம் கொடுத்தவனாய் இணைப்பைத் துண்டித்தவன் ஆத்மநல்லூருக்குப் பயணிக்கத் தனது பயணப்பொதியைத் தயார் செய்யத் தொடங்கினான்.

ரங்கராஜன் இணைப்பைத் துண்டித்ததும், "என்னங்க இவன் இப்படிச் சொல்றான்? நிஜமாவே அந்தப் பொண்ணுக்கு எதுவும் பிரச்சினை வருமா அந்த ஊருல" என்று பயத்துடன் கேட்டிருந்தார் வினோதினி.

ரங்கராஜன் எதையோ சிந்தித்தவராய், "வினோ, தாமரையோட ஜாதகம் உன்கிட்ட இருக்கா?" எனக் கேட்டார்.

"இருக்கே" என்றவர் சொன்னதும்,

"நாளைக்கே நம்ம ஜோசியர்கிட்ட போய் அந்தப் பொண்ணோட ஜாதகத்தைப் பார்ப்போம்" என்றார்.

அதே நேரம் அங்கே ஆத்மநல்லூரின் அருகே சோலைமலையில் இருந்த தங்கும் விடுதியில் தங்கியிருந்த சக்தீஸ்வரனுக்கு அழைத்திருந்தான் ராஜா.

"சக்தி, அழகிய மாதவப் பெருமாள் கோவில் ஆபிசர் இறந்துட்டாராம்" என்று ராஜா சொன்னதும்,

"என்ன? எப்படி?" அதிர்ச்சியுடன் கேட்டிருந்தான் சக்தீஸ்வரன்.

"நாளைக்குக் கோவில் திருவிழா தொடங்குதாமே! அதுக்கு ஏற்பாட்டெல்லாம் எப்படிப் போகுதுனு பார்க்க கோவிலுக்குப் போயிருக்காரு. அங்கே பாம்பு கொத்தி இறந்துட்டாராம்" என்றான்‌.

"என்ன ராஜா இது! இந்த இரண்டு வருஷத்துல அஞ்சு ஆபிசர்ஸ் மாறியிருக்காங்க. அதுல இவரோட சேர்த்து மூனு பேரு இறந்திருக்காங்க. ஒன்னு ஆபிசர் சாகுறாங்க இல்லனா தர்மகர்த்தா இறக்குறாங்க. நீங்களும் நானும் இங்கே விசாரிச்சு பார்த்த வரைக்கும் கோவில்ல எல்லாச் சிலைகளும் அந்தந்த இடத்துல பத்திரமா தான் இருக்கு. வேறென்ன சாமிக்குத்தம் இருக்கும் இங்க?" எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.

"எனக்கும் தெரியலை சக்தி! திருவிழா நடக்க இருக்கிறதால உடனே புது ஆபிசரை அறநிலையத் துறைலருந்து நியமிச்சிருக்காங்கனு கேள்விப்பட்டேன்" என்றான் ராஜா.

"ஓ இதைக் கண்டுபிடிச்சி எப்படியாவது நாம சரி செஞ்சாகனும் ராஜா. இல்லனா அடுத்து வர ஆபிசருக்கும் ஏதாவது பிரச்சினை வர வாய்ப்பிருக்கு. இதுக்கு மேலயும் இங்கே எந்த உயிர்பலியும் நடக்காம பார்த்துக்கனும்" பெருமூச்சுடன் சக்தீஸ்வரன் சொல்ல,

"நீங்க அங்கே தானே இருக்கீங்க சக்தி. அந்த அறநிலையத் துறை ஆபிசரை நேர்லயே போய்ப் பார்த்துப் பேசி எச்சரிக்கை செய்யுங்க சக்தி! அவங்க மூலமாக நமக்கு எதுவும் க்ளூ கிடைக்கலாம்" என்றான் ராஜா.

"ஹ்ம்ம் நல்ல ஐடியா ராஜா. அவங்க வந்ததும் நான் நேர்ல போய்ப் பார்க்கிறேன்" என்றவனாய் அழைப்பைத் துண்டித்தவன் சென்னையில் இருக்கும் இளவஞ்சிக்கு அழைத்து ராஜா கூறிய செய்தியை உரைத்திருந்தான்.

"அன்னிக்கு அந்தப் பாட்டி சொன்ன மாதிரி நாம நம்ம கடமையைச் செய்யாம விட்டது தான் நமக்குக் குழந்தை பாக்கியத்துல பிரச்சினை வர காரணமோனு தோணுது சக்தி. நாம சரிவரச் செஞ்சிருந்தா இந்த உயிர் இழப்பைத் தடுத்திருக்கலாம் தானேனு ரொம்பக் கில்டியா ஃபீல் ஆகுதுப்பா" கவலையுடன் இளவஞ்சி கூறவும்,

"ஆனா இங்கே சிவலிங்கத்தை நிறுவின பிறகு நமக்கு இந்த ஊருக்கே வர முடியாத சூழ்நிலை ஆகிப்போச்சே வஞ்சி. நம்ம பிசினஸ்ல எவ்ளோ பெரிய லாஸ். உன்னோட வேலையே போகுற அளவுக்குப் பிரச்சினை வந்துச்சே! அதோட இரண்டு நேரம் குழந்தை உண்டாகி கலைஞ்சி உன் உடம்புல நடந்த மாற்றங்கள் அதுல நம்ம மனசுல விழுந்த அடி! ஆனாலும் இங்கே சிவலிங்கம் பத்திரமா இருக்கானு அங்கிருக்கப் பூக்காரம்மாக்கிட்டயும் ராஜாகிட்டயும் அப்பப்ப விசாரிச்சிட்டு தானே இருந்தோம். நம்ம பிசினஸ், உன் வேலை, உன் உடல்நிலைனு எல்லாத்தையும் சரி செஞ்சி நாம நார்மல் வாழ்க்கைக்குத் திரும்புறதுக்குள்ள இங்கே இவ்வளோ நடந்து போச்சு" என்றவனாய் பெருமூச்சு விட்டவன்,

"நம்மளோட சந்தோஷமான சுகமான வாழ்வே இந்தக் கோவிலைச் சார்ந்து தான் இருக்குனு அந்தப் பாட்டி சொன்னதுல தெளிவா புரிஞ்சிடுச்சு வஞ்சி. இனி இங்க என்ன பிரச்சினைனு கண்டுபிடிச்சி அதை எப்படிச் சரி செய்றதுனு பார்ப்போம் வஞ்சி. இங்க இருக்கப் பிரச்சினையைச் சரி செஞ்சா நம்மளோட பிரச்சினைகளும் கண்டிப்பாகச் சரியாகிடும்னு நம்புறேன்" என்றவனாய் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

அன்றிரவு பதினொரு மணியளவில் மாதவனின் ஈருருளியின் பின்னிருக்கையில், அவனை முறைத்தவாறு கோபத்துடன் அமர்ந்து பயணித்திருந்தாள் தாமரை.

'சரியான காட்டான் கருப்பசாமி! நான் தனியா போய்க்கிறேன்னு எவ்ளோ சொல்லியும் கேட்காம என் அம்மாக்கிட்ட பேசி என்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு போறதைப்‌பாரு!' மனத்திற்குள்ளாகவே அவனை வசைப்பாடியவாறு அமர்ந்திருந்தாள் தாமரை.

"ஆமா நீங்க எதுக்கு இவ்வளோ பெரிய பையைத் தூக்கிட்டு வந்திருக்கீங்க?" அவன் ஈருருளியில் தனக்கு முன்னே வைத்திருந்த தோள்பையை எட்டிப் பார்த்தவளாய் கேட்டிருந்தாள் தாமரை.

தனது தாய் வினோதினி மூலமாக அவளது தாய் விமலாவிடம் தானும் அவளுடன் ஆத்மநல்லூருக்குச் செல்லப் போவதாகச் செய்தி பகிர்ந்திருந்தான் மாதவன். ஆனால் தாமரையிடம் இதனைக் கூற வேண்டாமெனவும் சொல்லியிருந்தான்.

அதனால் தாமரை திடீரென இவ்வாறு கேட்டதும் என்ன கூறவெனத் தெரியாது விழித்தவனாய், "இல்லங்க எனக்கு அவசரமா பெங்களூர்ல ஒரு வேலை வந்துடுச்சு. அதான் உங்களைப் பஸ் ஏத்தி விட்டுட்டு நானும் அப்படியே பஸ் ஏறிப் போகலாம்னு எடுத்துட்டு வந்தேன்" வாய்க்கு வந்ததைக் கூறினான்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டவனாய், "வெயிட் பண்ணுங்க தாமரை. நான் டூவீலர் பார்க் செஞ்சிட்டு வரேன்" என்றவனாய் உள்ளே செல்ல, இவள் பேருந்து நிலையக் கூட்டத்திற்குள் சென்று மறைந்திருந்தாள்.

'யாரு இவரை இப்ப வெத்தலைப் பாக்கு வச்சி அழைச்சா! அந்தாளைப் பார்த்தாலே மனசுக்குள்ள ஒரு மாதிரி நெகிழ்ச்சியான உணர்வு பொங்கி வருது. அவர் மேல அன்பு பொங்கும் போது மனசு இதமாகவும் இருக்கு. ஏன் இப்படி இந்தாளைப் பார்க்கும் போது வருதுன்னு புரியலை' என்று தனக்குள்ளேயே புலம்பியவளாய் இணையத்தில் முன்பதிவு செய்திருந்த பேருந்தைக் கண்டுபிடித்து அதில் ஏறி அமர்ந்தாள்.

ஈருருளியைத் தரிப்பிடத்தில் விட்டு வந்தவனோ பேருந்து நிலையம் முழுவதும் தேடி அவளைத் தேடி நொந்தவனாய் வேறு பேருந்தில் ஏறி ஆத்மநல்லூரை நோக்கிப் பயணித்திருந்தான்.

இருவரின் வரவையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது ஆத்மநல்லூர்.
 

Latest threads

Top Bottom